கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை பிபிசி அம்பலப்படுத்துகிறது

viduthalai
4 Min Read

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக விழா என்று சொல்லப்படும் ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.

கும்பமேளாவிற்குச் செல்வதற்காக சாலை விபத்துகள், டில்லி ரயில் கூட்ட நெரிசல் போன்ற இன்னல்களையும் பக்தர்கள் சந்தித்தனர். இதுபோன்று பல துயர சம்பவங்கள் நடந்தன. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  கும்பமேளாவில் ஜனவரி 29ஆம் தேதியன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 37 பேர் உயிரிழந்ததாகவும், பலரும் காயமடைந்ததாகவும் அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் இந்திய நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.கும்பமேளாவில் 66 கோடி மக்கள் வந்து, பங்கேற்று, மகிழ்ச்சியுடன் வெளியேறியதாகவும், இந்த விழாவிற்காக ரூ.7,500 கோடி செலவிடப்பட்டு ரூ.3 லட்சம் கோடி வருவாய் ஈர்த்ததாகவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அம்மாநில சட்டமன்றத்தில் பெருமையுடன் கூறினார்.

இந்த நிலையில், கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழக்கவில்லை, குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக (மேலும் அதிகம் இருக்கக் கூடும் என்பதே பொதுவான கருத்து) பிபிசி செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 50 மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து பிபிசி கள ஆய்வு நடத்தியுள்ளது. அதில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.25 லட்சத்தை காசோலை மூலம் அதிகாரப்பூர்வமாக  உத்தரப் பிரதேச அரசு கொடுத்துள்ளது. மேலும், மறைமுகமாக 26 குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் ரொக்கமாக அதிகாரிகள் மூலம் கொடுத்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த 26 பேரும், உயிரிழந்தவர்களின் பட்டியலில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

ரொக்கமாக பணம் பெற்றவர்களில் பெரும்பாலானோர், பணம் வாங்கியதை தாங்களே ஒப்புக் கொண்டதை காட்சிப் பதிவு மற்றும் ஒளிப்படங்களில் பதிவு செய்து வைத்திருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மாநில காவல்துறையும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கூட்ட நெரிசலில் இறந்த 19 பேரின் குடும்பங்களுக்கு, அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்தாலும், சாட்சிகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலம் உறுதியாக 82 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பிபிசி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கோண்டா மாவட்டத்தில் இருந்து 47 வயதான நங்கன் தனது குடும்பத்துடன் ஜனவரி 27 அன்று கும்பமேளாவுக்குப் புறப்பட்டார்.

அவரது மனைவி ரமா தேவி, மூத்த சகோதரர் மஸ்ரூ, உறவினர் ஜோகு மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். மாலை ஆறு மணியளவில், அனைவரும் கும்பமேளா பகுதியை அடைந்து ஓர் ஆசிரமத்தில் தங்கினர்.

ஜனவரி 28ஆம் தேதி காலை, அக்குடும்பத்தினர் அருகிலுள்ள ஒரு படித்துறையில் குளித்தனர். பின்னர் மவுனி அமாவாசையை முன்னிட்டு கங்கையில் நீராடுவதற்காகக் காத்திருந்தனர்.

இதுபற்றி மூத்த சகோதரர் மஸ்ரூ, “ஜனவரி 28 ஆம் தேதி இரவு சுமார் பத்து மணியளவில், நாங்கள் சங்கமத்திற்குப் புறப்பட்டோம். அங்கு செல்ல எங்களுக்கு இரண்டு மணி நேரம் ஆனது” என்று கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில்  “பின்னர் ஒலி பெருக்கியில் ஓர் அறிவிப்பு வந்தது – ‘அம்ரித் மழை பெய்கிறது, அனைவரும் குளிக்க வேண்டும்’ என்பது தான் அந்த அறிவிப்பு! பின்னர் என்ன நடந்தது? மக்கள் பித்துப் பிடித்தது போல மாறினார்கள்.”

“கூட்டம் மிகவும் அதிகமாகிவிட்டதால் நாங்கள் திரும்பிச் செல்ல நினைத்தோம். ஆனால் நெரிசலில்  கீழே விழுந்தோம். கூட்டம் எனது  தம்பி நங்கனை மிதித்துச் சென்றது” என்று மஸ்ரூ கூறுகிறார்.

“சுமார் 30 உடல்கள் அங்கே கிடந்தன. சில பெண்களின் உடலில் துணிகள் கூட இல்லை” என அவர் புலம்புகிறார்.

மருத்துவமனையில் இருந்து உடலை வீட்டிற்குக் கொண்டு வர ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் இறுதி நிகழ்வுகளுக்காக ரூ.15,000 பணத்தை வழங்கியதாகவும் அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

உறவினர்களை இழந்த பிற குடும்பத்தினரும் இறுதி நிகழ்வுகளுக்காக ரூ.15,000 ரொக்கமாக தங்களுக்கு வழங்கப்பட்டதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.

நங்கனின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச அரசிடமிருந்து ரூ.25 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது.

மதத்தின் பெயரால் ஒரு விழாவாம். மூடத்தனத்தில் மூழ்கிய மக்கள் கும்பமேளா என்ற பெயரில் நீரில் மூழ்கச் சென்று உயிரைப் பலி கொடுத்துள்ளனரே! என்ன கொடுமை இது!!

இதில் கூட உ.பி. பிஜேபி அரசு அரசியல் செய்கிறதே – வெட்கக் கேடு!

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *