மதச்சார்பின்மையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் மிகப்பெரிய பேரணி

viduthalai
2 Min Read

திருச்சி, ஜூன் 15- மதச்சார் பின்மையை காக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் திருமாவளவன் எம்.பி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பேரணி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட பேரணி திருச்சியில் நேற்று (14.6.2025) மாலை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமா வளவன் எம்.பி.தலைமையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

டி.வி.எஸ். டோல்கேட் அருகே இருந்து தொடங்கிய இந்த பேரணி தலைமை அஞ்சல் நிலையம், ஒத்தக்கடை வழியாக மாநகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது. பேரணியின்போது ஒன்றிய அரசுக்கு எதிராகவும், வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்பக் பெறக்கோரியும், மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நீல வண்ணம்

பேரணியில் பங்கேற்ற திருமாவளவன் நீல நிற கோட்-சூட், சிவப்பு நிற டை அணிந்திருந்தார். இதேபோல் அணிந்திருந்தார்.இதேபோல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் நீல நிற கோட்-சூட் அணிந்து கட்சிக் கொடிகளுடன் பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் பேரணி நடந்த பகுதி நீலமயமாக காட்சியளித்தது. மேலும் இந்திய அரசமைப்பு சட்டப் புத்தகத்தின் மாதிரி, சட்டமேதை அம்பேத்கர் சிலை உள்ளிட்டவற்றுடன் அலங்கார ஊர்திகளும் பேரணியில் பங்கேற்றன.

தீர்மானங்கள்

பேரணி முடிவில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் 12 தீர்மானங்களை திருமாவளவன் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக பாதுகாப்போம். வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறவேண்டும்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பேரேடு ஆகியன தயாரிப்பதை கைவிட வேண்டும். மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கும்பல் கொலைகளை பயங்கரவாத குற்றமாக அறிவிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரை மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும். மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை வழங்க வேண்டும் அனைத்து சமயத்தினரும், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமமான வாய்ப்பு பெறுவதை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அதற்காக தனியே ஒருசட்டம் இயற்ற வேண்டும். அதை செயல்படுத்த ஆணையத்தை ஒன்றிய அரசு அமைக்கவில்லை.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

இந்த ஆணையத்தை அமைக்க மாநில அரசுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே, சமவாய்ப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று தோழமை அரசை (மாநில அரசு) கேட்டுக்கொள்கிறேன். பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகா போதி விகாரை பவுத்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் சுதந்திரம் பெற்ற 15.8.1947 அன்று எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் தொடர வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை விலக்கக் கூடாது.பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் ஆகிய 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் அகமதாபாத்தில் விமான விபத்தில் பலியானவர் களுக்கு அமைதி காத்து இரங்கல் செலுத்தப்பட்டது. பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி,  பொதுச் செயலாளர்கள் ரவிக்குமார், ஷாநவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *