‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (24)
அன்று முதல் இன்று வரை அதுபோலவே ஜாதி ஒழிப்புக்காகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் துக்காகவும், ‘குடிஅரசு’ம், அதன் ஆசிரியரும் பாடுபட்டு வருவதோடு மற்றும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஆதாரமாய்ப் பயன்படுத்தப்படும் ஜாதி, மதம், கடவுள் தன்மை, எளியோர் வலியோர் தன்மை ஆகியவைகளை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் முனைந்து பாடுபட்டு வந்திருக்கிறது.
இதை நமது வாசகர்கள் அதாவது ஆதியில் இருந்து கவனித்து வருகின்றவர்கள் நன்கு அறிவார்கள்.
பகுத்தறிவு, புரட்சி
இம்முயற்சியின் பயனாக பத்திரிகை பல தடவை சர்க்காரால் ஜாமீன் கேட்கப்பட்டதும், ஜாமீன் தொகையும் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டதும், அதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ.ராமசாமியும், அவரது சகோதரி தோழர் கண்ணம்மாளும், அவரது சகோதரர் தோழர் கிருஷ்ணசாமியும் சிறை சென்றதும் பெருந் தொகை அபராதமாகவும், செலவாகவும், நஷ்டப்பட்டதும், பத்திரிகையின் பெயர்களையும் “புரட்சி” என்றும், “பகுத்தறிவு” என்றும் அடிக்கடி பெயர் மாற்றப்பட்டதுமான காரியங்கள் நடந்ததும் வாசகர்கள் அறிந்ததேயாகும்.
சுயமரியாதை இயக்கம்
இவ்வளவும் தவிர, இதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் அய்ரோப்பா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வந்த பிறகு ரஷ்ய அரசாங்கத்தின் சம்பந்தம் ஈ.வெ.ராவுக்கு இருந்து வருவதாகச் சந்தேகப்பட்டு அரசாங்க சி.அய்.டி. இன்ஸ்பெக்டர்கள் கான்ஸ்டபிள்கள் ஆகியவர்கள் இன்னமும் எப்போதும் பின் தொடரவும் அவரது நடவடிக்கைகள் எல்லாம் துப்பறிவோர்களைக் கொண்டு கவனிக்கவும், அவரது கடிதப் போக்குவரத்துகளை எல்லாம் உடைத்துப் பார்க்கவும், அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் அவரது நண்பர்களான சர்.ஆர்.கே. சண்முகம் அவர்கள் போன்றோர்களின் கடிதங்களும் உடைத்துப் பார்க்கப்படவும், அவ்வளவோடு நிற்காமல் எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று முயற்சித்து ‘ஆட்டுக்குட்டி – புலி கதை’ போல் பழைய குப்பைகளைக் கிளறிக் குற்றம் கண்டுபிடிப்பதுமான காரியங்கள் செய்யப்பட்டிருப்பதோடு, சுயமரியாதை இயக்கமே சட்டவிரோதமான இயக்கம் என்று உத்தரவு பிறப்பிக்கவும் சர்க்கார் தீர்மானித்திருக்கிறார்கள்.
