சென்னை, ஜூன்.14- உயர் சிறப்பு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை தமிழ் நாட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
முதுநிலை மருத்துவம்
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த ஒரு முக்கியமான பிரச்சினையை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்கள் தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நீட் எஸ்.எஸ். (நீட் சூப்பர் ஸ்பெசாலிட்டி) தேர்வில் மாநில இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு கடந்த மே 27-ஆம் தேதி நிறைவடைந்தது. மே மாதம் 29-ஆம் தேதி, தமிழ் நாடு தேர்வுக் குழு, பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய அனுமதிக்கும் வகையில் 2-ஆவது மாநில சுற்று அட்டவணையை குறிப்பிடுமாறு சுகாதாரத்துறை பொது இயக்குனரகத்திடம் முறையாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
50 சதவீத ஒதுக்கீடு
நீட் எஸ். எஸ். மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வின் 2-ஆவது சுற்றில் மாநில, பணியில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இடங்களை தேர்வு செய்ய, மருத்துவ விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதை தங்களது கவனத் திற்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆனால், மாநில அளவில் கட்டாய 2-ஆவது சுற்று கலந்தாய்வு நடத்தாமல், நிரப்பப்படாத பணியிடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றுவது என்பது தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களை அவர்கள் விரும்பும் இடங்களை தேர்வு செய்யவோ அல்லது கலந்தாய்வில் பங்கேற்காமல் அவர்களுக்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இது உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு முரணானதாகும். எனவே, மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து 50 சதவீத இடங்களும் தக்க வைக்கப்பட்டு, மாநில அளவிலான நீட் எஸ்.எஸ். கலந்தாய்வின் 2-ஆவது சுற்றில் கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதை நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உறுதிசெய்ய வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன். இதற்கு தங்களது ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.