ரஷ்ய வீழ்ச்சிக்குக் காரணம் – தத்துவத்தைக் கோட்டை விட்டதுதான்!
நமக்கு மட்டும்தான், தத்துவமும் பலமாக இருக்கிறது ஆசிரியராக 92 வயதில்;
ஆட்சித் தலைவராக, மு.க.ஸ்டாலின் பலமாக இருக்கிறார் 72 வயதில்!
தலைவரும், தத்துவமும் இணைந்திருக்கின்ற இந்த இயக்கத்தை
எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது; வீழ்த்தவும் விட்டுவிட மாட்டோம்!
சூலூர், ஜூன் 17 எந்த ரஷ்ய மண்ணில், லெனின் அரசாங்கத்தை உருவாக்கினாரோ, அதே மண்ணில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. ஏனென்றால், தலைவர்கள் வருகிறார்கள், தத்துவத்தை விட்டு விட்டார்கள். ஆனால், நமக்கு மட்டும்தான், தத்துவமும் பலமாக இருக்கிறது. 92 வயதில்; தலைவர், 72 வயதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமாக இருக்கிறார். எனவே, தலைவரும், தத்துவமும் இணைந்திருக்கின்ற இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது; வீழ்த்தக் கூடாது – வீழ்த்தவும் விட்டுவிட மாட்டோம் என்கின்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்வோம். என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள்.
சூலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்!
14.6.2025 அன்று மாலை கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சூலூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான ஆ.இராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஆசிரியருக்கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும் என்னுடைய நன்றி!
சுயமரியாதை இயக்கம் தோன்றி, நூறாண்டுகள் ஆவதையும், ‘குடிஅரசு’ 1925 ஆம் ஆண்டு இதழ் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழாக்களாக, கருத்தரங்கங்களாகக் கொண்டாடவேண்டும் என்கின்ற முடிவினை எடுத்து, திராவிடர் கழகம் நடத்துகின்ற அப்படிப்பட்ட விழாவில், ‘‘உலகத் தலைவர் பெரியார்’’ என்ற புத்தகத்தையும், ‘‘இந்துத்துவா வேரும், விஷமும்’’ என்ற புத்தகத்தையும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் தொகுத்து, அதனை வெளியிடுகின்ற நல்வாய்ப்பினை எனக்கு வழங்கியமைக்காக ஆசிரிய ருக்கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும் என்னுடைய நன்றியை, வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னுடைய வாழ்வில் வசந்தகாலம்!
திராவிடர் கழகத்தின் மாணவர் அணியில், இப்போது இருப்பதுபோன்று கைப்பேசி இல்லாத காலத்தில், இப்போது இருப்பதுபோன்று நவீன கழிப்பறைகள் இல்லாத காலத்தில், நான்கு நாள்கள், அய்ந்து நாள்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டு, எடுத்துக் குவித்த குறிப்புகளையெல்லாம் பத்திரமாகப் பாதுகாத்து, அந்தக் குறிப்பின் அடிப்படையில் புத்தகங்களைத் தேடி அலைந்த காலம் – அந்தக் காலம் என்னுடைய வாழ்வில் வசந்தகாலம் என்று இப்போதும் நான் நம்புகின்றவன், பெருமை கொள்கின்றவன்.
‘‘பெரியாரோடு இருந்த நாள்கள்தான் எனக்கு வசந்த காலம்’’ என்றார் அண்ணா!
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள், முதலமைச்சராக ஆன பிறகுகூட சொன்னார், ‘‘நான் இன்றைக்குப் பணிச் சுமை – பார்ப்பதற்கு முதலமைச்சராக உங்களுக்குப் பொலிவோடும், பளபளப்போடும் தெரி கின்றேன். ஆனால், என்மீது இருக்கின்ற சுமை என்னை அழுத்துகின்றது. எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருக்குமானால், இருப்பதாகக் கருதினால், அது தந்தை பெரியாரோடு சுற்றுப்பயணங்களில் கலந்துகொண்டு, அவரோடு இருந்த நாள்கள்தான் வசந்த காலம்’’ என்று சொல்லுவார்.
அந்த வசந்த காலத்திற்கு முன்னால், வேறு எந்தப் பதவியும் பெரிதல்ல எனக்கு!
அப்படி நாடாளுமன்ற உறுப்பினராக, ஒன்றிய இணையமைச்சராக, ஒன்றிய கேபினெட் அமைச்சராக, ஏறத்தாழ 50 நாடுகளுக்குச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பு களைப் பெற்றிருந்தாலும், பெரிய கருத்தரங்கத்தில் அய்.நா. அவையில் பேசியிருந்தாலும்கூட, நான் இப்போதும் எண்ணிப் பார்க்கின்றேன், எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருக்கிறது என்றால், அந்தப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தரையில் அமர்ந்து, வெள்ளைத் தாளில் எழுதிக் குவித்த நாள்களை நான் இந்த மேடையிலே எண்ணிப் பார்த்து, அந்த இராசாதான், இன்றைக்கு ஆசிரியர் அவர்கள் தொகுத்த இரண்டு நூல்களையும் வெளியிடுகின்ற வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றேன் என்று சொல்லுகின்றபோது, நான் கடந்து வந்த பாதை, பெற்றிருக்கின்ற பட்டங்கள், பெற்ற பதவிகள், ஒருவேளை இனிமேலும் ஏதாவது தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எனக்கு வேறு பதவி அளிப்பதாக இருந்தால், அந்தப் பதவியையும் சேர்த்துச் சொல்கிறேன் – இவையெல்லாம் அந்த வசந்த காலத்திற்கு முன்னால், மிகச் சாதாரணமாக, சிறியதாகத் தெரிகின்றன என்பதை நான் மிகுந்த பெருமிதத்தோடு குறிப்பிட விரும்புகின்றேன்.
அதைவிட பெருமை, இந்த நூறாண்டுகால சுயமரியாதை இயக்கத்தில், கொள்கைத் தலைவர்கள், எப்படியெல்லாம் இன்னமும் நமக்கு வந்து சேருகிறார்கள்.
ஆசிரியரைப் பார்த்து மலைத்துப் போகிறேன்!
ஆசிரியருக்கு 92 வயது. இந்த 92 வயதில், அவர் படியேறுகிறபோது, நான் மலைத்துப் போகிறேன். திடலுக்குப் போனால், எங்களை அழைத்துக்கொண்டு வேகமாக ஏறுகிறார்.
தந்தை பெரியார் நடப்பதைப்போல, நடக்கிறாரா என்று பார்த்தால், தந்தை பெரியார் அவர்கள்கூட 92 வயதில் நடக்கவில்லை; இவர் நடக்கிறார்.
தந்தை பெரியார்தான் ஒருமுறை திருச்சியில் நடந்த பிறந்த நாள் விழாவில் சொன்னார், ‘‘திராவிடர் கழகத்தினுடைய தலைவர்களில் ஒருவர் பேசி விட்டார். அண்ணா ஆட்சிக்கு வந்துவிட்டார்; உங்களுடைய கொள்கைகள் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கும் வயதாகிவிட்டது. எனவே, நீங்கள் இனிமேல் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்’’ என்று தவறுதலாகப் பேசிவிட்டார்.
இழிவு தீருகின்ற வரை நான் போராடுவேன், நான் பேசுவேன், நான் எழுதுவேன்! – பெரியார்
அதற்குப் பிறகு பேசிய தந்தை பெரியார் அவர்கள், ‘‘காலையில் இரண்டு இட்லி சாப்பிடுகிறேன்; 11 மணிக்கு ஒரு தேநீர் குடிக்கின்றேன்; மதிய வேளைக்கு பகல் உணவாக புலால் உணவைக் கையளவிற்கு எடுத்துக் கொள்கின்றேன். இராத்திரிக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிடுகின்றேன். வேட்டி கட்டியிருக்கிறேன்; லுங்கிக் கட்டியிருக்கிறேன்; சட்டை போட்டிருக்கிறேன். இவைகளுக்காக எங்கோ ஒரு சூத்திரன் ஒரு தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் உழைத்துக் கொண்டிருக்கின்றான்; அவனுடைய இழிவு தீருகின்ற வரை நான் போராடுவேன், நான் பேசுவேன், நான் எழுதுவேன்’’ என்று சொன்னார்.
தந்தை பெரியாருக்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அந்தப் பணியை இறுதிவரையில் செய்து வந்தார்.
ஆற்றல்மிகு தலைவர் ஆசிரியர்!
அதற்குப் பிறகு 92 வயதில், பெரியாரைவிட இன்னும் வேகமாக நடக்கக்கூடிய, எழுதக் கூடிய, பேசக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கின்ற – வெளிநாட்டிற்குச் செல்லாதீர்கள், எங்களுக்குப் பயமாக இருக்கின்றது என்று சொன்னாலும்கூட, சிரித்து விட்டு, ‘‘ஆஸ்திரேலியாவிற்கு டிசம்பர் மாதம் போகிறேன், நீங்களும் வாருங்கள்’’ என்று எங்களைக் கூப்பிடுகின்ற ஆற்றல்மிகு தலைவர் ஆசிரியர்.
அதைப் பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது; ஆனால், அதேநேரத்தில், எங்களுக்குப் பெருமையாக இருக்கின்றது.
உங்களுக்கும் நூற்றாண்டு விழா நடக்கவேண்டும்; அதிலேயும்
நான் உரையாற்றவேண்டும்!
நான் உரையாற்றவேண்டும்!
இந்த நூறாண்டு கால சுயமரியாதை இயக்க விழாவில், நாங்கள் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம், உங்களுக்கும் நூற்றாண்டு விழா நடக்கவேண்டும்; அதிலேயும் நான் உரையாற்றவேண்டும் என்கின்ற என்னுடைய விருப்பத்தை, விண்ணப்பத்தை உங்களின் சார்பில் நான் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
நம்முடைய கவிஞர் அவர்கள் இங்கே சொன்னார், 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியிருந்தாலும் தந்தை பெரியார், அவருக்குள் ஒரு சுயமரியாதை உணர்வு அதற்கு முன்பே இருந்தி ருக்கின்றது. அவரைக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறார்கள்.
பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றபோது அவர்கள் பெற்றோர் இட்ட ஆணை, ‘‘எல்லோருடைய வீட்டிலும் தண்ணீர் வாங்கிக் குடிக்கக்கூடாது; உங்கள் வாத்தியார் வீட்டில் வேண்டுமானால் தண்ணீர் வாங்கிக் குடி’’ என்று சொல்கிறார்கள்.
அவர் உயர் ஜாதிக்காரர். அவருடைய வீட்டிற்குச் சென்று தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றார் பெரியார்.
வீட்டிலிருந்து வந்த அம்மையார், ஒரு வெண்கல சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு, இவரைக் குடிக்கச் சொல்லிவிட்டு, இவர் குடித்து முடித்த வுடன், அதைக் கழுவி எடுத்துக்கொண்டு உள்ளே போகிறார்.
பிறகு ஒரு செட்டியார் வீட்டில் போய் தண்ணீர் கேட்கிறார்; அந்த வீட்டிலிருக்கும் அம்மையார், ‘‘நான் தண்ணீர் கொடுக்கிறேன்; ஆனால், எங்கள் வீட்டில் தண்ணீர் குடித்தால், நீங்கள் நாயக்கர் சமுதாயம், உங்கள் வீட்டில் தவறாக நினைப்பார்கள்’’ என்று சொல்கிறார்.
அன்றைக்கு அப்படியிருந்த படி நிலை. இன்றைக்கு நாமெல்லாம் பி.சி., எஸ்.சி., என்று வெவ்வேறு நிலைகளில் வந்துவிட்டோம்.
அன்றைக்கு நாய்க்கர் சமுதாயத்திற்கு, செட்டியார் சமுதாயம் படிநிலைக்குக் கீழ் இருந்திருக்கின்றது. எங்கள் வீட்டில் தண்ணீர் குடித்தால் உங்கள் வீட்டில் திட்டுவார்கள் என்று சொல்கிறார்கள்.
செட்டியார் வீட்டுத் தண்ணீராக இருந்தால் என்ன? அய்யர் வீட்டுத் தண்ணீராக இருந்தால் என்ன?
இதையெல்லாம் பார்த்து, பார்த்து சிந்தித்தார் பெரியார். தண்ணீர் ஒன்றுதானே, அது செட்டியார் வீட்டுத் தண்ணீராக இருந்தால் என்ன? அய்யர் வீட்டுத் தண்ணீ ராக இருந்தால் என்ன?
அதனை உடைக்கவேண்டும் என்பதற்காகவே, வேண்டுமென்றே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தவர் தந்தை பெரியார் அவர்கள், இளமையாக இருக்கும்போதே!
இப்படி என்ன கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கி றதோ, அந்தக் கட்டுப்பாடுகளையெல்லாம் உடைக்க வேண்டும் என்கின்ற எண்ணம், அவருக்கு அப்போதே இருந்திருக்கின்றது.
அதைவிட இன்னொரு செய்தி – அன்னை நாகம்மையாரை திருமணம் செய்துகொண்ட பிறகு, சம்பிரதாயத்திற்காக, சமுதாயத்திற்காக, உறவு முறைகளையெல்லாம் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக தாலி கட்டினார்.
எதையும் எனக்காக செய்ததில்லை;
இந்த சமுதாயத்திற்காகத்தான்!
இந்த சமுதாயத்திற்காகத்தான்!
அந்தத் தாலியைக் கழற்றுவதற்காக, அவர் கையாண்ட யுக்தி இருக்கிறதே – பெரியார்தான் சொல்வார், ‘‘நான் என் நிலைகளை மாற்றியிருப்பேன்; பொய் சொல்லி இருப்பேன். ஆனால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், எதையும் எனக்காக செய்ததில்லை; இந்த சமுதாயத்திற்காகச் செய்திருப்பேன்’’ என்று சொன்னார்.
அதுபோன்று, தன்னுடைய மனைவி கழுத்தில் இருக்கும் தாலியை இறக்கவேண்டும் என்பதற்காக, இவருடைய நண்பர்களைவிட்டு, குடிபோதையில் இருக்கின்ற மாதிரி நடிக்கச் சொல்லி, தகராறு செய்து, தாலியை எடுக்க வைத்திருக்கின்றார்.
ஆக, பிறக்கின்றபோதே, வளருகின்றபோதே, அப்படிப்பட்ட உணர்வோடு இருந்த மனிதர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
பெரிய ஆச்சாரியம் என்னவென்றால், நீங்கள் ஒரு பெரிய ஜாதியில் பிறந்துவிட்டால், உங்களை அறியாமல் ஒரு பெருமிதம் இருக்கும். தனக்குக் கீழே நான்கு பேர் இருக்கிறார்களே என்று.
பெரிய பணக்காரனாகப் பிறந்துவிட்டால், ஒரு பெருமிதம் இருக்கும். நமக்குக் கீழே நான்கு ஏழைகள் இருக்கிறார்கள்; கூப்பிட்டால், வேலைக்கு வருகிறார்கள் என்று.
நிறைய படித்துவிட்டால், நமக்குக் கீழே படிக்காத வர்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று ஒரு நினைப்பு வருகிறது.
பெரியார் ஆணாகப் பிறந்தார், பெண்களுக்காகப் போராடினார்!
மேற்சொன்ன எல்லாமே பெரியாரிடம் இருந்தது. பணம் அவரிடம் இருந்தது; ஆனால், ஏழைக்காகப் போராடினார்.
பெரிய ஜாதி என்று சொல்லுகின்ற ஒரு ஜாதியில் பிறந்தார்; தாழ்த்தப்பட்டவனுக்காகப் போராடினார்; ஜாதியை ஒழிக்கப் போராடினார்.
ஆண் என்கின்ற திமிர் அன்றைக்கு இருந்தது. பெண்களெல்லாம் அடிமை என்று. ஆனால், பெரியார் ஆணாகப் பிறந்தார், பெண்களுக்காகப் போராடினார்.
தன்னுடைய சுயம் என்கின்ற அந்தப் பெருமிதத்தை, போலிக் கட்டமைப்பை உடைத்துவிட்டு, ஒரு மனிதர் வாழ்ந்து, தொண்டு செய்த வரலாறு இருக்கின்றது என்றால், அது பெரியாருக்கு மட்டும்தான் உண்டு என்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.
தந்தை பெரியாரின் சலிப்பும் – அண்ணாவின் கடிதமும்!
பெரியாருக்குச் சோர்வு வந்தபோது, அண்ணா அவர்கள் எழுதினார்.
அண்ணா அவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ஏதோ ஒரு காரணத்தினால், வாழ்க்கையில் எனக்குச் சலிப்பு வந்துவிட்டது என்று அய்யா அவர்கள் ‘விடுதலை’ மலரில் எழுதியிருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அண்ணா அவர்கள், பதறிப் போனார். அங்கிருந்து ஒரு கடிதம் எழுதினார்.
‘‘அய்யா, உங்களுக்கு ஏன் வாழ்க்கையில் சலிப்பு வரவேண்டும்? நான் எத்தனையோ தலைவர்களைப்பற்றி வரலாற்றில் படித்திருக்கின்றேன். பெரிய புரட்சியா ளர்களைப்பற்றியெல்லாம் படித்திருக்கின்றேன். உலகத்தில் இரண்டு புரட்சிகளைப்பற்றித்தான் இன்ன மும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்று, பிரெஞ்சு புரட்சி; இன்னொன்று ரஷ்ய புரட்சி.
பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டவர், வால்டேர். கொள்கையைத் தந்தவர் வால்டேர். அதனை முன்னெடுத்துக் கொண்டு போய், அந்தப் புரட்சியை வெற்றிகரமாக செய்துகாட்டியவர் ரூசோ.
இரண்டு பேரும் வாழ்ந்த நூற்றாண்டு – இரண்டு நூற்றாண்டு.
வெவ்வேறு தலைவர்கள் போராடி, கொள்கையை வகுத்தெடுத்து, புரட்சியைக் கொண்டு வருவதற்கு இரண்டு நூற்றாண்டுகள் ஆயிற்று.
ரஷ்யாவில், லெனின், காரல்மார்க்ஸ்
தத்துவத்தைக் கொடுத்தவர் காரல் மார்க்ஸ்; கொண்டு வந்து சேர்ந்தவர் லெனின், ஏங்கல்ஸ். ஆனால், இரண்டு நூற்றாண்டு, இரண்டு தலைவர்கள்.
தன் வாழ்நாளில், தன் கொள்கையைச் சொல்லி, அந்தக் கொள்கை
அரியணையில் ஏறிய வரலாறு,
உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது!
அரியணையில் ஏறிய வரலாறு,
உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது!
எந்தப் போராட்டமும், எந்தப் புரட்சியும் உலகத்தில் இரண்டு தலைவர்களால், இரண்டு நூற்றாண்டுகளில்தான் நடந்திருக்கின்றது என்ப தால், எனக்குத் தெரிந்து, ஒரே ஒரு தலைவர், தன் வாழ்நாளில், தன் கொள்கையைச் சொல்லி, அந்தக் கொள்கை அரியணையில் ஏறிய வரலாறு, உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது; நீங்கள் ஏன் சலிப்படையவேண்டும்’’ என்று எழுதியவர் பேரறிஞர் அண்ணா.
அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கம், இன்றைக்கு ஆற்றிருக்கின்ற பணிகளையெல்லாம் பார்க்கின்றோம்.
என்ன வேதனையாக இருக்கின்றது என்றால், நாணயமான எதிரிகள் பெரியாரை விமர்சித்தபோது, மனதிற்குள், பெரியார் செய்வது நியாயம்தான் என்று நினைத்தார்கள்.
‘‘பெரிய புராணமா?
பெரியார் புராணமா?’’
பெரியார் புராணமா?’’
இன்றைக்குச் சில பேர், ‘‘பெரிய புராணமா? பெரியார் புராணமா?’’ என்கிறார்கள்.
நான் ஒரு மேடையில் கேட்டேன், ‘‘பெரிய புராணமா? பெரியார் புராணமா?’’ என்றால் என்ன அர்த்தம்? பெரிய புராணத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? அதைச் சொன்னால், அசிங்கமாக இருக்கும் தெரியுமா? இயற்பகைநாயனார் என்று ஒருவர் பெரிய புராணத்தில் இருக்கிறார். அதுபோன்று யாராவது உங்களிடம் இருக்கிறார்களா என்று கேட்டேன்.
பிள்ளைக்கறி படைத்துவிடுவீர்களா?
அறிவு நாணயம் இல்லாத ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்போது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை- ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாவை வேகமாகக் கொண்டாடவேண்டும் என்கின்ற அவசியம் ஏன் வந்தது?
ஒவ்வொரு கிராமத்திலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள் நடத்தப்படவேண்டும்!
நான் சொல்கிறேன், ஒவ்வொரு கிராமத்திலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாக்கள் நடத்தப்பட வேண்டும். 10 பேர் இருந்தாலும், அந்த விழாவினை நடத்தவேண்டும்.
இன்றைக்கு நமக்கு இருக்கின்ற பெருமை என்ன?
எத்தனை தலைமுறை வந்திருக்கிறது – பெரியார், அண்ணா, கலைஞர், அதற்குப் பிறகு நமக்கு என்ன பெருமை?
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
இன்றைக்கு முதலமைச்சராக இருக்கின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மகத்தான மனிதர் ஓங்கிச் சொல்கிறார்.
‘‘எனக்கு வழிகாட்டி எங்கே இருக்கிறார் என்றால், பெரியார் திடலில் இருக்கிறார்’’ என்று.
கலைஞரை வைத்துக்கொண்டே நான் ஒருமுறை சொன்னேன்; அண்ணாவைப்பற்றி எழுதுகின்றபோது, அவருடைய எழுத்து மிக அருமையாக இருந்தது.
‘அண்ணா’ என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும்!
தலைவரென்பார்..
தத்துவ மேதை என்பார்,
நடிகர் என்பார்,
நாடக வேந்தர் என்பார்,
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்,
மனிதரென்பார்,
மாணிக்கமென்பார்,
மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார்,
அருமொழிக்காவல் என்பார்,
அரசியல்வாதி என்பார்;
அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேர மற்றோர் – நெஞ்சத்து அன்பாலே ‘அண்ணா’ என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை பெயரும் தந்தார் என்றார்.
நீங்கள் எழுதியது உங்களுக்கே பொருந்துகிறது என்று சொன்னேன்.
‘‘நான், அண்ணா அல்ல’’ என்றார்.
அவர் ஓர் எழுத்தாளராக, கவிஞராக, ஆட்சியாளராக, வரலாற்று ஆய்வாளராக, பேச்சாளராக எத்தனைப் பரிமாணங்கள் கலைஞருக்குள்.
‘‘நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன்!’’
கலைஞரிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்; ஒட்டு மொத்தமாக சுருக்கி ‘‘நீங்கள் யார்?’’ என்று கேட்டார்கள்.
டக்கென்று சொன்னார் கலைஞர், ‘‘நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன்’’ என்று.
நம்மீது விழுகின்ற பட்டங்கள், பதவிகள் எதுவாக இருந்தாலும், அதற்கு அடிநாதம், நாங்கள் சுயமரி யாதைக்காரர்கள் என்று சொல்லுகின்ற உணர்வு இருக்கின்றது அல்லவா, அதுதானே!
தளபதி முருகேசன் அவர்கள்கூட என்னை பெருமைப்படுத்தவேண்டும் என்பதற்காகச் சொன்னார். ‘‘அண்ணன், நாடாளுமன்றத்தில் எழுந்தால்,
பி.ஜே.பி.,க்காரர்கள் ஓடுகிறார்கள்’’ என்று.
ஓடவில்லை, ஓடி வருகிறான் உள்ளே!
நான் பேச எழுந்தவுடன், வெளியே போன
பி.ஜே.பி.,க்காரர்களை எல்லாம் உள்ளே கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.
அதற்கு என்ன காரணம் என்றால், நான் அடிக்கடிச் சொல்வேன்.
நாடாளுமன்றத்தில் நாங்கள்தான் விளக்கிச் சொல்கிறோம்!
திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களைப் பார்த்து நாடாளுமன்றத்தில் ஏன் பயப்படுகிறார்கள் என்றால், எங்களுக்காகவா என்றால், இல்லை.
அவர்களுக்கு ஒன்றும் புரியமாட்டேன் என்கிறது. நாங்கள் விளக்கிச் சொல்கிறோம்.
அமித்ஷா வந்தாரே, என்ன சொன்னார்?
‘‘டில்லியைப் பிடித்துவிட்டோம்; அரியானாவைப் பிடித்துவிட்டோம்; மகாராட்டிராவை பிடித்துவிட்டோம்; அடுத்து தமிழ்நாடுதான்’’ என்றார்.
உளவுத் துறையைக் கையில் வைத்திருக்கிறீர்களே, அங்கெல்லாம் நீங்கள் வெற்றி பெற்றதற்கு என்ன காரணம் என்று சிந்திக்கவேண்டும் அல்லவா!
அரவிந்த் கெஜ்ரிவால், ஓர் அரசியல் கட்சித் தலைவர், அவருக்குப் பின்னால், தத்துவமில்லை.
அரியானாவில் தோல்வியுற்ற காங்கிரஸ் தலைவர் தனி ஆள்; அவருக்குப் பின் தத்துவமல்ல.
மகாராட்டிராவில் தோல்வியுற்றவர்களுக்குப் பின்னால், தத்துவம் இல்லை.
பெரியார், அண்ணா, கலைஞர் என்கின்ற தத்துவம் இருக்கிறது!
ஆனால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாமனிதர் தனி மனிதரல்ல; அவருக்குப் பின்னால், பெரியார், அண்ணா, கலைஞர் என்கின்ற தத்துவம் இருக்கிறது. இந்தத் தத்துவம் இருக்கின்ற வரையில், உங்களால் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது.
அதனால்தான், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். 1925 ஆம் ஆண்டில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மூடநம்பிக்கை ஒழிப்பிற்காக, ஸ்நாதன ஒழிப்பிற்காக.
அதற்குப் பிறகு 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில், என்னென்ன தீர்மானங்களை யெல்லாம் நிறைவேற்றியிருக்கின்றோம்.
அண்மையில் எல்லாக் கட்சிக்காரர்களும் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில் நான் பேசினேன்.
‘‘மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களாம்!’’
‘‘ஒரு நடிகருக்குப் பின்னால், பெரிய கும்பல் கூடுகிறதே’’ என்று ஒரு கேள்வி கேட்டார்கள்;
அதற்கு ஒருவர் பதில் சொல்கிறார், ‘‘மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்’’ என்று.
நான் சொன்னேன், மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றால், எங்களிடம்தானே இருக்கவேண்டும்.
மாறுதல் மட்டும்தானே இந்த உலகத்தில் மாறாதது என்பது மார்க்சிய தத்துவம்.
மாற்றத்தை செய்துகொண்டிருக்கின்ற
ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்தான்!
ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்தான்!
இந்த மாற்றத்தை செய்துகொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் இயக்கம்தான். வேறு எந்த இயக்கமும் கிடையாது.
1929 ஆம் ஆண்டு, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். அதுவரையில், பெண்களுக்குச் சொத்துரிமை என்ற பேச்சே இல்லை. அது மாறுதல்.
பெண்களுக்குச் சொத்து கிடையாது என்று இருந்த இடத்தில், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள், அது மாறுதல்.
அதற்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்து, அதற்கான சட்டத்தைப் போட்டார் – அடுத்த மாறுதல்.
சரி, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்து விட்டோம்; பதவி கொடுத்தோமா? அதிகாரத்தைக் கொடுத்தோமா? என்றால், இல்லை.
உள்ளாட்சித் தேர்தலில், 50 சதவிகித இட ஒதுக்கீட்டினை பெண்களுக்குக் கொடுத்தோம் – கொடுத்தது திராவிட இயக்கம்!
நான் அடிக்கடி கிண்டலுக்காகச் சொல்வேன், ‘‘ஒரு காலத்தில் பதவியில் இருக்கும் கண வன்மார்களுக்கு, தண்ணீர் கொடுத்த காலம் போய், இன்றைக்கு அதே கணவன், சேர்மேனாக இருக்கும் மனைவிக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்’’ என்பேன்.
இந்த மாறுதலையெல்லாம் செய்தது எந்த இயக்கம்?
ஒவ்வொரு மாறுதலையும் கொண்டு வருவது எந்த இயக்கம்?
படிக்க வேண்டாம் என்று சொன்னபோது, படிக்கவேண்டும், அதற்காக இட ஒதுக்கீடு கேட்டது நாங்கள் – மாறுதல்.
இட ஒதுக்கீடு வந்ததற்குப் பிறகு, வேலை வாய்ப்புக் கேட்டோம் – அது மாறுதல்.
இன்றைக்குப் படிக்கவே கூடாது என்ற சமுதா யத்திற்காக – ‘புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்’ – படிப்பதற்கு பணம் கொடுக்கிறார்கள் – மாறுதல்.
மாறுதல் முழுவதையும் நாம்தானே செய்தோம்!
மாறுதலுக்குக் காரணம் சுயமரியாதை இயக்கம்; பெரியார், அண்ணா, கலைஞர்!
இதனை நான், நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்தேன். 1919 இல் என்னுடைய தாத்தா, தீண்டா மைக்கும், ஏழ்மைக்கும் பயந்து ஓடினார், இலங்கைக்கு. அங்கே போய் பொருளீட்டி, எங்கள் அப்பாவை ஆங்கிலம் படிக்க வைத்து, எந்த வயலில் அடிமையாக இருந்தாரோ, அந்த 25 ஏக்கர் நிலத்தையும் வாங்கினார். நான், எங்களுடைய வீட்டில் 8 ஆவது பையன்.
தாத்தா, பஞ்சத்திற்கு ஓடினார்; தீண்டாமைக்கு அஞ்சி ஓடினார். அப்பா, கொஞ்சம் வசதியாக இருந்தார். அவருடைய பேரன், எட்டாவது பிள்ளை, ஒன்றிய அமைச்சராக இருந்திருக்கின்றேன், இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேனே, இந்த மாறுதலுக்குக் காரணம் சுயமரியாதை இயக்கம்; பெரியார், அண்ணா, கலைஞர்.
எதில் மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறீர்கள் என்று கடுமையாகப் பேசினேன்.
‘எங்களுக்கு ஒரு சேஞ்ஜ் வேண்டும்’ என்கிறார்கள்.
எங்களைவிட, கருப்புச் சட்டைக்குத்தான் அதிக கடமை இருக்கிறது!
ஆக, இந்த மாறுதல்கள் எல்லாம் எப்படி வந்தன என்பதைச் சொல்லவேண்டிய கடமை, எங்களைவிட, கருப்புச் சட்டைக்குத்தான் அதிகமாக இருக்கிறது.
எங்களிடம் கொஞ்சம் கட்டுப்பாடுகள் உண்டு. இதைச் சொல்லாதீர்கள், அதைச் சொல்லாதீர்கள்; இராசா கொஞ்சம் வேகமாகப் போகிறார் என்றெல்லாம் சொல்வார்கள். அதிலும் தப்பித்து வந்துவிடுவேன். ஆசிரியர் இருக்கிறார், காப்பாற்றி விடுவார் என்கின்ற நம்பிக்கையில்.
ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் பார்த்தேன். அய்யாவி னுடைய பேச்சைப் பார்த்தேன். அதுபோன்று ஒரு தலைவனைத் தேட முடியுமா?
இவ்வளவுக் கண்டித்த ஒரு மனிதன் இந்த உலகத்தில் வேறு எங்கேயாவது இருந்திருக்க முடியுமா?
அய்யா எழுதுகிறார்,
‘‘பொதுவாக நமது நமது பிரசங்கத்தினாலும் “குடிஅரசு” ஏட்டினாலும் நான் செய்து வந்த பிரசாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன், அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன்,
மதம் என்பதைக் கண்டித்தேன், மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன், மதச்சடங்கு என்ப வைகளைக் கண்டித்திருக்கிறேன்; குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன்; கோவில் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சாமி என்பதைக் கண்டித்திருக்கிறேன்;
வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்கிறேன்; சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; புராணம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; பார்ப்பனீயம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன்;
அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; உத்தி யோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன்; நீதி ஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன்; நிர்வாக ஸ்தலங்கள் என்பவை களைக் கண்டித்திருக்கிறேன்; ஜனப்பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; பிரதிநிதிகள் என்பதைக் கண்டித்திருக்கிறேன்; தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன்;
கல்வி முறை என்பதைக் கண்டித்திருக்கிறேன்; சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்.’’
இவ்வளவுக் கண்டித்த ஒரு மனிதன் இந்த உலகத்தில் வேறு எங்கேயாவது இருந்திருக்க முடியுமா? என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை.
இந்த சமூகம் தன் வாழ்நாளில்
ஓர் அங்குலமாவது உயர்ந்துவிடாதா?
ஓர் அங்குலமாவது உயர்ந்துவிடாதா?
உன் கடவுள் ஜாதி பார்க்கின்ற கடவுள்; உன் மதம் ஜாதி பார்க்கின்ற மதம்; உன் இலக்கியம் ஜாதி பார்க்கின்ற இலக்கியம்; உன் அரசியல், ஜாதி பார்க்கின்ற அரசியல்; இந்த நாசத்தைவிட்டு என்றைக்கு வெளியே வரப் போகின்றீர்கள்’’ என்று கேட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
அப்படியென்றால், இருக்கின்ற கட்டுமானங்களை யெல்லாம் உடைத்துவிட்டு, ஒரு மனிதன், தன் சொந்த செலவில், தன்னுடைய பொருளையெல்லாம் இழந்து, இந்த சமூகம் தன் வாழ்நாளில் ஓர் அங்குலமாவது உயர்ந்து விடாதா என்ற ஏக்கத்தில் பேசியும், எழுதியும் சிந்தித்து, சுய சிந்தனையாக வாழ்ந்த ஒரு மனிதனை உலகத்தில் இனிமேலும் நாம் பார்க்க முடியாது என்ற அளவிற்கு அவர் எழுதியிருக்கிறார்,பாடுபட்டு இருக்கிறார்.
அப்படிப்பட்ட சுயமரியாதை சிந்தனையை, இன்றைக்கு நூறாண்டுகள் கழித்து கொண்டாடு கின்றோம்.
நமக்கு இருக்கின்ற பெருமை என்ன?
இந்தத் தத்துவத்தை, சிதிலமடையச் செய்யாமல் காப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் இன்னமும் இருக்கிறார். 1969 ஆம் ஆண்டிலேயே அய்யா சொல்லியிருக்கிறார், இந்தப் புத்தகத்தில்.
கலைஞர் கவனமாக இருக்கவேண்டும்!
‘‘தி.மு.க.வில், பகுத்தறிவுக்குப் புறம்பாக சில பேர் வந்திருக்கிறார்கள்; ஜாதிப் பற்று உடையவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடத்தில், கலைஞர் கவனமாக இருக்கவேண்டும்’’ என்று எழுதியிருக்கிறார்.
‘‘புத்தர் சொன்னார்,
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி என்று.
புத்தம் என்றால், தலைவன்
தம்மம் என்றால், கொள்கை
சங்கம் என்றால், அமைப்பு.
தலைவன் – கொள்கை – அமைப்பு இம்மூன்றிலும் நீங்கள் கோட்டை விட்டுவிடக் கூடாது என்று கூறினார் அய்யா!
நல்ல தலைவர், கலைஞருக்குக் கிடைத்தார்.
கொள்கையை விட்டு நழுவிவிடாதீர்கள்; கட்டுப்பாடு இல்லாமல், கட்சியை உடைத்துவிடாதீர்கள்!
தம்மம், கொள்கை; சங்கம், கட்டுப்பாடுள்ள கழகம். கட்டுப்பாடுள்ள கழகத்தில் நல்ல தலைவர் இருக்கி றார். நான் உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன், கொள்கையை விட்டு நழுவிவிடாதீர்கள்; கட்டுப்பாடு இல்லாமல், கட்சியை உடைத்துவிடாதீர்கள்.
புத்தர் இதைத்தான் செய்தார்; அந்த புத்தரையே வீழ்த்தி விட்டார்கள். நான், கலைஞருக்குச் சொல்கிறேன், தி.மு.க.விற்குச் சொல்கிறேன், கவனமாக இருங்கள்; உங்களை அழித்து விடுவார்கள், உடைத்துவிடுவார்கள்.’’ (எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.விலிருந்து பிரிந்து போவதற்கு முன்).
எவ்வளவு கவனமாக சொல்லியிருக்கிறார் பெரியார் பாருங்கள்.
எதற்கும் கவலைப்படாத ஒரு தலைவர்!
ஆக, இப்படியெல்லாம் சிந்தித்த ஒரு தலைவர்; எதற்கும் கவலைப்படாத ஒரு தலைவர்.
அவருடைய வாழ்க்கையைப் பார்த்தீர்களேயானால், 1925 ஆம் ஆண்டில், ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஸநாதன ஒழிப்பு.
1929 ஆம் ஆண்டு, சுயமரியாதை இயக்க மாகாண முதல் மாநாட்டில் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார்.
பிறகு, ரஷ்யாவிற்குச் சென்றபோது, கொஞ்சம் கம்யூ னிசம் சேருகிறது. அந்தக் கம்யூனிச கொள்கையை 1932, 1933 இல் கொண்டுவருகிறார்.
பிறகு, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்; அதற்குப் பிறகு நீதிக்கட்சிக்குத் தலைவராகிறார். அதற்குப் பிறகு திராவிடர் கழகம்.
அவருடைய பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், அவருடைய மொழிக் கொள்கையைப் பார்த்தால் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும் என்று பாருங்கள்.
மிக எளிமையாகச் சொல்கிறார், ‘‘தமிழ் மொழியைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியாது’’ என்றார்.
தமிழ் மொழியை சுத்திகரித்து விட்டால், அதைவிட அருமையான மொழி தமிழனுக்கு வேறு என்ன இருக்கிறது?
‘‘எனக்கு என்ன பிரச்சினை என்றால், உங்கள் தமிழில் இருக்கின்ற புராணங்களையும், பக்தி இலக்கியத்தையும் ஓரம் வைத்துவிட்டால், தமிழ் மொழியை சுத்திகரித்து விட்டால், அதைவிட அருமையான மொழி தமிழனுக்கு வேறு என்ன இருக்கிறது?’’ என்று கேட்டார்.
ஆன்மிகமும், என்னுடைய பகுத்தறிவும்…!
குன்றக்குடி அடிகளார் அவர்களை ஏன் ஏற்றுக்கொண்டார்?
பெரியார் திடலுக்கு வந்து, ‘விடுதலை’ பணிமனை திறப்பு விழாவின்போது பேசினாரே!
‘‘அய்யா, உங்கள் ஆன்மிகமும், என்னுடைய பகுத்தறிவும் ஒரு புள்ளியில் சந்திக்குமேயானால், அந்த சந்திப்பில் என்ன இருக்கவேண்டும் என்றால், ஜாதி இருக்கக் கூடாது; வேற்றுமை இருக்கக்கூடாது; ஆண் – பெண் சமத்துவம் இருக்கவேண்டும்; அப்படி இருந்தால், ஆன்மிகமும் – பகுத்தறிவும் சங்கமிப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை’’ என்று பேசியிருக்கிறாரே!
இப்படி ஒரு தலைவரை நாம் பார்க்க முடியாது.
ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால், தத்துவத்தை விட்டுவிடுவார்கள்!
இன்னொரு பெருமை என்னவென்றால், நீங்கள் வெளிநாட்டிற்குப் போனீர்கள் என்றால், ஒரு தத்துவத்தை, ஒரு தலைவன் கொடுக்கின்றபோது, அந்தத் தத்துவத்தை அரியணையில் ஏற்றிய பிறகு சில ஆண்டுகள் ஆகிவிட்டால், ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால், அந்தத் தத்துவத்தை விட்டுவிடுவார்கள்.
காளி கடைக்கண் வைத்தாளாம்,
புரட்சி வந்ததாம்!
புரட்சி வந்ததாம்!
ரஷ்யாவில் நடந்த புரட்சியால், எண்ணற்றோர் மடிந்தனர்; ரத்த ஆறு ஓடியது அங்கு.
ரத்த ஆறு ஓடிய புரட்சியை,
‘‘ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி
மாகாளி கடைக்கண் வைத்தாள்’’ என்று பாரதியார் எழுதுகிறார்.
காளி கடைக்கண் வைத்தாளாம், புரட்சி வந்ததாம். அந்தப் புரட்சி விளங்குமா? இதுதான் பாரதி கண்ட புரட்சி!
இந்தச் சமூகம் தூங்கிவிடக் கூடாது என்பதற்காக….
“எல்லாம் அவன்செயலே” என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்,
காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும்,
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே,என் செந்தமிழே கண்ணுறங்கு!’’
என்று தாலாட்டுப் பாடலில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினார் குழந்தைக்கு.
இந்தச் சமூகம் தூங்கிவிடக் கூடாது என்பதற்காக, குழந்தைக்கே தாலாட்டுப் பாடினார் புரட்சிக்கவிஞர்.
‘‘நடவு செய்த தோழர் கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பிலாத வீணர்
உலகையாண்டு உலாவலும்
கடவுளாணை என்று கூறும்
கயவர் கூட்டம் மீதிலே
கடவுள் என்ற கட்டறுத்து
தொழிலாளரை ஏவுவோம்’’ என்றார்.
இப்படியெல்லாம் பாடியவர் புரட்சிக்கவிஞர்.
பாரதியார் புரட்சிக்கவிஞரா?
‘‘மாகாளி கடைக்கண் வைத்தாள், எழுந்தது பார் யுகப் புரட்சி’’ என்று பாடிய பாரதியாரும் புரட்சிக்கவிஞரா?
இது எவ்வளவு புரட்டு என்பதைப் பாருங்கள். ஆனால், எங்கே நாம் வெற்றி பெறுகிறோம் என்றால், நாம் இவ்வளவு பெருமையோடும், இவ்வளவு வீரத்தோடும் இந்த நூற்றாண்டு விழாக்களை ஏன் நாம் நடத்துகின்றோம் என்றால், அவ்வளவு பெரிய ரஷ்ய புரட்சி நடைபெறும்போதும், மார்க்ஸ் எழுதினார்.
‘‘ஒரு குழந்தை தாயின் மார்பில் வாய் வைக்கிறது, பால் வரவில்லை, ரத்தம் வருகிறது; இன்னொரு குழந்தை இறந்து போய்விடுகிறது; சவப்பெட்டி வாங்குவதற்கு காசில்லை. வறுமை, ஓடுது, ஓடுது, ஓடுது – பக்கத்து வீட்டிற்குச் சென்று கொஞ்சம் கோதுமை வாங்கி சாப்பிடும் அளவிற்கு, வறுமை சுத்துகிறது’’ என்பதுதான் அன்றைய நிலை. அப்போதும் அந்த மனிதன் இரவில், விளக்கு வெளிச்சத்தில் எழுதிக் கொண்டே இருந்தான்.
காரல் மார்க்ஸ்தான் முதன் முதலில் சொன்னான்!
இந்த மண்ணைப் புரட்டிப் போடுகின்ற மார்க்சிய தத்துவத்தை அவன் தந்தான். அவன்தான் முதன் முதலில் சொன்னான், உடைமை உன்னுடையது; ஆனால், அந்த நிலத்தில், தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, கூலியோ தினமும் 10 பேர் சென்று தினமும் உழைக்கி றார்கள் அல்லவா – அந்த உழைப்பு, அந்த நிலத்தின்மீது செலுத்தப்படும்போதுதான் உற்பத்தி வருகிறது.
அருந்ததியரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தாழ்த்தப் பட்டவரோ உழைக்கின்றபோது, உடைமை உன்னு டையது; உற்பத்தி சாதனம் உன்னுடையது. அதன்மீது உழைப்பு செலுத்தப்படுகிறது; அந்த உழைப்பு இவர்களு டையது. இந்த இரண்டும் சேர்ந்துதான் மகசூல் வருகிறது.
உற்பத்தி சாதனம், உழைப்பும் சேர்ந்து உற்பத்தியாக மகசூல் கிடைக்கிறது. இதில் இரண்டு பேருக்கும் பங்கு உண்டு.
உபரி மதிப்பு இரண்டு பேருக்கும் சொந்தம்;
நீ யார், அவர்களை அடிமைப்படுத்துவதற்கு?
நீ யார், அவர்களை அடிமைப்படுத்துவதற்கு?
ஏனென்றால், இவனுடைய நிலத்திற்கு ஒரு மதிப்பும்; உழைப்புக்கு ஒரு மதிப்பும் சேர்ந்து லாபம் வருகிறபோது, அந்த உபரி மதிப்பு – சர்பிளஸ் வேல்யூ – இந்த வார்த்தை முக்கியம் – உபரி மதிப்பு இரண்டு பேருக்கும் சொந்தம்; நீ யார், அவர்களை அடிமைப்படுத்துவதற்கு என்று கேட்ட தத்துவம், காரல் மார்க்ஸ் தத்துவம்.
இதற்கு எத்தனை தரவுகள்?
பின்னாளில் ரஷ்யாவில், எல்லா தத்துவங்களும் நீர்த்துப் போய்விட்டன!
அவ்வளவு கஷ்டப்பட்டார் காரல் மார்க்ஸ், அவ்வளவு கஷ்டப்பட்டார் லெனின். பின்னாளில், கோர்ப்பச்சேவ் என்கின்ற ஓர் ஆள் வந்தார், எல்லா தத்துவங்களும் நீர்த்துப் போய்விட்டன.
எந்த மண்ணில், லெனின் அந்த அரசாங்கத்தை உருவாக்கினாரோ, அதே மண்ணில் லெனின் சிலை உடைக்கப்பட்டது.
ஏனென்றால், தலைவர்கள் வருகிறார்கள், தத்துவத்தை விட்டுவிட்டார்கள்.
தத்துவமும் பலமாக இருக்கிறது; தலைவரும் பலமாக இருக்கிறார்!
ஆனால், நமக்கு மட்டும்தான், தத்துவமும் பலமாக இருக்கிறது 92 வயதில்; தலைவர், 72 வயதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமாக இருக்கிறார்.
எனவே, தலைவரும், தத்துவமும் இணைந்திருக்கின்ற இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது; வீழ்த்தக் கூடாது – விட்டுவிட மாட்டோம் என்கின்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்வோம்.
இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா சிறப்புரை யாற்றினார்.