‘பல் போனால் சொல் போகும்’ என்பது பழமொழி. பல்லையும், சொல்லையும் காப்பாற்றுவதே எங்கள் உறுதிமொழி.
பற்கள் இயற்கை தந்த கொடை. உடல் உறுப்புகளில் முக்கியமானது.
பல்லில் சொத்தை அல்லது பாதிப்பு ஏற்பட்டால் வலி இருக்கிறதோ இல்லையோ அதை நீக்கி விடும் போக்குதான் பலரிடம் உள்ளது. இது ஒரு தவறான அணுகுமுறை.
இயற்கை சீதனமாக அளித்த பற்களை முடிந்தவரை காக்க முயற்சி செய்ய வேண்டும்.
பல் வேர் மருத்துவம்
சொத்தை பல் வலிக்குப் பயந்து அந்தப் பல்லை நீக்கி விடுவது இக்காலத்தில் அவசியம் இல்லை. நவீன மருத்துவ அறிவியலின் விளைவு வேர் மருத்துவம். இதன்மூலம் பல்லில் இருக்கும் சொத்தையை அகற்றிவிட்டு அந்தப் பல்லை மறுபடியும் சீரமைக்க முடியும்.
வேர் சிகிச்சை என்றவுடன் பலருக்கு அச்சம் ஏற்படும். அது தேவையற்றது. வலியை குறைப்பதுதான் வேர் சிகிச்சையின் நோக்கம்.
பல்லுக்குள் இருக்கும் பாக்டீரியத் தொற்றை அகற்றி, வேர் நுனி வரைக்கும் சுத்தம் செய்து நிரப்பும் ஒரு சிகிச்சையாகும். எதிர்காலத்தில் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதே இதன் குறிக்கோள்.
வேர் சிகிச்சையின்போது பல் வேர்களின் வடிவத்தைப் பார்த்து சுற்றியுள்ள எலும்பில் நோய்த் தொற்றின் அறிகுறிகள் உள்ளதா? என்பதை எக்ஸ்ரே மூலம் பார்த்து, ஈறுகளில் மயக்க மருந்து கொடுத்து மரக்கச் செய்து பின்னர் சிறிய கருவியின்மூலம் பல்லின் மேற்பரப்பு திறக்கப்பட்டு பல்லினுள் இருக்கும் கூழ் அகற்றப்படும். இதனால் எவ்வித வலியும் இருக்காது. பின்னர் தொற்றுகள் முற்றிலும் அழிக்கப்படும்.
பல்லில் சிதறல் ஏற்படுவதை தடுப்பதற்கு பல்லின்மேல் கிரீடம் எனப்படும் மேல் மூடி பொருத்தப்படும். பல் நிறத்திலோ, சில்வர் நிறத்திலோ பல்லுக்குமேல் இந்த தொப்பி பொருத்தப்படும்.
இதனால் பல்லின் உள்ளே பாக்டீரியாக்கள் செல்வது தடுக்கப்படும். இது பல வருடங்களாக மேற்கொள்ளப்படும் வெற்றிகரமான சிகிச்சை முறையாகும்.
ஒரே நாளில் வேர் சிகிச்சை அளிக்க முடியும். தேவைப்பட்டால் இரண்டு அல்லது மூன்று அமர்வுகள் தேவைப்படும்.
இந்த சிகிச்சை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது. இந்த சிகிச்சைக்கு பற்களை நீக்குவதற்கு ஏற்படும் செலவைவிட குறைவாகவே ஆகும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேர் சிகிச்சை செய்துகொள்ள முடியாது என்று கூறப்படுவது தவறு. இந்த சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
பல்லின் வேர் உறுதியாக இருக்கும் பட்சத்தில் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என பல் மருத்துவருக்கு தெரிந்த பிறகு எந்த வயதிலும் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்கள்
சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் மற்றும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வேர் சிகிச்சைக்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. மருத்துவரிடம் சோதனை செய்து கொண்ட பிறகு அவர்களும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிர்பாராத விதமாக பல்வலி ஏற்பட்டால், மகப்பேறு மருத்துவரை ஆலோசித்த பின்னர் அவசர வேர் சிகிச்சை மேற்கொள்ளலாம்.
‘ரூட் கேனல்’ சிகிச்சை தற்போது லேசர் தொழில்நுட்பத்தில் நவீன முறையில் அளிக்கப்படுகிறது.
வேர் சிகிச்சை செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்படுவதும் தவறு. சிகிச்சை முடிந்ததும் அவர்கள் அன்றாட வேலைகளைச் செய்யலாம்.
வீக்கம், வலி, வரும் சூழ்நிலை ஏற்படுமானால் அதன் விவரத்தை மருத்துவர் முன்னதாகவே தெரிவித்து ஆலோசனை வழங்குவார்.
சிகிச்சை முடித்தவர்கள் வழக்கம் போல உணவுகளை உட்கொள்ளலாம். சிகிச்சை அளித்த பல்லுக்கு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.