அந்தியூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இனமான உரை!

viduthalai
6 Min Read

கோபி அந்தியூரில் மாநாடு போல நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழாக்கள்!
ஆர்.எஸ்.எஸ். ஒரு நோய்க்கிருமி; சுயமரியாதை இயக்கம் அதற்கான மருந்து! மருந்தைக் கண்டுபிடித்தவர் உலகத் தலைவர் தந்தை பெரியார்!
நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்ந்தால் ஸநாதனம் வீழும்!

அந்தியூர், ஜூன் 16,   அந்தியூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில், கழகத் தலைவர் கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றினார்.

கோபி மாவட்டத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு; நிறைவு விழாவும், நூற்றாண்டு கண்ட குடிஅரசு ‘ஒரு முத்துக்குளியல்’ புத்தக வெளியீட்டு விழாவும் 15.06.2025 அன்று மாலை 5 மணியளவில் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் திறந்தவெளி பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயமரியாதைச் சுடரொளி ப.பிரகலாதன் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையேற்றுச் சிறப்பித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பொன். முகிலன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

‘‘நூற்றாண்டு கண்ட குடிஅரசு – ஒரு முத்துக்குளியல்’’ எனும் நூலை தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் வெளியிட்டு உரையாற்றினார். முதல் பிரதியைத் திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து வெளியிட்ட நூலையும், அத்துடன் இணைந்து 6 புத்தகங்கள் இணைந்த தொகுப்புகளையும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரிசையில் நின்று உரிய தொகை கொடுத்துப் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடக்க உரையாற்றினார். அனைத்துக் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் என்.வி. சரவணன் உரையாற்றினார்.  திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சுயமரியாதை இயக்கம் செய்த சாதனைகளையும் அந்தப்பகுதியில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

காவிகளின் எதிர்ப்பால் அதிகரித்த ஆதரவு!

சில நாட்களுக்கு முன்பு பி.ஜே.பி. மற்றும் சங்பரிவார் அமைப்புகள்  சில, இந்நிகழ்ச்சிக்குக் கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று உள்ளூர் காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்தியூர் ஒன்றியச் செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட தோழர்களைக் காவல் துறையினர் அழைத்து இதுகுறித்துப் பேசியிருக்கின்றனர். கழகத் தோழர்கள் உறுதியாக கூட்டத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளனர்.   தி.மு.க., அந்தியூர் தமிழர் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் ஒத்துழைப்புடன் மிகப்பெரிய மாநாடு போல் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மக்கள் அமர்வதற்கு இருபுறமும் இருக்கைகள் போடப்பட்டு  நடுவில் நீண்ட நெடிய சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு, அந்தியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரை அதன் வழியாக கருஞ்சட்டைப் படையினர் சூழ அழைத்து வந்தார். ஆசிரியர் வழிநெடுகிலும் அமர்ந்திருந்த மக்களுக்கு இரு கை கூப்பி வணக்கம் தெரிவித்த வண்ணம், மக்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டே மேடைக்கு வந்தார். பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் குப்புசாமி – சீதாலட்சுமி இணையரின் மகன் செந்தமிழன், தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் தொகையைத் தமிழர் தலைவரிடம் பெரியார் உலகம் நன்கொடையாக வழங்கினார். கழகத் தோழர்கள் விடுதலை சந்தா, பெரியார் உலகம் நன்கொடை என்று கழகத்தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர். கழகத் தலைவர் வருகைக்கு முன்னதாக மாலை 5.30 மணியிலிருந்து புதுகை பூபாளம் குழுவினரின் சிந்தனையூட்டும் கலைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஸநாதனம் வீழும்!

இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார். தொடங் கும் போதே, “மாநாடு போல் மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார். மேலும் அவர், ”100 ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த நாடாக சொல்லப்படுகின்ற அமெரிக்காவில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. தமிழ்நாட்டில் 1921 லேயே  நீதிக்கட்சி ஆட்சி  பெண்களுக்கு ஒட்டுரிமை தந்தது.’’ என்று வரலாற்றின் ஒரு மிகமுக்கியமான நிகழ்வைப் பலத்த கைதட்டல்களுக்கிடையே சுட்டிக்காட்டினார். பெண்கள் கூடுதலாகக் கைதட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் இழிவுகளை ஒவ்வொன்றாக நீக்கிக்கொண்டே வந்திருக்கும் ஆட்சி என்பதற்கு தி.மு.க. திராவிட மாடல் அரசால் கல்லூரி, நூலகம் தொடங்கப்படுகிறது. இன்றைய திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு செய்துவரும் அரிய திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பெண்களைப் பற்றியே சொல்லிவிட்டு, ”சமூகத்தில் சரிபாதி பெண்கள். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின் இலக்கு” என்று   எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர், “இதையெல்லாம் செய்யக்கூடாது என்றுதான் பி.ஜே.பி,, ஆர்.எஸ்.எஸ். ஆகிய காவி அமைப்புகள் தடுக்கின்றன. திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்தால் ஸநாதனம் வீழும்.” என்று உறுதியாகக் கூறினார். அதற்கு ஆதாரமாக ஆர்.எஸ்.எஸ்., சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் தோற்றம், இலக்குகள், செயல்பாடுகள், தற்போதைய நிலவரம் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.  மேலும் அவர், ”இந்தப்பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், மலைவாழ்மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஒரு சிறிய மருத்துவமனையை உருவாக்க இங்கிருக்கும் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். நாங்களும் எங்கள் அறக்கட்டளை சார்பில் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று ஒரு அறிவிப்பின் மூலம்  மக்களை உற்சாகம் கொள்ள வைத்தார். மேலும் திராவிட ஆட்சி இங்கு கலைக்கல்லூரியைக் கொண்டு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய ஒத்துழைப்பீர் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கவனம் ஈர்த்த மாநாட்டு ஏற்பாடுகள்!

முன்னதாக தமிழர் தலைவர் தங்கியிருந்த மொடச்சூர் பொதுப்பணித்துறை கட்டடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தியூர் மாநாட்டு அரங்கம் வரையிலும் கழகத் தலைவரை அழைத்துச் செல்லும் வாகனப் பேரணியில் முன் சென்ற ஒரு தனி வாகனத்தில் பேண்டு வாத்தியக் கருவிகள் முழங்கிக்கொண்டே சென்றன. பெரும்பாலும் வாகனம் ஊருக்குள் செல்ல வேண்டி இருந்ததால், கவனம் ஈர்க்கப்பட்ட மக்கள் திராவிடர் கழகத் தலைவர் வாகனத்தில் செல்கிறார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அந்தியூருக்கு முன்னால் இருக்கும் தவிட்டுப் பாளையத்திலிருந்து கழகக் கொடிகள் சாலையின் இரு பக்கங்களிலும் பட்டொளி வீசிப் பறந்தன. அதே போல் சுவர் எழுத்துகளும், சுவரொட்டிகளும் நிகழ்ச்சிக்கு கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. இரட்டைக்குழல் துப்பாக்கியான தி.மு.க. கொடிகளும் ஆங்காங்கே பறந்து ஆசிரியரை சிறப்பாக வரவேற்றன. மேடைக்கு எதிரில் வண்ண விளக்குகளின் அலங்கார தோரணங்கள் கட்டடப்பட்டு இருந்தன.

நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள்!

நிகழ்வில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்   மேடை ஒருங்கிணைப்பை சிறப்பாக நிர்வாகம் செய்தார். திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், தவிட்டுப்பாளையம் கழகத் தோழர்கள் பன்னீர்செல்வம், பட்டுசெண்டர் பெருமாள், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வீரகுமாரன், தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குருசாமி, தி.மு.க. அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள், தி.மு.க. பேரூராட்சி செயலாளர் காளிதாஸ், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பெ.பொன்னுச்சாமி, வி.சி.க.மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். மாவட்ட மாணவரணி தலைவர் சூரியா, மாநில மாணவரணி துணைச் செயலாளர் சிவபாரதி, சட்டக் கல்லூரி மாணவர் விக்னேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.கே. மூர்த்தி, பெரியார் பெருந்தொண்டர் ராஜமாணிக்கம், நம்பியூர் ஒன்றிய செயலாளர் பிரசாந்த், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் அஜித்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் எழிலரசு, ப.க. ஆசிரியர் அணி சின்னச்சாமி,  மாவட்ட மகளிர் பாசறை தலைவர் திலகவதி, ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், செயலாளர் கவுசிக், பகுத்தறிவு ஆசிரியரணி பாலகிருஷ்ணன், ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் நாகராஜன் (தி.மு.க.), மூத்த வழக்குரைஞர் ப.பா. மோகன், பட்டரமங்கலம் கிளைக் கழக தலைவர் வரதன், செயலாளர் நந்தகுமார் ஒருங்கிணைப்பில் தனி பேருந்து மூலம் குடும்பம் குடும்பமாக சுமார் 60 கழகத் தோழர்கள் கலந்து கொண்டது குறிப்பிட்டதக்கது.  அத்துடன் ஈரோடு, கோபி கழக மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்து இறுதி வரை அனைவரது உரைகளையும் செவிமடுத்தனர். இடையில் இலேசாக தூறல் இருந்தது. இறுதியாக திராவிடர் கழக அந்தியூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

திராவிடர் கழகம்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *