தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய பிஜேபி அரசு கீழடி : உண்மையான அகழாய்வு அறிக்கையை சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு மாற்றம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன்.18- கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராம கிருஷ்ணன் நொய்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அமர்நாத் ராமகிருஷ்ணன்

‘கீழடி’ –- தமிழர்களின் நாகரிகத்தின் தொன்மையையும், நகர அமைப்பை யும் உலகறிய செய்தது. இதனை வெளிக்கொண்டு வந்ததற்கு தொல்லியல் அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன் மூலக் காரணமாக இருந்தார்.

அந்த வகையில் கீழடி தொடர்பான ஆய்வறிக்கையை கடந்த 2023-ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடம் அவர் சமர்ப்பித்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அரசு கீழடி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி சமீபத்தில்தான் திருப்பி அனுப்பி இருந்தது.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதேபோல், எதிர்ப்புத் தெரிவித்து திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்துகள் கூறியிருந்தனர்.

நொய்டாவுக்கு மாற்றம்

இதற்கிடையே கீழடி ஆய்வறிக்கையை சமர்ப்பித்து இருந்த அமர்நாத் ராம கிருஷ்ணன், கடந்த 2024-ஆம் ஆண்டு ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் வரக்கூடிய பண்டைய கால ஆய்வு, தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டு அங்கு பணியாற்றி வந்தார்.

கீழடி ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப் பட்ட விவகாரம் பரபரப்பாக்க பேசப்பட்டு வரும் சூழலில், தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை இடமாற்றம் செய்து ஒன்றிய தொல்லியல் ஆய்வுத் துறை திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, பண்டைய கால ஆய்வு, தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் தேசிய தொல்லியல் மற்றும் நினைவுச்சின்னங்கள் அமைப்பின் இயக்குநராக மாற்றப்பட்டிருக்கிறார். அமர்நாத் கவனித்து வந்த பண்டைய கால ஆய்வுத்துறை, அகழாய்வுத்துறையின் இயக்குநராக இருக்கும் எச்.ஏ.நாயக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

சு.வெங்கடேசன்
வலைத்தளப் பதிவு

தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், ‘தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் இப்போது மீண்டும் இடமாற்றம். கண்டறி யப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார். அமர்நாத் ராமகிருஷ்ணன். ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய முறையில் பதிலளிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *