எட்டயபுரம், ஜூன் 14 திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பும் வழியில், எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது, நீதிபதியின் கார் மோதி காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த். இவர் தனது பாதுகாப்பு காவலர் நவீன் குமார், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதய சூரியன், சிறீதர் குமார், பதிவேடு எழுத்தர் வாசு ராமநாதன், வழக்குரைஞர் தனஞ்ஜெய ராமச்சந்திரன் ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் நேற்று (13.6.2025) காலை புறப்பட்டு தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை வாசு ராமநாதன் ஓட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அடுத்த மேலக்கரந்தை விலக்கு அருகே, தூத்துக்குடியில் இருந்து அரியலூருக்கு ஜிப்சம் ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் கார் திடீரென பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் இருக்கை வரை லாரியின் உள்ளே சிக்கியதில் பலத்த காயமடைந்த பாதுகாப்புக் காவலர் நவீன் குமார், வழக்குரைஞர் தனஞ்ஜெய ராமச்சந்திரன், வாசு ராம நாதன், சிறீதர்குமார் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்ற அலுவலக உதவியா ளர் உதயசூரியன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், உதயசூரியன் ஆகியோரை மீட்ட மாசார்பட்டி காவல்துறையினர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மாசார் பட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.