கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் அரசு முயற்சிப்பது ஏன்?- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

viduthalai
8 Min Read

தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் மிகப்பெரும் தொன்மைச் சிறப்பிற்குரிய இடமாக கீழடி மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள இந்த தொல்லியல் மேட்டில் 10 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்தியத் தொல்லியல் துறையில் பணியாற்றிவரும் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் இந்த இடம் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2014-2015-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதுவரை தமிழ்நாட்டில் ஈமக்காடுகள் கிடைத்துள்ளன, வர்த்தகம் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. வாழ்விடப் பகுதி கிடைக்கவில்லை என்பது பெரும் குறையாகச் சொல்லப்பட்டுவந்தது.

அமர்நாத் தலைமையில் குழு

அந்த நிலையில்தான், வைகை ஆறு பாய்ந்தோடிய பழைய தடத்தில் தொல்லியல் தடயங்கள் கிடைப்பதை அறிந்து, 270 கிலோமீட்டர் நீளம் கொண்ட வைகையின் வழித்தடத்தில், பத்து கிலோமீட்டரில் அங்கு 500 முதல் 600 பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கள ஆய்வுகளின் அடிப்படையில், 293 இடங்கள் கண்டறியப்பட்டு, அதில் அகரம் என்ற ஊருக்கும், கொந்தகை என்ற ஊருக்கும் ஒட்டி இருந்த கீழடி என்ற ஊரில் 110 ஏக்கர் தென்னந்தோப்பைத் தேர்வு செய்து அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர் ஆய்வைத் தொடங்கினர்.

நாகசாமியின் நழுவல்

அந்த இடத்தை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பே பாலசுப்பிரமணியன் என்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் தமது மாணவர்கள் தந்த பானை ஓடுகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு, தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதை அப்போதே வந்து பார்த்த நாகசாமி, இது சங்க இலக்கியத்துடன் தொடர்புடைய இடமாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சொல்லிவிட்டு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கிளம்பிவிட்டார். அவரின் கவனம் உண்மையான தமிழ்நாட்டின் தொன்மையை ஆய்வு செய்வதில் இல்லையே!

தமிழரின் நகர நாகரிகம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு, அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவுக்கு, இந்தக் குறிப்பு கிடைத்த நிலையில், அந்த இடத்தைத் தேடிப் போனால், அந்தக் காலத்தில் புன்செய் நிலமாக இருந்த இடம் இன்று தென்னந்தோப்பாக மாறிப் போய் இருந்தது. அந்த நிலத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று தொடங்கிய அகழாய்வில், அதுவரை இவ்வளவு பெரிய மக்கள் வாழ்விடப் பகுதி அகழாய்வில் கிடைத்ததி ல்லை என்று சொல்லும் அளவிற்கு, முதல் கட்டத்தில் அமைக்கப்பட்ட 102 குழிகளில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் இது நகர நாகரிகம் என்பதற்கான சான்றுகளைத் தந்தன.

முதற்கட்ட அகழ்வாராய்ச்சியில் 2200 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கிடைத்தன. அவற்றில் 1500-க்கும் மேற்பட்டவை மணிகள். மொத்த மணிகளில் 90 விழுக்காடு கண்ணாடியில் செய்யப்பட்டவை. மீதமுள்ள மணிகள் பளிங்கு, சூதுபவளம், பச்சைக்கல் மற்றும் சுடுமண்ணில் செய்யப்பட்டவையாகும். இதுதவிர, தந்தத்தில் செய்த சீப்பின் உடைந்த பகுதி, விளையாட்டுக் காய்கள், காதணிகள், செப்பு, எலும்பு முனைகள், இரும்பு உளிகள் போன்ற பொருள்கள் கிடைத்தன.

அவை மட்டுமல்ல, உறைகிணறுகள் கிடைத்தன; கட்டடங்கள் கிடைத்தன; விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செப்புப் பொருட்கள், இரும்புக் கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள் வட்டச் செல்கள், சுடுமண் காதணிகள், அக் கால மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு, கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்) ரவுலட்டட் மட்பாண்டங்கள் ஆகியனவும் வெளிக் கொணரப்பட்டன. கீழடி ஆய்வுகுறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், மக்கள் சாரைசாரையாக அப் பகுதிக்குச் சென்று பார்வையிடத் தொடங்கினர். ஆய்வுக்குத் தொல்லையில்லாமல், வருகை தந்த மக்கள் அப் பகுதியின் சிறப்பை அறியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய…

14 தமிழி (தமிழ் பிராமி) எழுத்துக்களுடன் கூடிய பானையோடுகளும் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒளிய (ன்) என்ற முழுப்பெயரும் மற்றவை தனிநபர்களின் பெயர்களில் ஓரிரு எழுத்துகள் காணப்பட்டன. மேலும் சதுர மற்றும் வட்ட வடிவிலான தேய்ந்த செப்புக் காசுகள், 5 தங்கப் பொருள்கள், ஒரு சில மண்ணுருவங்களும் அகழாய்வில் இதுவரை கிடைத்தன. அடுத்த ஆண்டான 2016 ஜனவரி மாதம் 2 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. அது மக்கள் ஈர்ப்பை அதிகப்படுத்தியது. தமிழ்நாட்டின் வரலாற்றை மட்டுமல்ல, இந்தியத் தொல்லியல் வரலாற்றிலேயே சிந்துவெளி நாகரிகத்துக்குப் பிறகு மிக முக்கியமான ஆய்வாக வைகை நாகரிகம் தொடர்பான ஆய்வு உலகம் முழுக்க பார்க்கப்பட்டது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால கிணறு, தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. உலகிலேயே மூத்த இனங்களுள் திராவிடர் இனம் ஒன்று என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல்வேறு சான்றுகள் கிடைத்தன. இரண்டு கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டது.

ஒன்றிய தொல்லியல் துறையின் அலட்சியம்

ஆனால், இத்தகைய சிறப்புக்குரிய ஆய்வைத் தொடர ஒன்றிய அரசின் தொல்லியல் துறை விரும்பவில்லை. மூன்றாம் ஆண்டு அகழாய்வுக்கு விண்ணப்பித்த போது, கீழடியோடு அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட வடஇந்தியப் பகுதியைச் சேர்ந்த பிற இடங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் அகழாய்வு நடத்தப்பட்ட ஒரே இடத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. புதியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் தொல்லியல் பொருட்கள் கிடைத்தது கீழடியில்தான். அதன் தொடர்ச்சியாக அகழாய்வை விரிவுபடுத்தும் முன்னுரிமை கீழடிக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல், அதற்கான காரணங்களையும் வெளிப்படையாகச் சொல்லாமல், அனுமதியும் கொடுக்காமல் கிடப்பில் போட முயற்சித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசின் தொல்லியல் துறை. பின்னர் எழுந்த எதிர்ப்புக் குரல் காரணமாக அதுவரை கீழடியில் அகழாய்வு மேற்கொண்டிருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மாற்றிவிட்டு, அந்த இடத்தில் இராஜஸ்தானத்திலிருந்து சிறீ ராம் என்பவரைக் கொண்டு வந்து அமர்த்தியது ஒன்றிய அரசு.அவரோ, 16 குழிகளை மட்டும் தோண்டினார். அதில் புதிதாக ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொல்லி, அந்தக் குழிகளில் மட்டுமல்ல… கீழடி ஆய்விலேயே மண்ணைப் போட்டு மூடியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

மக்களின் எழுச்சி, பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் எழத் தொடங்கின. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், தமிழுணர்வாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கைவிட்டதைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்தது. இன்றுவரை 10 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. 13,000க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்த விலங்குகளின் எச்சங்கள் புனேவில் உள்ள டெக்கான் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆராயப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, பல்வேறு வகையிலான விலங்குகள் கீழடி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ளன அல்லது வாழ்ந்துள்ளன. பசு, காளை, எருமை, ஆடு, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகளும் நீலான் மான் (Nilgai), மறிமான் (Antelope), புள்ளிமான் போன்ற மான் இனங்களும் இங்கே இருந்துள்ளன.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரத்தில் அமைந்துள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்தில் (Beta Analytic Testing Laboratory) ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் காலக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆறு கரிம மாதிரிகளின் காலம் பொ.ஆ.மு. 6-ஆம் நூற்றாண்டிற்கும், பொ.ஆ.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொருட்கள் நிலத்திலிருந்து 353 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப்பெற்றவை. 200 செ.மீ. ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருட்களின் காலம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முன் பகுதி என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இக்காலம் கணிக்கப்பட்ட அடுக்கிற்கு மேலும் கீழும் மண்ணடுக்குகள் காணப்படுவதால் கீழடி பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு 6-ஆம் நூற்றாண்டிற்கும், பொ.ஆ.மு. 1-2-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளது. தமிழி எழுத்துகளின் காலம் தமிழ் மொழியின் காலத்தை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக உறுதிப்படுத்துகிறது.

ஆதாரங்கள்

கீழடி என்பது தனி இடமல்ல; வைகை ஆற்றங்கரை நாகரிகத்தின் தொல்லியல் எச்சம். இன்று அந்த இடம் கீழடி என்று அழைக்கப்படுகிறது. இன்று வைகை ஆற்றின் போக்கு அங்கே அமையவில்லை. காலந்தோறும் ஆறு தன் பாதையை மாற்றிக் கொண்டே இருக்கும். எனவே, இரண்டாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றின் வழித்தடம் அப் பகுதியில் அமைந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கீழடியைச் சுற்றியும், வைகை நாகரிகத்தை உறுதி செய்யவும், மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பல முக்கியமான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அன்றைய மதுரை இப்போதிருந்த இடத்தில் அமையவில்லை. இது பிற்காலத்தில் அமைந்தது. பத்துப்பாட்டு இலக்கியங்களில் கூறப்படும் மதுரை திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கில் அமைந்திருக்கலாம் என்று தமிழறிஞர் ராஜமாணிக்கனார் 1950களிலேயே கருத்துத் தெரிவித்துள்ள சூழலில், மிகப்பெரிய நகரம் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ள கீழடி, அந்தக் காலத்தின் மதுரையாகக் கூட இருக்கலாம். (இந்தக் கருதுகோளுக்கான ஆதாரங்கள் சரிதானா என்பதற்கு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.) மதுரை பழந்தமிழ் வரலாறு தொடங்கி, இன்று வரை தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் வாழ்வுக்கும் மய்யமாக இருக்கும் பகுதி! அதை ஆய்வு செய்தல் என்பது எத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவோம்.

ஆனால், அப்படியொரு முதன்மையான தொல்லியல் ஆய்வைத்தான் எப்படியேனும் முடக்கிப் போட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசு! காலங்காலமாக வேத காலம் தான் இந்திய நிலப்பரப்பின் தொடக்கம் என்று சொல்லிவந்தார்கள். ஆனால், அசோகரும், சிந்துவெளியும், ஏன் ராஜராஜ சோழன் ஆட்சி வரைக்கும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், அதிலும் பெரிதும் வெள்ளைக்காரர்களின் ஆய்வுகளினால் தான் வெளிவந்துள்ளன. அது ஆரிய வர்த்தத்தின் மேன்மையை ஆட்டம் காணச் செய்துவிட்டது. புராணங்களையே வரலாறு என்று புளுகிக் கொண்டிருந்தவர்களின் கோணி மூட்டைகள் கிழித்துத் தொங்கவிடப்படுகின்றன. டி.என்.ஏ ஆய்வுகள் வரைக்கும், வரலாற்றில் தாங்கள் எங்கோ இருந்த வந்த நாடோடிகளே என்னும் உண்மை வெளிப்பட்டுவருவதை ஆரியம் அதிர்ச்சியோடு எதிர்கொள்கிறது. எனவே, வரலாற்றுத் திரிபுகளிலும், வரலாற்று மறைப்புகளிலும் ஈடுபடுவதில் மும்முரமாகியுள்ளது ஆர்.எஸ்.எஸ் என்னும் ஆரியக் கூடாரம்.

பூணூலின் தடயங்களே இல்லை

அந்த எரிச்சலின் இன்னொரு வடிவம் தான், ஈராண்டுகளுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளின் முடிவுகளை வெளியிட முடியாது என்ற திமிர்த்தனம். உலக ஆய்வு மன்றங்கள் வரை ஒப்புக் கொள்ளும் தொன்மையை, ஒன்றிய பா.ஜ.க அரசால் ஏற்க முடியாது – காரணம் அதில் மத அடையாளங்கள் இல்லை; சடங்குகள் நடந்ததற்கான சான்றுகள் கிடைக்கவில்லை! பூணூல் தரவுகள் கிடைத்திருந்தால், மோடி உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்திருப்பார். பூணூல்களின் தடயங்களே அங்கு இல்லையெனும் போது எப்படி அவாளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்? அதனால்தான், முனகுகிறார்கள்; மூட நினைக்கிறார்கள்; முடக்கத் துடிக்கிறார்கள்; வெளியிட மறுக்கிறார்கள்; பொறுக்காமல் புலம்புகிறார்கள்; சிந்துவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்றழைக்க ஆணையிடுகிறார்கள்; கீழடிக்குச் சான்றுகள் இல்லையென்று பசப்புகிறார்கள்.

அறிவியல் சான்று

வரலாறும், அறிவியலும் அவர்களைப் பரிகாசத்துடன் பார்க்கின்றன. எவர் முயன்றாலும் அறிவியலின் சுடரொளியை மறைக்க முடியாது. திராவிடர் வரலாறும், தமிழர் பண்பாடும் கதைகளின் வழி எழுதப்படவில்லை; அறிவியலின் வழி, சான்றுகளின் அடிப்படையில் உருக் கொள்கின்றன. மாணிக்கத்தை மறைத்திருந்த ஸநாதனச் சகதிகள் காய்ந்து உதிர்கின்றன. இந்திய வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று நாம் சொல்வது அலங்காரமல்ல; ஆதாரங்களின் அடிப்படையிலானது. காலம் அதை உறுதி செய்யும்; கயவர்தம் சூழ்ச்சிகளை முறியடிக்கக் களத்திற்கு வாருங்கள்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *