சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை சார்பில், நீர்நிலைகள் புத்துயிர் பெறுவது மற்றும் நீர் தேவையில் தன்னிறைவு பெறுவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ‘நிலையான நீர்வள மேலாண் மைக்கான மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி’ என்ற தலைப்பிலான பயிலரங்கம் எழும்பூரில் நேற்று (14.6.2025) நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தில் தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, பங்குதாரர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இப்பயிலரங்கத்தில் நீர்வளத் துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், நீர்நிலைகளைப் புத்துயிர் பெறச் செய்வதில் சமூகப் பங்களிப்பின் அவசியம் குறித்தும் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.
தலைமைச் செயலர்
பயிலரங்கத்தை தொடங்கி வைத்த தலைமைச் செயலர் என்.முருகானந்தம், ‘இன்றைய நிலையில் தமிழ்நாடு 5 சதவீதம் நகர மயமாக்கலில் உள்ளது. எனவே மாநிலத்தின் நீர்நிலைகளை சரியான முறையில் பராமரிப்பதின் மூலம், தேவையான நீரை சேகரிக்கவும் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் முடியும். இப்பணிகளை மக்கள் ஒருங்கிணைப்போடு இரண்டு அல்லது மூன்றுஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மகாராட்டிர மாநில மண் மற்றும் நீர் பாதுகாப்பு துறையின் தலைமைப் பொறியாளர் மற்றும் இணை செயலர் விஜய் டியோராஜ், மகாராட்டிராவில் மக்கள் பங்களிப் போடு செயல்படுத்தப்பட்டு வரும் நீர்நிலைகள் மேம்படுத்தும் பணிகள் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் டி.கார்த்திகேயன், வருவாய்த்துறை செயலர் பி.அமுதா, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், சமூக பங்களிப்புடன் நீர்நிலைகளைப் புனரமைப்பது தொடர்பான தலைப்புகளில் குழு விவாதங்களும் நடத்தப்பட்டன.
நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டம்
அப்போது, நீர்நிலைகளைப் புத்துயிர் பெறச்செய்வதற்கான பணிகளை முன்னெடுத்து செல்ல ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை உருவாக்கி, மக்கள் பங்களிப்புடன் பொது-தனியார் கூட்டமைப்பின் மூலம் நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த, நிதித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வலியுறுத்தினார்.
இப்பயிலரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.சிறீதர், சிப்காட் மேலாண் இயக்குநர் கே.செந்தில்ராஜ், முதன்மை தலைமை வனப் பாது காவலர் சிறீனிவாச ஆர். ரெட்டி. ஊரக வளர்ச்சி ஆணையர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.