இவைகள் எல்லாம் சர்க்கார் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் தோழர் ஈ.வெ.ரா.வைப் பற்றியும் தப்பபிப்பிராயம் கொண்டும், சுயமரியாதை இயக்கம் மக்களைப் பலாத்காரத்தில் கொண்டு போய்விடும் என்றும், அது சட்ட விரோதமாய் நடக்க மக்களைத் தூண்டுகின்றது என்றும் கருதியதால்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று நாம் கருதி சுயமரியாதை இயக்கத்தில் பலாத்காரமோ, சட்டவிரோதமாய் நடக்க மக்களைத் தூண்டுவதோ ஆகிய காரியம் இல்லை என்றும், அதன் கொள்கைகள் இன்னது இன்னதுதான் என்றும் விளக்கி ஓர் அறிக்கை வெளியிட்டும் சர்க்கார் அதையும் நம்பாமல் மறுபடியும் முன் போலவே தொந்தரவுகள் கொடுத்து வருகிறார்கள் என்பதை இச்சமயத்தில் வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
சு.ம. இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரையிலும் எந்தச் சமயத்திலும் சர்க்காருக்கு விரோதமாகச் சட்ட மறுப்போ அல்லது சட்ட விரோதமான காரியமோ செய்வது என்று ஒரு நாளும் தீர்மானித்தது இல்லை. எவரும் பேசியதுமில்லை என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
அதில் தீவிர உணர்ச்சி உள்ள வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள் என்றாலும் பொறுப்புள்ளவர்கள் என்று சர்க்காரால் கருதக் கூடியவர்களாகவே பல பெரியோர்களும் இருக்கிறார்கள் என்பதோடு அப்படிப்பட்டவர்கள் இன்னமும் சு.ம. சங்க ஸ்தாபனத்துக்குத் தலைவர்களாகவும், நிருவாகிகளாகவும் இருந்து வருகிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.
நிற்க. சு.ம. இயக்கமோ, குடிஅரசோ சட்ட விரோதமான பொதுவுடைமைப் பிரச்சாரம் செய்து வந்தன என்று சொல்லப்படுமானால் பொதுவுடைமைப் பிரச்சாரம் சட்ட விரோதமானது என்று எப்பொழுது சர்க்கார் உத்தரவு பிறப்பித்தார்களோ அப்பொழுது முதலே அவ்வித பிரச்சாரமானது எங்கு இருந்தாலும் யார் செய்தாலும் நிறுத்தப்பட வேண்டும் என்பதாக அங்கத்தினர்களுக்கும் தெரிவிக்கும் முறையில் குடிஅரசிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டாய் விட்டன.
ஏனெனில், பொதுவுடைமைக் கொள்கை கூடாது என்பதாக அல்லாவிட்டாலும் சர்க்கார் உத்தரவுக்கு விரோதமாகச் செய்யக் கூடாது என்கின்ற காரியத்தை முக்கியமாய்க் கொண்டு இம்மாதிரி செய்யப்பட்டதாகும்.
ஏனெனில், சுயமரியாதை இயக்கம் பலவித அபிப்பிராயமுடையவர்களது கூட்டுறவையும் அனுதாபத்தையும் ஆதரவையும் கொண்டிருப்பதாலும் அது அநேக விஷயங்களில் பெரியதொரு மாறுதல் செய்ய வேண்டிய அவசியத்துக்கு உட்பட்டு இருப்பதாலும் அதைச் சர்க்காருக்கு விரோதமான இயக்கம் என்பதாக ஆக்கக் கூடாதென்று கருதியே சட்டவரம்பிற்கு உட்பட்டதாக ஆதி முதல்கொண்டே நடத்தப்பட்டு வருகின்றது.
பல தோழர்களுக்குச் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடப்பது என்பது அவமானமாகவோ, பயங்காளித்தனமாகவோ தோன்றலாம். என்றாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எவ்வித நிபந்தனையையோ, நிர்ப்பந்தத்தையோ சுமத்த ஆசைப்படவில்லை.
ஆனால், அப்படிப்பட்டவர்களை ஒன்று மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதாவது சுயமரியாதை இயக்கத்தின் பேரால் சட்டமீறுவதோ, சட்டத்தை மறுப்பதோ சர்க்கார் உத்தரவை மீறுவதோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதேயாகும்.
காங்கிரசைவிட, அதன் ஒரே தலைவரான காந்தியாரைவிட, சட்ட மீறுதலில் சர்க்கார் உத்தரவுகளை அலட்சியம் செய்வதில் விளம்பரம் பெற்றவர்கள் யாருமில்லை.
அந்தப்படி யாராவது இருப்பதாகச் சொல்லப்படுமானால் அவர்களும் காங்கிரசையும், காந்தியாரையும் பின்பற்றினவர்களாகவே தான் இருக்கக் கூடும்.
உலகமறியத் தீர்மானங்கள்
அப்படிப்பட்ட ‘வீர’ ஸ்தாபனமும் ‘வீரர்’களும் ‘சட்ட மறுப்பை விட்டு விட்டோம் சட்டங்களை மீறாமல் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து எங்களது கிளர்ச்சிகளைச் செய்து கொள்ளுகிறோம்” என்று உலகமறியத் தீர்மானங்கள் செய்து சட்டசபைக்குள் புகுந்து ராஜ விசுவாசப் பிரமாணமும் செய்து சட்டம் செய்கின்ற வேலையிலும் முனைய இருக்கிறார்கள்.
அவ்வளவோடு மாத்திரமா? அதைவிட வீரதீரர்களான சமதர்மவாதிகள் என்பவர்கள் – மேல்நாடெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வந்து ரஷ்யாவின் திக்கு நோக்கித் தெண்டனிட்டுக் கொண்டு லெனினை உள்ளக் கோயிலில் வைத்து, மார்க்சின் உபதேசங்களை மந்திரமாய் ஜபித்துக் கொண்டிருப்பவர்கள் ராமராஜ்யத்தை விரும்பும் – வருணாசிரமத்தை ஆதரிக்கும் – பழையதைக் காப்பாற்றும் காங்கிரசுக்கு பக்தர்களாய் கதர் வேஷதாரிகளாய் இருந்து வருவது யாவரும் அறியாததல்ல.
மேலும் அவர்கள் சட்ட மறுப்பைக் கைவிட்டதாகவும் சட்டத்துக்கு அடங்கி நடப்பதாகவும் அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்தும், ராஜ விசுவாசப் பிரமாணம் செய்தும் இந்த சட்டசபையில் வீற்றிருப்பதையும் யாரும் அறியாததல்ல.
இதனால் எல்லாம் அந்த ரஷியவாதிகள் – சமதர்மவாதிகள் என்பவர்கள் இன்று அவமானமடைந்தவர்களாகவோ கோழைகளாக ஆகிவிட்டவர்களாகவோ யாராலாவது மதிக்கப்படுவதாய் நாம் காண முடியவில்லை.
ஆகவே, சுயமரியாதை இயக்கம் சட்டத்திற்கு மீறியதல்லவென்றும், சட்டத்தை மறுப்பதல்லவென்றும் சொல்லிக் கொள்வதால் எந்த சுய மரியாதைக்காரரும் அவமானப்பட வேண்டியதில்லை என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டுகின்றோம்.
இந்தியாவிற்கு – சிறப்பாகத் தென் இந்தியாவிற்கு – ஜாதி வித்தியாசங்கள் ஒழிக்கப்படுவதும் சட்டபூர்வமாக அது வெற்றி பெரும் வரை சமுக எதிர்ப்பையும் இழிவையும் சமாளிக்க அரசாங்கத்தின் மூலம் அரசியல் உரிமை ஸ்தாபனங்களில் பேதப்படுத்தப்பட்ட வகுப்புகள் விகிதாசார உரிமைகள் பெறப் பாடுபடுவதும் ஒரு பெரும் சமதர்மப் புரட்சியாகவே நாம் கருதுகின்றோம்.
இந்தக் கருத்தினாலேயே ‘குடிஅரசு’ ஆசிரியர் காங்கிரஸ் கூட்டத்தை விட்டு வெளி வந்தது முதல் நாளது வரை – வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காகவும் ஜாதி, மத வித்தியாசத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சவுகரியங்களைப் போக்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சியாரின் ஒத்துழைப்பை ஏற்றும் அவர்களுக்கு அதன் கொள்கை விரோதிகளால் கஷ்டமும், தொல்லையும் ஏற்படுத்தப்பட்ட காலங்களில் எல்லாம் கூடுமான அளவு ஒத்துழைத்து உதவி புரிந்தும் வந்திருப்பதுடன் ‘குடிஅரசு’ சுயமரியாதை இயக்கமும் அந்தப்படியே செய்து வந்திருக்கிறது. இன்றும் செய்து வருகின்றது என்பதையும் வாசகர்களுக்கு ஞாபகமூட்டுகிறோம்.
சமுக வாழ்க்கையில் சமதர்மம் முறை ஏற்படாமல் பொருளாதாரத் துறையிலும் அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான காரியமென்றோ முடியக் கூடிய காரியம் என்றோ நம்மால் கருத முடியவில்லை.
குறுகலான வழியில் விரிசலான வண்டியை நடத்துவது வண்டிக்குத் தான் பெரிய நாசத்தை விளைவிக்கும். ஆகவே, சமுதாயமாகிய வழி விரிவடைந்து செப்பனிடப்பட்டாலல்லாமல் பொருளாதாரச் சமத்துவமாகிய வண்டியைச் சிறிதும் நடத்த முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.
அபிப்பிராய பேதம் என்பது இயற்கையேயாகும். ஆதலால் இதற்கு மாறுபட்ட அபிப்பிராயம் யாருக்கும் ஏற்படாது என்றோ, ஏற்படக்கூடாது என்றோ நாம் சொல்ல வரவில்லை.
ஆனால், நமது அபிப்பிராயம் இதுவென்றும் இந்த அபிப்பிராயத் தையே இதுவரை சுயமரியாதை இயக்கம் செயலில் கொண்டு வந்திருக்கின்றது என்றும் இந்த வரையறைக்குள்ளாக இருந்துதான் மற்றும் பல அபிப்பிராயங்களையும் தெரிவித்தும் வந்திருக்கின்றது என்றும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆஸ்திக – நாஸ்திக விஷயங்களில்…
மற்றும் ஆஸ்திக – நாஸ்திக விஷயங்களில் இரு அபிப்பிராயக்காரர் களுக்கும் இயக்கத்தில் இடமிருந்து வந்தாலும் இயக்கம் பெரிதும் ஆஸ்திகத்தைப் பிரச்சாரம் செய்யாமலும், செய்வதை ஆதரிக்காமலும் அனு மதிக்காமலும் இருந்து வந்திருக்கின்றது.
மற்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆஸ்திகர்கள் பலர் நடந்து கொண்டு வந்த காரியங்களும் பெரிதும் நாஸ்திகமாகவே அதன் எதிரிகளாலும், பல பாமர மக்களாலும் கருதப்பட்டு வந்திருக்கின்றன.
நாஸ்திகம் சட்ட விரோதமானது என்று சர்க்காரால் தீர்மானிக்கப்படும் வரை இந்த நிலையிலிருந்து இயக்கம் மாறுபடவேண்டிய அவசிய மில்லை என்பதே நமது அபிப்பிராயம் என்பதோடு, இயக்கத்தில் அங்கத்தினர்களாகவும், அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்க ஆஸ்திகர்களுக்கும் உரிமை உண்டு என்பதும் நமது அபிப்பிராயமாகும்.
எப்படி இருந்தாலும் மதவாதிகள், கடவுள்வாதிகள், செல்வவான்கள், மேல் ஜாதிக்காரர்கள் ஆகியவர்களுடைய புன்சிரிப்பையும், ஆதர வையும் நாம் எப்படி பேண முடியாதோ, அது போலவேதான் அரசாங்கத்தாருடைய ஆதரவையும் பெற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்றாலும், அதற்காக நாம் தாழ்ந்தோ நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டுப் பின் செல்லுவதோ ஆகிய காரியங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் எதுவும் நமக்கு ஏற்பட்டு விடவில்லை என்பதே நமது உறுதியான அபிப்பிராயம். இந்த நோக்கத்துடனேயே ‘குடிஅரசு’ இப் பத்து வருஷ காலமாக வேலை செய்து வந்து பதினோறாவது ஆண்டில் புகுந்திருக்கிறது என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
(‘குடிஅரசு’ – 18.08.1935)