திருச்சி, ஜூன் 17- மலேசியாவிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பெரியார் உலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
மலேசிய திராவிடர் கழகத்தினர் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மலேசிய திராவிடர் கழக பேராக் மாநில செயலாளர் இரா.கோபி தலைமையில், மலேசிய திராவிடர் கழக சுங்கை சிப்புட் கிளை தலைவர் க.ஏலன், துணைத் தலைவர் ஆ.மணிவேலு, மகளிர் தலைவர் அஞ்சலை தேவி, மலேசிய திராவிடர் கழக ஈப்போ கிளை மகளிர் செயலாளர் ஞா.கிலேடிஸ், சுங்கை சிப்புட் கிளை செயலாளர் ம.இரவீந்திரன், செயலவை உறுப்பினர்கள் மா.முருகன், இரா.கணேசன், மு.இரவிச்சந்திரன், ம.அகஸ்டின், கிளை கணக்காளர்கள் க.வேத மாணிக்கம், இரா.ரவி ஆகியோர் ஜூன் 16 அன்று மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தனர். அவர்களை திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செந்தமிழினியன், பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றார்.
சிறுகனூர் பெரியார் உலகத்தில் வரவேற்ற கழக பொதுச் செயலாளர்
சிறுகனூர் பெரியார் உலகத்தை பார்வையிட சென்ற மலேசியக் கழக பொறுப்பாளர்களை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அன்புடன் வரவேற்று பெரியார் உலகத்தை சுற்றி காண்பித்தார். மலேசிய திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பெரியார் உலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்
சிறுகனூரை தொடர்ந்து திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்கு வருகை தந்த மலேசிய திராவிடர் கழக குழுவினரை நாகம்மையார் குழந்தை இல்ல காப்பாளரும், கல்வி வளாக ஒருங்கிணைப்பாளருமான இரா.தங்காத்தாள் வரவேற்றார். பெரியார் தொடக்கப்பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம், நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியார் மருந்தியல் கல்லூரி, சாமி கைவல்யம் முதியோர் இல்லம், பெரியார் மருத்துவமனை மற்றும் விடுதலை நாளிதழ் அலுவலகம் உள்ளிட்டவற்றை மலேசிய திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.
சுமார் 27 ஏக்கர் பரப்பிலான கல்வி வளாகம் உருவான வரலாற்றை தந்தை பெரியார் காலத்தில் இருந்து இன்று வரை செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் பணியையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் இன்றைக்கு மிகப் பெரிய அளவில் ஏராளமான மாணவர்களுடன் கல்வி வளாகம் செயற்பட்டு வருவதையும் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அனைவருக்கும் எடுத்துக்கூறினார். பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் மலேசிய பொறுப்பாளர்கள் மற்றும் விருந்தினர்கள் மதிய உணவருந்திவிட்டு சிறிது நேரம் கலந்துரையாடினர். திராவிடர் கழக செயல்பாடுகளையும் பெரியார் உலகத்தில் அமையவுள்ள பல்வேறு காட்சி அரங்குகள், மிகப்பெரிய தந்தை பெரியார் முழு உருவ சிலை அமையும் முறையையும் அதற்கான மூன்றில் ஒரு பங்கு பணி முடிந்ததையும், அனைத்து அரசு அனுமதிகளைப் பெற்றதை யும், தற்போது விரைவாக பணி நடந்து வருவதையும் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் எடுத்துக் கூறினார்.