எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் என்ன? அந்தக் கூட்டணியினுடைய தலைவர் யார்?  பா.ஜ.க.வினுடைய அமித்ஷாவா? அல்லது எடப்பாடி பழனிசாமியா?

viduthalai
14 Min Read

அடமானத்திலிருந்து அ.தி.மு.க.வை மீட்பதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை;
தன்னை மீட்டுக் கொள்வது எப்படி என்றுதான் கவலைப்படுகிறார்

Contents
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!உலகில் எங்குமில்லாத ஒரு விசித்திரமான பெயர் ‘‘சுயமரியாதை இயக்கம்!’’காங்கிரஸ் கட்சியிலிருந்து பெரியார் வெளியேறியது ஏன்?நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம்சுயமரியாதை இயக்கம் செய்த சாதனைகள் என்ன?இன்றைக்கு சமூக மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதுமுதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதிக்கட்சிதான்!நீதிக்கட்சி, யாரையும் பிரித்துப் பார்த்ததில்லை!செங்கற்பட்டில் 1929 இல் சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்கள்!அன்றைக்குக் கேலி பேசினார்கள்!பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், சிறப்பாக செயல்படுவார்கள்!ஒன்றிய பா.ஜ.க. அரசின்  ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம்பற்றி..பெரியார், திராவிட இயக்கங்கள் போராடி குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்கள்!ஒன்றிய பா.ஜ.க. அரசின் நாக்கில் தேன் தடவும் திட்டம்!நமது முதலமைச்சரின் திட்டவட்ட மறுப்பு!மும்மொழி திட்டத்தை ஏற்காத ‘திராவிட மாடல்’ அரசு!ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மறைமுக அஜெண்டா!திராவிட இயக்கத்திலோ  வெளிப்படையான திட்டம்!ஜாதிவாரி கணக்கெடுப்பும் – ஒன்றிய பா.ஜ.க. அரசும்!‘‘வரும், ஆனால், வராது!’’பதில் சொல்லவேண்டியவர் எடப்பாடி பழனிசாமிதான்!தி.மு.க. கூட்டணிக்குத் தலைவர் மு.க.ஸ்டாலின்அடமானத்திலிருந்து அ.தி.மு.க.வை மீட்பதற்குப் பதில், தன்னை மீட்டுக் கொள்ள முயற்சிக்கிறார் பழனிசாமி!கூட்டணியினுடைய தலைவர் யார்?

கோபியில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

கோபி, ஜூன் 16 எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் என்ன? அந்தக் கூட்டணியினுடைய தலைவர் யார்? அந்தக் கூட்டணியில், எந்தெந்த கட்சியை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டிய தலைமை எது?  பா.ஜ.க.வினுடைய அமித்ஷாவா? அல்லது இங்கே இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியா? அ.தி.மு.க.வை அடமானம் வைத்துவிட்டார். அந்த அடமானத்தி லிருந்து அந்தக் கட்சியை மீட்பதைப்பற்றி அவர் கவலைப்பட வில்லை. தன்னை மீட்டுக் கொள்வது எப்படி என்றுதான் கவலைப்படுகிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!

நேற்று (15.6.2025) கோபிச்செட்டிப்பாளையத்திற்குச் சென்ற   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

உலகில் எங்குமில்லாத ஒரு விசித்திரமான பெயர் ‘‘சுயமரியாதை இயக்கம்!’’

பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க உணர்வுகளை உரு வாக்கி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, சமூக மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே, உலகில் எங்குமில்லாத ஒரு விசித்திரமான பெயரினைத் தாங்கிய ‘‘சுயமரியாதை இயக்கம்’’ என்று ஆரம்பித்தார் தந்தை பெரியார்.

அரசியல் கட்சியாக இருந்த நீதிக்கட்சி கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்குக் குறைந்த நிலையில், ‘‘பெரியார் தலைமை தாங்கினால்தான், நீதிக்கட்சியைத் தொடர முடியும் என்று முடிவெடுத்து, தந்தை பெரியார் அவர்கள் சிறையில் இருந்தபோதே, அவரை நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

நீதிக்கட்சி, அரசியலுக்குப் போய் பல மாற்றங்களை செய்த நூறாண்டுக்கு மேற்பட்ட இயக்கமாகும்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து
பெரியார் வெளியேறியது ஏன்?

அதேநேரத்தில், காங்கிரசில் கட்சியில் இருந்து கொண்டு தொண்டு செய்வதினால் பயனில்லை. அது உயர்ஜாதிக்காரர்களுடைய அமைப்பாக ஆகிவிட்டது என்பதற்காக அன்று அக்கட்சியிலிருந்து வெளியேறினார் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தை உண்டாக்கி னார்.

நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வுடன், அதற்குப் புது ரத்தம் பாய்ச்சவேண்டும் என்கிற உணர்வோடு, மக்கள் இயக்கமாக அதனை மாற்றினார்.

நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம்

வெறும் பதவிக்காக இருக்கக்கூடிய இயக்கமல்ல – தேர்தலில் நிற்பது மட்டும் அந்தக் கட்சியினுடைய நோக்கமல்ல – சமூக மாற்றத்தை உண்டாக்கவேண்டும்; சமூகப் புரட்சியை உண்டாக்கவேண்டும் என்று அதனை உண்டாக்கினார். நீதிக்கட்சி – சுயமரியாதை இயக்கம் இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம்.

இரட்டைக் குழல் துப்பாக்கியாக – அன்றைக்கு எப்படி நீதிக்கட்சி தனியாக இருந்ததோ, அது போல, இன்றைக்கு இந்தக் கொள்கையை நடை முறைப்படுத்துவதற்காகத்தான் – திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கின்றன.

இந்த ஆண்டு, சுயமரியாதை இயக்கத்தினுடைய நூறாண்டு விழா நிறைவு. கடந்த மே 2 ஆம் தேதி ‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்பட்ட நாள். அதை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறோம்.

தேர்தலில் நிற்காத இயக்கமாக திராவிடர் கழகம் இருந்தாலும், தேர்தல் அரசியலில், எப்படிப்பட்ட ஆட்சி அமையவேண்டும் என்பதில், திராவிடர் கழகத்திற்கு அக்கறை உண்டு.

எனவேதான், இரண்டு களங்களிலும் சிறப்பாக பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் – எல்லா இடங்களிலும், சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு – திராவிட இயக்கத்தினுடைய எதிர்கால வெற்றிகள் – அதன்மூலமாக மக்கள் பெறவேண்டிய பயன்கள் – இவற்றையெல்லாம் மக்களிடையே பிரச்சாரம் செய்கி றோம். அந்த வரிசையில், இந்த ஊருக்கு இன்றைக்கு வந்திருக்கின்றோம்.

சுயமரியாதை இயக்கம் செய்த சாதனைகள் என்ன?

செய்தியாளர்: சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நிறைவு விழா என்று சொல்கிறீர்கள்; அதனு டைய சாதனைகள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?

தமிழர்  தலைவர்: சுயமரியாதை இயக்கத்தினால் பலன் பெறாதவர்கள் தமிழ்நாட்டில், ஒருவர்கூட, ஒரு குடும்பம் கூட கிடையாது.

நேரிடையாக பல பேருக்குத் தெரியாது. அது எப்படி என்றால், சுவாசிக்கின்ற காற்று போன்றது.

நாம் உயிரோடு இருக்கின்றோம் என்பதற்கு அடை யாளமே சுவாசிப்புதான். இறந்து போனார்களா? உயிரோடு இருக்கிறார்களா? என்று பார்ப்பதற்கு, மூச்சு வருகிறதா என்று மூக்கருகே கையை வைத்துப் பார்ப்பதுதான்.

அதுபோன்று, சுவாசிக்கின்றபோது, எல்லோரும் சுவாசிக்கின்ற காற்றுக்கு நன்றி சொல்வது கிடையாது. மூச்சுத் திணறல் ஏற்படும்போதுதான், அந்த மூச்சுக் காற்றினுடைய முக்கியத்துவத்தை அறிவார்கள்.

அப்படிப்பட்ட மூச்சுக் காற்றின் முக்கியத்துவம் போன்று, நன்மைகள். உதாரணமாக – இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் கல்வித் துறை மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஒரு காலத்தில் நீதிக்கட்சித் தொடங்கியபோது, ஏழு சதவிகிதம்தான் எழுத்தறிவு. இன்றைக்குப் பார்த்தீர்க ளேயானால், ஆண்கள் 80 சதவிகிதம். பெண்கள் 70 சதவிகிதம்.

எங்கே பார்த்தாலும் பள்ளிக்கூடங்கள்; எங்கே பார்த்தாலும் கல்லூரிகள்.

எந்த நாட்டில்?

எந்த சமுதாயத்தில்?

இன்றைக்கு சமூக மாற்றம்
ஏற்பட்டு இருக்கிறது

மனுதர்மத்தில், கீழ்ஜாதிக்காரர்கள் படிக்கக் கூடாது; பெண்கள் படிக்கக் கூடாது; உயர்ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் அந்த உரிமைகள் என்று இருந்ததை தலை கீழாக மாற்றி, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி என்று வந்திருக்கின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றெல்லாம் வந்து, இன்றைக்கு சமூக மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், ஒரு துளி ரத்தம் சிந்தாமல், இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.  பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த மூட நம்பிக்கைகள், மோசமான சடங்குகள், சம்பிரதாயங்கள், பகுத்தறிவற்ற தன்மை – இவை அத்தனையும் ஒரு நூறாண்டு கால பிரச்சாரத்தினால், இடையறாது செய்ததினால் அந்த மாற்றங்கள் ஏற்பட்டன.

நீதிக்கட்சி காலந்தொட்டு தியாகராயரிலிருந்து ஆரம்பித்து, இன்று ‘திராவிட மாடல்’ ஆட்சிவரை தலைவர்கள் வரிசையாக உண்டு.

இவர்கள் எல்லோரும் மக்களுக்காக உழைத்தார்கள். அதனால்தான், இன்றைக்குப் பெண்ணடிமை என்பது காணாமல் போயிற்று.

முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது நீதிக்கட்சிதான்!

1921 இல், பெண்களுக்கு வாக்குரிமையை முதன்முத லில் கொடுத்தது – உலகத்திலேயே நம்முடைய நாடு – அதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு – தமிழ்நாட்டிலும் குறிப்பாக நீதிக்கட்சி ஆட்சியில்தான்.

இன்றைக்குப் படிப்புரிமை, உத்தியோக உரிமை எல்லாம் வளர்ந்திருக்கின்றது.

எந்தக் காங்கிரசிலிலிருந்து தந்தை பெரியார் அவர்கள் வெளியே வந்தாரோ, அந்தக் காங்கிரசின் இன்றைய இளந்தலைவர் ராகுல்காந்தியே சொல்கிறார், ‘‘மனுதர்ம அடிப்படையில் யாருக்கும் உத்தியோகம் கொடுப்பதில்லை’’ என்று.

ஆகவேதான், மிகப்பெரிய ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

கல்வியில் சாதனை, பெண்களுக்குச் சம உரிமை என்கிற சாதனை, பகுத்தறிவுச் சிந்தனை – பெண்களுக்குச் சொத்துரிமை, படிப்புரிமை இவை அத்தனையும் ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.

இன்றைய இளைய தலைமுறையினர் நல்ல அளவிற்கு அறிவியல் சிந்தனைகளுக்கு ஆளாகக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றார்கள். இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்தினுடைய சாதனைகள்!

நீதிக்கட்சி, யாரையும் பிரித்துப் பார்த்ததில்லை!

எல்லாவற்றையும்விட, ‘‘எல்லாருக்கும் எல்லாம்’’, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான் திராவிடக் கோட்பாடு. நீதிக்கட்சி, யாரையும் பிரித்துப் பார்த்ததில்லை. தவறாக சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ‘‘பார்ப்பனர்களையெல்லாம் ஒழிக்கவேண்டும் என்று சொல்வது என்று’’ பார்ப்பனியம் என்பது காலங்காலமாக  ஆதிக்கம் செய்துவரும் மனுதர்மம். அதன்படியே பேதப்படுத்தினார்கள் –

பிறவி பேதம்,

உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி;

தொடக்கூடிய ஜாதி – தொடக்கூடாத ஜாதி;

படிக்கக் கூடிய ஜாதி- படிக்கக் கூடாத ஜாதி.

இவை அத்தனையையும் மாற்றிக் காட்டியது சுயமரியாதை இயக்கம்.

செங்கற்பட்டில் 1929 இல் சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்கள்!

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், பெண்கள் பெரிய பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள். ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ‘‘இராணுவம், காவல்துறையில்கூட பெண்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும்’’ என்று பெரியார் அவர்கள், 1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் தீர்மானம் போட்டார். பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்றும் தீர்மானம் போட்டார்.

அன்றைக்குக் கேலி பேசினார்கள்!

இதைக் கேட்டு எல்லோரும் அன்றைக்குக் கேலி செய்தனர். ‘‘அது எப்படி, பெண்களை காவல்துறையில் பணியமர்த்தினால், அவர்களால் அந்தப் பணியை செய்ய முடியுமா? பெண்கள், இராணுவத்தில் பணியாற்ற முடியுமா?’’ என்று.

‘‘ஏன், போக முடியாது?’’ என்று அன்றைக்குப் பெரியார் கேட்டார்.

இன்றைக்குப் பார்த்தீர்களேயானால்,  காவல்துறையில், டி.ஜி.பி.யாக இருந்து  ஓய்வு பெற்ற பெண்கள் இருக்கி றார்கள்.

இராணுவத்தை எடுத்துக்கொண்டால், அண்மையில் பாகிஸ்தான்மீது நடைபெற்ற இராணுவத் தாக்குதலில், இரு பெண்கள்தான் தலைமை தாங்கினர்.

பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், சிறப்பாக செயல்படுவார்கள்!

ஆகவே, பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால், அவர்கள் தங்களுடைய திறமையை நிச்சயம் வெளிப்படுத்துவர்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், வாய்ப்புக் கொடுத்தால், சிறப்பாக செயல்படுவர். வாய்ப்பு மறுக்கப்பட்டதினால்தான், பெண்களுடைய திறமை வெளியாகவில்லை. இப்போது பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்ததினால், அவர்களுடைய திறமை வெளியாகிறது.

இப்படி வரிசையாக எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அன்றைய காலகட்டத்தில், கோவிலில் பெண்க ளுக்குப் பொட்டுக் கட்டி விட்டார்கள் – இன்றைக்குத் தேவதாசி முறை என்பதே கிடையாது.

இது எப்படி ஒழிந்தது?

இந்த இயக்கத்தினால்தான்.

அதேபோன்று, எல்லா துறைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம்.

கிராமம் – நகரம் என்கிற வேறுபாடு இல்லாமல்,  பெண்கள் எல்லோரும் சிறப்பாகத் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆகவேதான், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்கிற பெயரில், சிறப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின்  ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம்பற்றி..

செய்தியாளர்: இப்போது இருக்கின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு, குலக்கல்வித் திட்டத்தை  ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில்  மறுபடியும் கொண்டு வரு கிறதே, நீங்கள் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: 1952 இல், இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கொல்லைப்புற வழியாக முதலமைச்சரானபோது, இரண்டாண்டுகள்  ஆண்டார். பிறகு, அவரவர் குலத்தொழிலை செய்யவேண்டும் என்பதற்காக குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்;

செருப்புத் தைக்கின்றவர் பிள்ளை, செருப்புத் தைக்கவேண்டும்.

துணி வெளுக்கின்றவர் பிள்ளை, துணி வெளுக்க வேண்டும்.

முடி திருத்துகின்றவர் பிள்ளை, முடி திருத்தவேண்டும் என்று சொல்லி, கிராமத்தில் உள்ள பள்ளிகளை மூடியது மட்டுமல்லாமல், செயல்படுகின்ற பள்ளிக்கூடங்களில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

பெரியார், திராவிட இயக்கங்கள் போராடி குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்கள்!

அது ஒரு கொடுமையான திட்டம். அந்தத் திட்டத்தைக் கண்டித்து தந்தை பெரியார் போராடி, அண்ணா போராடி, திராவிட இயக்கங்கள் போராடி, பார்ப்பனர்கள் தவிர, மீதம் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்கள்.

இன்றைக்கு அதே குலக்கல்வித் திட்டத்தை – உருவத்தை மாற்றி, பெயரை மாற்றி, ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு ‘‘விஸ்வகர்மா யோஜனா’’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

அந்தத் தொழிலுக்குரிய படங்களைப் போட்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிக்கை வெளியிட்டது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின்
நாக்கில் தேன் தடவும் திட்டம்!

இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தை, ஆரம்பப் பள்ளிக் கூடத்தில்தான் கொண்டு வந்தார்.

ஆனால், இன்றைய ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, பள்ளிப் படிப்பை முடித்த நம்முடைய மாணவர்கள், கல்லூரியில் படிப்பதற்கே போகக்கூடாது என்று திட்டமிட்டு, ‘‘உதவித் தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறோம்; முதலில் ஒரு லட்சம் ரூபாய்; பிறகு இன்னொரு ஒரு லட்சம் ரூபாய்’’ என்று சொல்லி, நாக்கில் தேன் தடவும் திட்டத்தைக் கொண்டு வந்தது.

அந்தத் திட்டத்தை திராவிடர் கழகம் உடனடியாக எதிர்த்தது. முற்போக்குள்ள கட்சிகளுக்கு அதனுடைய ஆபத்தைச் சுட்டிக்காட்டினோம்.

நமது முதலமைச்சரின்
திட்டவட்ட மறுப்பு!

இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்தத் திட்டத்தின் ஆபத்தினை உணர்ந்ததினால், ‘‘தமிழ்நாட்டில், விஸ்வகர்மா யோஜனா’’ திட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்றார்.

நாங்கள்தான் பணம் கொடுக்கிறோமே அந்தத் திட்டத்திற்கு என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு கூறுகிறது.

இந்தத் திட்டம், கைவினைஞர்களுக்கு எதிரான தல்ல; தச்சு வேலை, சிற்ப வேலை செய்பவர்கள் கைவினைஞர்கள். அது ஜாதி அடிப்படையில் அல்ல.

வாணியம்பாடி, ஆம்பூர், சென்னை போன்ற பகுதிகளில், காலணி தொழிற்சாலைகள் இருக்கின்றன. வெளிநாட்டுக்காரர்கள் காலணி தொழிற்சாலையில், நம்முடைய முதலமைச்சருடன் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள்.

ஆனால், எந்த இடத்திலும், அப்பன் தொழிலை பிள்ளைதான் செய்யவேண்டும் என்கின்ற கட்டாயம் கிடையாது.

மும்மொழி திட்டத்தை ஏற்காத
‘திராவிட மாடல்’ அரசு!

அதேபோன்று, ஒன்றிய பா.ஜ.க. அரசின் மும்மொழித் திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என்றார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

திராவிட ஆட்சியினால் நம்முடைய மக்களுக்குப் படிப்பு  வளர ஆரம்பித்ததோ, அதற்கு முட்டுக்கட்டைப் போடவேண்டும் என்பதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.

வருணாசிரம தர்மத்தில் நம்பிக்கையுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய அரசியல் வடிவம்தான் பா.ஜ.க.

நேர் எதிரெதிரான இரண்டு அமைப்புகள்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், சுயமரியாதை இயக்கமும் ஒரே ஆண்டில் தொடங்கப்பட்டவை.

ஒன்று, ஜாதியை ஒழிப்பதற்கு.

இன்னொன்று, ஜாதியைக் காப்பாற்றுவதற்கு.

ஒன்று, படிக்கக் கூடாது என்று சொல்கின்ற அமைப்பு.

