திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தமிழ்நாடு முழுவதும் 3103 வழித்தடங்களில் புதிய சிற்றுந்து சேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

viduthalai
2 Min Read

தஞ்சாவூர், ஜூன்.17- தமிழ் நாட்டில் புதிய மினி பஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.6.2025)தொடங்கி வைத்தார்.

மினிபஸ் சேவை

தஞ்சையில் நேற்று நடை பெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பேருந்து திட்டம் 2024இன் படி புதிய மினி பேருந்து சேவையை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 1997ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினிபஸ் திட்டம் அறி முகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் 4.கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்கப் பட்டு வந்தன.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், இந்த திட்டத்தை விரிவாகவும், முறையாகவும் நடை முறைப்படுத்த பொது மக்கள் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்-2024 கடந்த 23.1.2025 அன்று வெளியிடப்பட்டது. பின்னர், மீண்டும் இந்த திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 28.4.2025 அன்று வெளியிடப் பட்டது.

தமிழ்நாடு முழுவதும்…

இந்த திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப்பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தூரத்தை 25 கி.மீ. ஆக உயர்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பஸ் இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவீதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது மினிபஸ் இயக்கி வருபவர்கள் புதிய திட்டத்துக்கு மாற்றம் பெற்று இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 2094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய்யப் பட்ட 1,009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், கோவி செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.பி.க்கள் திருச்சி சிவா, கல்யாண சுந்தரம், முரசொலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

சென்னையில்…

புதிய விரிவான மினிபஸ் திட்டத்தின் கீழ்தேனி மாவட்டத்தில் 3 வழித்தடங்களில் 9 மினி பஸ்களின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தரர். இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் 72 வழித்தடங்களுக்கு மினி பஸ் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *