திருச்சி, ஜூன் 14- விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று (13.6.2025) திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அப்படி எவராலும் ஏற்படுத்த முடியாது. தலைமை தாங்கி இருக்கும் கட்சியுடன் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது அந்த நேரத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை அடிப்படையில் உள்ளது. நிபந்தனை அரசியலை கூட்டணிக்குள் செய்யக்கூடாது. எதிர்பார்ப்பு என்பது எல்லா தேர்தலிலும் உள்ளது. கூட்டணியின் நலம் முதன்மையானது. தி.மு.க.வுக்கு எப்படி கூட்டணி பொறுப்புள்ளதோ அதே போல கூட்டணிக் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. கூட்டணி ஆட்சி என்பதை நெடுங்காலத்திற்கு முன்பு நிலைப்பாடாகக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கும் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான காலம் இது இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடமிருந்து கூடுதல் சீட் கேட்போம்.
அ.தி.மு.க.வால் வெளியில் உள்ளவர்களையே இணைக்கவில்லை. அமைச்சர் அமித்ஷா கூட்டணிக்காக இரண்டாவது முறை வந்து விட்டார்.கூட்டணி தயாராக இல்லை. அ.தி.மு.க. இன்னும் வடிவம் பெறவில்லை என்பது கசப்பான உண்மை. நிரந்தரமாக டாஸ்மாக் மூடப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த தேர்தலிலாவது திராவிட முன்னேற்றக் கழகம் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகள் குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் வெளியிடவில்லை. ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் முன் வைக்கட்டும், மக்களிடத்தில் எடுத்து வைக்கட்டும், விசாரணைக்கு கொண்டு செல்லட்டும். ஊழல் மிகப்பெரிய பிரச்சினை தான். ஆனால் ஊழலை விட மாதவாதம், வெறுப்பு அரசியல் கொடூரமானது.” இவ்வாறு அவர் கூறினார்.