மதுரையில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விதித்துள்ள 62 நிபந்தனைகளை மாற்றி அமைக்கக் கோரி இந்து முன்னணி சார்பிலும், அறுபடை வீடுகளை அமைக்கக் கூடாது என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை நீதிபதி பி. புகழேந்தி விசாரித்தார். அவர் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:
‘இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாய்ப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் மதவாதம் மற்றும் நல்லிணக்கத்தைத் பாதிப்பதாக இருந்தால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்’’
‘‘இந்த மாநாடு அரசியலுக்காக நடத்தப்படுகிறது என்று இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத அமைப்புகளை அரசிய லுக்காகப் பயன்படுத்தினால் மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம்’’
‘‘இந்த மாநாட்டால் 69 நல்லிணக்கம் சீர்குலைய வாய்ப்பு இருப்பதாக அரசுத் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக திருப்பரங் குன்றம் ஆர்ப்பாட்டத்தில் சிலரின் பேச்சுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எனவே இந்த மாநாட்டில் 69 நல்லிணக்கம் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று நீதிபதி புகழேந்தி உத்தர விட்டுள்ளார்.
சர்வசக்தி வாய்ந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கத்தில் கடவுளுக்காகப் பிரச்சாரம் செய்வதும், மாநாடு நடத்துவதும் அசல் முரண்பாடாகும்.
‘‘மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமேயல்லாமல் அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று யாரும் சொல்லி விட முடியாது’’ என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 8.10.1933).
கடவுள் பெயரைச் சொல்லி மாநாடு நடத்துவது, பிரச்சாரம் செய்வது எதற்காக என்பதை தந்தை பெரியார் கருத்து முறையில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
‘‘‘கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்தவர், அய்ம்புலனுக்கும் தெரியாதவர்’ என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, முருகன் என்றும், சுப்பிரமணியன் என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும், பிர்மா என்றும், விநாயகன் என்றும் அவரவர் விருப்பப்படி உருவங்களைச் செதுக்கி கோயிக்குள் வைப்பதும், கடவுள்களுக்குப் பெண்டாட்டிகள் உண்டு, வைப்பாட்டிகள் உண்டு, பிள்ளைக் குட்டிகள் உண்டென்று புராணங்களையும், தலப் புராணங்களை எழுதி வைப்பதும், உபந்நியாசம் செய்வதும் முரண்பாட்டின் மொத்தக் குத்தகையல்லாமல் வேறு என்னவாம்?
மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல, வேறு எந்தக் காரணங்களுக்காகவும் சிந்தப்பட்ட தில்லை என்பது தான் வரலாறு.
ஆன்மிக சிகாமணிக் கொழுந்தாகிய சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் – ‘சக்ரவர்த்தி திருமகன்’’ ‘வியாசர் விருந்து’ என்ற நூல்களை எழுதியவரும் அவரே!
அவரே மனம் நொந்து கூறுகிறார்: ‘‘நம் நாட்டில் மற்றவர்கள் சண்டைகளைக் காட்டிலும், பக்தர்கள் சண்டையே அதிகம்; என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைகள்தான் அதிகம்’’ (முதலமைச்சர் ராஜாஜி சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் 15.4.1953).
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மதங்களும், அவை ஊட்டும் பக்தியும் மனித சமூகத்தில் எத்தகைய கேடுகளை விளைவிக்கின்றன என்பதை எளிதிற் புரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால், காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறி, முஸ்லீம்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்லுவதும், பள்ளி வாசல்களுக்கு முன்னர் திரண்டு எழுந்து, ஆபாசமாகக் கூச்சல் போடுவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சினையைக் கையில் எடுத்து, அதில் தோல்வி கண்ட நிலையில் தான், மதுரையில் முருகன் பெயரால் இப்படியொரு மாநாட்டைக் கூட்டுகிறார்கள் என்பது எல்லோருக்கும் பரவலாகத் தெரியவரும் உண்மையாகும்.
அதுவும் மதுரைக்கு சில நாட்களுக்குமுன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமிர்ஷா வந்து சென்ற பிறகு – இந்த மாநாடு கூட்டப்படுகிறது என்பதைக் கவனித்தால், கண்டிப்பாக அரசியல் நோக்கத்துக்காகவே இந்த மாநாடு கூட்டப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
சங்பரிவார்களால் பல மாநிலங்களிலும் மதக் கலவரங்கள் நடத்தப்படுவது வாடிக்கையானதுதான். மதத்தைக் காட்டி, மக்களைத் துண்டாடி அரசியல் நடத்துவது என்பது அவர்களின் அணுகுமுறையே!
நீதிபதி கவனமாகவே உத்தரவைப் பிறப்பித்திருக் கிறார். அது எந்த அளவுக்கு மதித்துக் காப்பாற்றப்படுகிறது என்பதைப் பார்ப்போம்!
மதப் பிரச்சாரம் செய்ய உரிமை இருப்பது போலவே, மத எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு என்பதையும் நினைவூட்டுகிறோம்.
‘கடவுளை மற – மனிதனை நினை!’ என்பது தந்தை பெரியார் மானுடத்துக்கு வழங்கிய அருமருந்து!
சிந்திப்பீர்!