இன்னொன்று, அனைவரும் படிக்கவேண்டும் என்கிற அமைப்பு.

நேர் எதிர் எதிரானவையாகும். எப்படி இரவும் -பகலும்; வெளிச்சமும் – இருட்டும்; நோயும் – மருத்துவமும் என்பதுபோல இரண்டு அமைப்புகளும் மாறுபட்டன.

திராவிட இயக்கம் – மருத்துவம்;

நோயை உண்டாக்குவது – ஆர்.எஸ்.எஸ்.

பேதம் என்கிற நோய்.

இன்றைக்கும் அந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்
மறைமுக அஜெண்டா!

எப்போதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இரண்டு அஜெண்டா வைத்திருப்பார்கள். வெளிப்படையான அஜெண்டா ஒன்று. மறைமுகமாக அஜெண்டா ஒன்று.

மறைமுகத்தை உள்ளே வைத்திருப்பார்கள். ‘‘உள்ளொன்று வைத்து புறமொன்று செய்தல்’’ என்பது தான் ஆர்.எஸ்.எஸ்.

திராவிட இயக்கத்திலோ  வெளிப்படையான திட்டம்!

வெளிப்படையாக இருக்கக்கூடியதுதான் திராவிடம் – சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழகம்.

நம்முடைய திட்டங்கள் எல்லாம் வெளிப்படையான திட்டங்களாகும்.

பா.ஜ.க.வினுடைய திட்டம் என்பது மறைமுகமாக இருக்கும்.

உதாரணமாக, பெண்களுக்கு சட்டப்பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ இட ஒதுக்கீடு இல்லை என்ற நிலை இருந்தபோது,  ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘அதனை நாங்கள் உடனே செய்கிறோம்’’ என்று சொல்லி, அதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறோம் என்று சொன்னார்கள்.

உடனே எல்லோரும் ‘‘பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பாராட்டினார்கள்.’’

சரி, அந்த மசோதா எப்பொழுது நடைமுறைக்கு வரும்? என்று கேட்டால், 2035 ஆம் ஆண்டிற்கு மேல் நடைமுறைக்கு வரும் என்று சொல்கிறார்கள்.

இதுதான் அவர்களின் மறைமுகத் திட்டமாகும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பும் –
ஒன்றிய பா.ஜ.க. அரசும்!

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை முதலில் ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு எதிர்த்தது.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சொல்பவர்கள் எல்லாம் ‘‘ஹர்பன் நக்சலைட்’’ என்று சொன்னார்கள்.

இப்போது வேறு வழியில்லாமல், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துகிறோம் என்று சொல்கிறார்கள்.

ஏனென்றால், பீகாரில் பா.ஜ.க. வெற்றி பெறவேண்டும்; வடபுலத்திலும் சமூகநீதி வந்துவிட்டது என்பதால்,  அப்படியே  தடாலடியாக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்கிறார்கள்.

சரி, எப்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவீர்கள் என்றால், 2021 ஆம் ஆண்டு நடத்தி யிருக்கவேண்டும். ஆனால், அது கரோனா தொற்று என்பதால், அதனைத் தள்ளிப் போட்டனர்.

‘‘வரும், ஆனால், வராது!’’

சரி, இப்பொழுது நடத்துகிறோம் என்று சொல்கிறீர்களே, உடனே  நடத்தவேண்டும் அல்லவா! அதற்காகவே, தனித் துறை இருக்கிறது. சட்டத் திருத்தத்தில், ஏழாவது அட்டவணையில் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதற்காக நிதியும் ஒதுக்கியிருக்கிறார்கள்.

எப்பொழுது செய்வீர்கள் என்று கேட்டால், ‘‘செய்வோம்’’ என்று காலங் கடத்துகிறார்கள்.

ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சொல்வது போன்று, ‘‘வரும், ஆனால், வராது’’ என்பதுபோல இருக்கிறது.

இவற்றையெல்லாம் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்ற ஒரே ஒரு இயக்கம் எதுவென்றால், திராவிட இயக்கம், திராவிட மாடல் ஆட்சி, திராவிடர் கழகமாகும்.

பதில் சொல்லவேண்டியவர்
எடப்பாடி பழனிசாமிதான்!

செய்தியாளர்: 2026 இல் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும்; கூட்டணி அமைச்சரவைதான் என்று மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டியவர் எடப்பாடி பழனிசாமிதான்.

ஏனென்றால், அவர்தான், ‘‘எந்தக் காலத்திலும் இனி மேல் பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர மாட்டோம்’’ என்று சொன்னார்.

இவர் தலைமையிலா? அவர் தலைமையிலா? இந்தக் கட்சியின் தலைமையிலா? அல்லது அந்தக் கட்சியினுடைய தலைமையிலா? என்பதெல்லாம் பிறகு இருக்கட்டும்.

தி.மு.க. கூட்டணிக்குத் தலைவர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்குப் பெயர் – தி.மு.க. கூட்டணி. அந்தக் கூட்டணிக்கு யார் தலைவர், மு.க.ஸ்டாலின் தலைவர் என்று தெளிவாக இருக்கிறது.

ஆனால், இப்போது அமையப் போகின்ற கூட்டணி, அமையுமா? அமையாதா? என்று தெரியாது. அந்தக் கூட்டணிக்கு யார் தலைவர்? என்பதும் தெரியாது.

‘‘பா.ஜ.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி’’ என்று பத்திரிகையாளர்கள் எழுதுகிறார்கள்.

அமித்ஷா, இரண்டுமுறை தமிழ்நாட்டிற்கு வந்தி ருக்கிறார். முதலில் கையெழுத்து வாங்குவதற்காக வந்தார். இப்போது, அந்தக் கையெழுத்து சரியாக இருக்கிறதா? அல்லது அழிந்து போய்விட்டதா? என்று பார்ப்பதற்காக இரண்டாவது முறை வந்தார்.

அடமானத்திலிருந்து அ.தி.மு.க.வை மீட்பதற்குப் பதில், தன்னை மீட்டுக் கொள்ள முயற்சிக்கிறார் பழனிசாமி!

அப்படி வருகின்றபொழுது, அவர் என்ன சொன்னார்? ‘‘பா.ஜ.க.தான் கூட்டணிக்குத் தலைமை’’ என்றுதானே பேசுகிறார்.

உடனே எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கவேண்டமா? அதைச் சொல்லாமல், ‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மீதும் ஆதாரமில்லாமல் வசைமாரிப் பொழிகிறார்.

அ.தி.மு.க.வை அடமானம் வைத்துவிட்டார். அந்த அடமானத்திலிருந்து அந்தக் கட்சியை மீட்பதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. தன்னை மீட்டுக் கொள்வது எப்படி என்றுதான் கவலைப்படுகிறார்.

கூட்டணியினுடைய தலைவர் யார்?

ஆகவே முதல் கேள்வி,

அவர்களுடைய கூட்டணிக்குப் பெயர் என்ன?

அந்தக் கூட்டணியினுடைய தலைவர் யார்?

அந்தக் கூட்டணியில், எந்தெந்த கட்சியை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டிய தலைமை எது?

பா.ஜ.க.வினுடைய அமித்ஷாவா? அல்லது இங்கே இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியா?

எடப்பாடி பழனிசாமிதான் தலைமை தாங்குவார் என்று சிலரை வைத்துப் பேச வைக்கிறார்கள்.

அந்தக் கூட்டணிக்கு அவர் தலைவராக இருந்தால்தானே, அவர் தலைமை தாங்குவார். கூட்டணிக்குத் தலைவரா, இல்லையா அவர் என்று தெரியவில்லையே.

கூட்டணியே உருவாகியிருக்கிறதா, இல்லையா என்பதே கேள்விக்குறி.

கர்ப்பம் என்று சொல்கிறார்கள்; பிள்ளைதான் பிறக்கப் போகிறதா? அல்லது கட்டியா? என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்ப்பதுபோல, அரசியல் மருத்துவர்கள் தேவை!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *