தலைசிறந்த மருத்துவ மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81.33 லட்சம் ஏழைகள் பலன் தமிழ்நாடு அரசு தகவல்

viduthalai
4 Min Read

சென்னை, ஜூன் 15- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81,33,806 ஏழை மக்கள் பலன் பெற்றுள்ளனர் என்றும், இந்தியாவின் சிறந்த மருத்துவ மாநிலமாக தமிழ்நாடு எழுச்சி பெற்றுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திட்டங்களே சாட்சி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மக்கள் நல் வாழ்வு மற்றும் மருத்துவத்துறை பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களே சாட்சிகளாகும்.

காப்பீட்டுத் திட்டம்

ரூ.5,878 கோடியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81 லட்சத்து 33 ஆயிரத்து 806 ஏழை மக்கள் பலன் பெற்றுள்ளனர். இதில், அரசு மருத்துவமனைகளில் 25 லட் சத்து 80 ஆயிரத்து 867 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.1,149.24 கோடியில் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப் பட்டுள்ளது. ரூ.2854.74 கோடியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம்.

ரூ.1046 கோடியில் 5 புதிய மருத்துவமனைகளுக்கு கட்டடங்கள். கிண்டியில் ரூ.151 கோடியில் இந்தியாவின் இரண்டாவது தேசிய முதியோர் நல மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு
சிறப்பு மருத்துவமனை

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் ரூ.648.12 கோடியில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 548 இன்னுயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ரூ.67.35 கோடியில் தாய் சேய் நலப் பரிசுப் பெட்டகத் திட்டம். கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் 6 லட்சத்து 23 ஆயிரத்து 765 புறநோயாளிகள் மற்றும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 591 உள்நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் தொடங்கிய உடல் உறுப்பு கொடைப் பிரிவில் 749 நன்கொடையாளர்களிடமிருந்து 310 இதயம், 369 நுரையீரல், 632 கல்லீரல், 1,292 சிறுநீரகம் என மொத்தம் 4,300 உறுப்புகள் மற்றும் திசுக்கள் பெற்று பலருக்கும் பயன்படுத்தப்பட்டன.

உடல் உறுப்பு கொடைப்பிரிவு 6 ஆண்டுகளாக தொடர்ந்து பெற்று வரும் தேசிய விருதுகளுடன் தமிழ்நாடு மருத்துவதுறை நிகழ்த்தி வரும் சாதனைகளுக்கு விருதுகள் பெறப் பட்டுள்ளது.

புற்றுநோய் சிறப்பு மய்யம்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவ மனையில், ரூ.34.6 கோடி செலவில் 15.3.2022 அன்று ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு சிறுநீரகவியல், புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு 336 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

காரப்பேட்டை, காஞ்சீபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் அரசு மருத்துவமனையில் ரூ.120 கோடியில் புற்றுநோய்க்கான சிறப்பு மய்யம், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 1 கோடியே 29 லட்சத்து 87 ஆயிரத்து 553 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு 5 லட்சத்து 29 ஆயிரத்து 545 நோயாளிகளுக்கு நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர்களின் கல்விச்செலவு ரூ.264.72 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டது.

சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் முக்கிய மருத்துவப் பிரிவுகளுடன் 6 தளங்களில் 560 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட அரசு பெரியார் மருத்துவமனையை 27.2.2025 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குழந்தை இறப்பு விகிதம்

ரூ.681.64 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 2 கோடியே 34 லட்சத்து 88 ஆயிரத்து 431 பயனாளிகள் முதன்முறை சேவைகளையும், 4 கோடியே 52 லட்சத்து 62 ஆயிரத்து 337 பயனாளிகள் தொடர் சேவைகளையும் பெற்றுப் பயன் அடைந்துள்ளனர்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில்  2021-2022ம் ஆண்டு முதல்  2024-2025 (31.03.2025) வரை இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் 5,654 மருத்துவ முகாம்கள் நடத் தப்பட்டு 52 லட்சத்து 88 ஆயிரத்து 933 பேர் பயனடைந்துள்ளனர். குழந்தை இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

525 சாதனை விருதுகள்

தமிழ்நாடு அரசின் உறுப்பு கொடை பிரிவு 6 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவின் சிறந்த பிரிவு என பாராட்டப்பட்டு தேசிய அளவில் விருதுகளை பெற்று வருவதுடன் கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வு துறையில் தமிழ்நாடு நிறைவேற்றி வரும் புதிய புதிய திட்டங்களால் தொடர்ந்து தேசிய அளவில் பாராட்டுகளை பெற்று விருதுகளை  குவித்து வருகிறது.

அந்த வகையில் தி.மு.க. அரசு மொத்தம் 525 விருதுகளை பெற்றுள்ளதன் மூலம் இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் நலன் காப்பதில் ஓய்வின்றி உழைத்து, திட்டங்களை விழிப்புடன் செயல்படுத்தி வருவதால், தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மருத்துவ மாநிலமாக எழுச்சி பெற்றுள்ளது.

மருத்துவ உதவிகளை நாடி வெளிநாடுகளுக்கு சென்ற நிலை மாறி இன்றைக்கு வெளிநாட்டினர் மருத்துவத் தேவைகளுக்காக தமிழ்நாட்டைத்தேடி வருவது தமிழ்நாடு பெற்றுள்ள தனிப் பெருமையாகும். இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் தலை சிறந்த சாதனையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *