மேலும் ஒரு விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், இந்தியாவில் மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தின் கௌரிகுண்ட் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி மற்றும் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடம் மீட்புக்குழு (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு (SDRF) வீரர்கள் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆதார் காலக்கெடு நீட்டிப்பு
ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக UIDAI அறிவித்துள்ளது. இதுதொடர்பாக X பதிவிட்டுள்ள UIDAI, ஆதாரில் மாற்றங்கள் செய்வது, ஆவணங்கள் அப்டேட் செய்வது உள்ளிட்டவற்றை https://myaadhaar.uidai.gov.in/portal என்ற இணையதளத்தில் கட்டணமின்றி அப்டேட் செய்து பயனடையலாம் எனவும், அதற்கான காலக்கெடு ஜூன் 14, 2026 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வு: 70 இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் போட்டி!
துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 70 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று (ஜூன் 15) நடக்கிறது. மாநிலம் முழுவதும் 2,49,296 பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 170 மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வு மய்யத்திற்குள் வர வேண்டும். அலைபேசி, மின்னணு கடிகாரம், புளூடூத் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
பி.ஜே.பி.க்குள் குழப்பம்!
2026ஆம் ஆண்டு பாஜக ஆட்சி என்று அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து, அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் இங்கு நடக்கும் என்று வானதி சீனிவாசன் தெளிவு படுத்தியுள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இபிஎஸ் தலைமையில் தான் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்தாராம். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, அண்ணாமலை பேசிய விவகாரத்தை பூதாகரமாக மாற்ற வேண்டாமாம். கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்துள்ளாராம்.
இந்தியாவிற்கு இது ஒரு அவமானம்: பிரியங்கா சாடல்
காசா போர் நிறுத்தத்திற்கான அய்.நா. தீர்மான வாக்கெடுப்பில், இந்தியா பங்கேற்காதது அவமானகரமான செயல் என பிரியங்கா காந்தி சாடியுள்ளார். போர் நிறுத்தத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும் எனவும், பன்னாட்டு விதிகளை மீறி 60,000 பேரை கொன்ற இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அன்று நிறவெறி.. இன்று கருப்பினத்தவர் தான் ஹீரோ!
1970இல் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையால், அந்த அணி கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டது. பிறகு, 1991 முதல் கிரிக்கெட் விளையாடும் தென்னாப்பிரிக்காவுக்கு உலக கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. நிறவெறிக் கொள்கையால், கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்ட அணிக்கு, ஒரு கருப்பினத்தவர் தான் முதல் உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இது வெறும் கோப்பையல்ல… பல கண்ணீர் கதைகளுக்கு பதில்!
கரோனாவும், மாரடைப்பும்!
கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், புதிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2020 கரொனா பரவலுக்கு பின் 30- 40 வயதுடையவர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர் சதானந்தம் கூறியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டதுதான். குறிப்பாக, கொழுப்பு சார்ந்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதால், இதுபோன்று ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.