விமான விபத்தும்  – மூடநம்பிக்கையும்  

viduthalai
3 Min Read

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12ஆம் தேதி  நடந்த விமான விபத்து – அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல – விலை மதிக்கப்பட முடியாத மனித உயிர்கள் கண் மூடிக் கண் திறப்பதற்குள் எரிந்து சாம்பலாயின என்பது எவ்வளவுப் பெரும் துயரம்!

இந்தத் துயர நிகழ்வினூடே மூடநம்பிக்கை – அதிர்ஷ்டம் – துரதிர்ஷ்டம் என்பதெல்லாம் பெரிய அளவில் பேசப்படுகின்றன.

மனித மூளையைத் தாக்கி இருக்கக் கூடிய மூடநம்பிக்கை என்னும் கொடிய வைரசை நினைத்தால் ஒரு பக்கம் ஆத்திரமும், மறுபக்கம் பரிதாப உணர்வும்தான் போட்டிப் போடுகி்ன்றன.

விமானத்தில் பயணித்தவர்கள் எல்லாம் நாத்திகர்கள் என்று சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தான். வீட்டை விட்டுக் கிளம்பும்போதுகூட எல்லா வேண்டுதலையும் முடித்த பிறகே கிளம்பி இருப்பார்கள்.

துயரமான ஒரு கால கட்டத்திலே இந்தப் பிரச்சினை குறித்துக்கூட விமர்சிக்க வேண்டுமா என்று நினைத்தாலும் அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கட்டையான எண் என்று ஊடகங்கள் பரப்புவதைப் படிக்கும் பொழுது, இந்தப் பிரச்சினை பற்றியும் சிந்தித்து சுட்டிக் காட்ட வேண்டியவற்றைக் சுட்டிக் காட்டிதான் தீர வேண்டும் என்ற எண்ணம் நம்மைத் தூண்டுகிறது.

குஜராத் மேனாள் முதலமைச்சர் விஜய ரூபானிக்கு அவர் கெட்டியாக நம்பும் அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் நடந்து விட்டது என்று எழுதுகிறார்கள்.

குறிப்பிடப்பட்ட  எண் 1206 என்பது அவரின் அதிர்ஷ்ட எண்ணாம், அவரது வாகனத்தின் பதிவெண்கூட அது தானாம்.

விபத்தில் அவர் மரணம் அடைந்த நாள்கூட 12 தான். விமானத்தில் அவரின் இருக்கை எண் கூட  12 தான். பயணம் செய்த நேரமும் 12.10 மணிதான்.

அதிர்ஷ்ட எண் 12 என்பதுடன்தான் எல்லா வகையிலும் அவர் பயணித்துக் கொண்டிருந்தவர்.

அப்படி இருக்கும்போது ஊடகங்கள் என்ன எழுத வேண்டும் – எப்படி அணுக வேண்டும்?

எண் ஜாதகமாவது மண்ணாங்கட்டியாவது! இது போன்ற மூடநம்பிக்கைகளிலிருந்து மனிதர்கள் விடுதலை  பெற வேண்டும் என்று எழுதுவதற்குப் பதிலாக, அவரது அதிர்ஷ்ட எண்ணே அவரைப் பொறுத்தவரையில் துரதிர்ஷ்டமாகி விட்டதே என்று ஒப்பாரி  வைப்பது அறிவு நாணயமானதாக இருக்க முடியுமா?

பொதுவாக 13அய் நம்பிக்கைவாதிகள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். சென்னை மாநகராட்சியில்கூட வீட்டு இலக்கம் குறிப்பிடும்போது 13க்குப் பதிலாக 12ஏ என்றே குறிப்பிடுவார்கள்.

நமது தலைவர் ஆசிரியர் அவர்களின் அடையாறு வீட்டு எண்கூட சமீப காலம் வரை 13ஆகத்தான் இருந்தது என்பது நினைவிருக்கட்டும். மறுபடியும் வீட்டு இலக்கங்களை மாற்றிய போதுதான் எண் மாற்றப்பட்டது.

இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் இந்த எண் ஜோதிடம்கூட நாட்டுக்கு நாடு மாறுபடுவதுதான்.

அய்ரோப்பியாவில் வெறுக்கப்படும் எண் 11ஏ என்பதாகும். ஆனால் என்ன வேடிக்கைக் கூத்து என்றால், விமானத்தில் பயணித்த 241 பேர்களில் ஒரே ஒருவர் உயிர் பிழைத்தாரே விஷ்வாஷ்குமார் ரமேஷ் என்பவரின் இருக்கை எண் 11ஏ என்பதாகும்.

புத்திசாலித்தனமாகவும், துணிவுடனும், விபத்து நேரப் போகிறது என்ற நிலையில் மன சஞ்சலத்துக்குச் சிறிதும் இடம் கொடுக்காமலும் உணர்ச்சி வயப்படாமல் அவசர வெளியேற்றத்துக்கான கதவை சற்றும் தாமதிக்காமல் திறந்து கீழே குதித்து உயிர் தப்பினாரே அந்தச் செயலைப் பாராட்டுவதற்குப் பதிலாக, துரதிர்ஷ்ட எண் அதிர்ஷ்ட எண்ணாக அவரைப் பொறுத்த வரையில் ஆகி விட்டது என்று புது பாஷ்யம் செய்வது அசல் வெட்கக் கேடும், பைத்தியக்காரத்தனமும் அல்லாமல் வேறு என்னவாம்!

போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் அந்த  விமானத்தில் பயணிக்க வந்த ஒரு பெண் தாமதமாக வந்ததால் தப்பித்தாராம்.

அந்தப் பெண்ணுக்கான அதிர்ஷ்டம்  – அவரைத் தாமதமாக வரச் செய்து விட்டது என்று கூறுவதெல்லாம் – எப்படியாவது மூடநம்பிக்கையை முட்டிக் கால் போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற நினைப்புதானே!

மூடநம்பிக்கை ஒரு சுரண்டலுக்கான கருவி! அது தகர்ந்து விட்டால் தங்கள் பிழைப்புப் போய் விடுமே என்ற அச்சத்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் மூடநம்பிக்கையைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற முரட்டுப் பிடிவாதம் தானே!

தாங்கொணாத் துயர நிகழ்வு – அகமதாபாத் விமான விபத்து! கண்மூடிக் கண் திறப்பதற்குள், எத்தனை எத்தனையோ கனவுகளில் பறந்திருந்த மக்களின் உயிர் பறிக்கப்பட்டதற்காக மனிதாபிமான முறையில் துயரப்படுகிறோம். அவர்களைப் பிரிந்து ஈடு செய்ய இயலாத துயரத்தின் ஆழத்திற்கு அடித்துச் செல்லப்பட்ட உற்றார், உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நேரத்திலும் மூடநம்பிக்கை வியாபாரம் செய்யும் குள்ள மனிதர்கள் திருந்த வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் – வேண்டுகோளும் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *