குடந்தை: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை

viduthalai
9 Min Read

காலையில் தமுக்கை அடித்து பிரச்சாரம் செய்தவரே, மாலையில் கூட்டத்தில் உரையாற்றுவார்!
இந்தியாவில், இதுபோன்று பிரச்சாரம் செய்த இயக்கம் வேறு உண்டா?
அப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ததன் விளைவுதான்,
இன்றைக்கு அசைக்க முடியாத ஓர் ஆட்சியை, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியை, இந்த இயக்கம் பெற்றெடுக்க முடிந்தது!

Contents
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்!சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சார பீரங்கி பச்சை அட்டைக் ‘குடிஅரசு!’கருத்தரங்கத்தின் முதல் வெற்றி!எல்லோருக்கும், எல்லாம் கொடுப்பதுதான் நம்முடைய வேலை!சுயமரியாதை குடும்பத்தின் வார்ப்புகளில்….எந்நாளும் சுயமரியாதைக்காரர் என்பதில் பெருமை கொள்பவர்!குடந்தை காந்தி காங்கேயன் பார்க்!சுயமரியாதை இயக்கக் கொள்கையின் சிறப்பு – தனி ஆற்றல்!சுயமரியாதைச் சுடரொளிகள் பெயர்ப் பட்டியல்!தண்டோரா போட்டு கூட்டத்தைச் சேர்த்த இயக்கம் – சுயமரியாதை இயக்கம்!எல்லோரும் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தைக் கேட்க வாருங்கள்! இதுபோன்று பிரச்சாரம் செய்த வேறு இயக்கம் உண்டா?நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் = திராவிடர் கழகம்!கும்பகோணத்தில்தான் திராவிட மாணவர் கழகம் உருவானது!‘‘லேனா காயசித்தி லேகியம்’’ விளம்பரம்!பகுத்தறிவுப் பணியை செய்த ஊர் சாக்கோட்டை!‘‘10 வயது பகுத்தறிவுச் சிறுவன் வீரமணி!’’

கும்பகோணம், ஜூன் 14 அந்தக் காலத்திலேயே, பகுத்தறிவுப் பணியை செய்த ஊர் சாக்கோட்டை!  காலையில் தமுக்கை அடித்து சுயமரியாதை இயக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெறப் போகிற செய்தியை மக்களிடையே பிரச்சாரம் செய்துவிட்டு, மாலையில் கூட்டத்தில் உரையாற்றுவார்கள்.  இந்தியாவில், இது போன்று பிரச்சாரம் செய்த இயக்கம் வேறு உண்டா? அப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ததன் விளைவுதான், இன்றைக்கு அசைக்க முடியாத ஓர் ஆட்சியை, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியை, இந்த இயக்கம் பெற்றெடுக்க முடிந்தது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்!

கடந்த 7.6.2025 அன்று மாலை  கும்பகோணத்தில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கத்தில்   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சார பீரங்கி பச்சை அட்டைக் ‘குடிஅரசு!’

மிகுந்த எழுச்சியோடு குடந்தை மாநகரில், பல மாவட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற கழக மாவட்டங்களை இணைத்து, அந்தந்த வட்டாரங்களில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – அதனுடைய பிரச்சார பீரங்கியாக விளங்கிய ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கருத்தரங்கத்தின் முதல் வெற்றி!

இந்த  சுயமரியாதை இயக்கம் போராடி, பெரிய ஆக்கங்களையும், தன்னுடைய நோக்கங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு முன்பாக, அது செய்திருக்கின்ற சாதனைகள் என்ன என்பதை பல தலைமுறையினர், குறிப்பாக இளைய தலைமுறையினர், அதிலும் குறிப்பாக மகளிர் உணர்ந்து கொள்ளவேண்டும். இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கு. ஏனென்றால், ஏராளமான மகளிர் இங்கே வந்திருக்கிறீர்கள்.  அது முதற்கண் இந்தக் கருத்தரங்கத்தினுடைய வெற்றி. இன்னமும் ஏராளமாக மகளிர் வரவேண்டும்.

நம்முடைய தோழர்கள் ஓர் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி மதவாதிகள், குறிப்பாக கிறித்தவர்கள் மற்ற மதவாதிகள் தங்களுடைய மத நம்பிக்கைக்குரிய இடத்திற்குச் செல்லுகிறார்கள். அங்கே அவர்கள் செல்வது வணங்குவதற்காக – ஆனால், நம்முடைய தோழர்கள் இங்கே வந்திருப்பது வணங்குவதற்காக அல்ல. தங்களுடைய மனிதத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்வதற்காக.

எனவே, எப்படிப்பட்ட பாதை நம்முடைய பாதை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே ஜாதி இல்லை, மதம் இல்லை, கட்சி இல்லை; எல்லா உணர்வாளர்களும் இருக்கிறோம்; அத்துணை பேரும் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றீர்கள். பெண்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். இது முதல் புரட்சி!

இப்படிப்பட்ட ஒரு நல்ல கருத்தரங்கத்தினை குடந்தை மாநகரில் சிறப்பாக ஏற்பாடு செய்து, நம்மையெல்லாம் வரவேற்று இருக்கக் கூடிய கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, அனைத்துக் கட்சித் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய குடும்பத்துப் பிள்ளை என்ற பெருமையை என்றைக்கும் பெற்றிருக்கக்கூடியவர், குடந்தை மாநகரில் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமைக்குரிய ஒரு வாய்ப்பையும் பெற்றவர். குடந்தையை ‘அவாளுக்கு’ என்று ஒதுக்கிவிட்டார்கள். இவர் அந்த அவாளை வென்றிருக்கின்றார்.

எல்லோருக்கும், எல்லாம் கொடுப்பதுதான் நம்முடைய வேலை!

இவர் நமக்கு எப்படி சட்டப்பேரவை உறுப்பினரோ, அதுபோன்று ‘அவாளுக்கும்’ இவர் சட்டப்பேரவை உறுப்பினர்தான். அதிலொன்றும் நமக்குக் குறைபாடு இல்லை. எல்லோருக்கும், எல்லாம் கொடுப்பதுதான் நம்முடைய வேலை.

இவர், அங்கே போனார், இங்கே போனார் என்று சொல்கிறார்கள். அவர் எங்கே போனாலும், இங்கேதான் இருப்பார்.

தேர் எங்கே சுற்றினாலும், கடைசியாக அதனுடைய நிலைக்குத்தான் வரவேண்டும்.

சுயமரியாதை குடும்பத்தின் வார்ப்புகளில்….

ஆகவே, சாக்கோட்டை, சுயமரியாதைக் கோட்டை. அந்த அடிப்படையில் வந்திருக்கக் கூடிய, நம்முடைய சுயமரியாதை குடும்பத்தின் வார்ப்புகளில், விழுதுகளில், பலமான விழுதாக இருக்கக்கூடியவர் நம்முடைய சாக்கோட்டை அன்பழகன் அவர்கள்.

இங்கே குடும்பம் குடும்பமாக வந்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

எந்நாளும் சுயமரியாதைக்காரர் என்பதில் பெருமை கொள்பவர்!

மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதைவிட, எந்நாளும் சுயமரியாதைக்காரர் என்பதில் பெருமை கொள்கின்ற குத்தாலம் கல்யாணம் அவர்களே!

எனக்கே ஒரு பெரிய வியப்பு – இந்நூற்றாண்டு விழாவில், குடந்தையில், 92 வயது எனக்கு என்பதை நீங்கள் அடிக்கடி பேசி, ஞாபகப்படுத்தும்போதுதான் எனக்கே அது நினைவிற்கு வருகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதே குடந்தையில், 82 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப்பற்றி, குடந்தையில் இருக்கின்ற இளைஞர்களுக்குக்கூட இந்தச் செய்தி தெரியாது.

குடந்தை காந்தி காங்கேயன் பார்க்!

குடந்தை நகரத்தின் நடுவே இருந்த குடந்தை காந்தி காங்கேயன் பார்க்கில்தான் அய்யா அவர்களுடைய கூட்டம், அண்ணா அவர்களுடைய கூட்டம், மற்ற கூட்டங்கள் எல்லாம் நடந்திருக்கின்றது.

அந்த இடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், முதன்முதலாக நான்  மேசைமீது ஏறி நின்று பேசிய ஊர் இந்த ஊர். அப்போது எனக்கு 10 வயது. இன்றைக்கு 2026 ஆம் ஆண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில், நான் இந்த இயக்கத்தினுடைய முதல் பணியாளன் என்ற முறையில், உங்களையெல்லாம் சந்திக்கின்றபொழுதில், இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது என்கின்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.

இந்த இயக்கத்தினுடைய வழியில் நடைபெறக்கூடிய ஆட்சியை யாரும் தொலைத்துவிட முடியாது. இந்த விழா, இது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்கு அடை யாளம்.

சுயமரியாதை இயக்கக் கொள்கையின் சிறப்பு – தனி ஆற்றல்!

என்னுடைய பெருமையைச் சொல்கிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம்; இந்தக் கொள்கைக்கு இருக்கின்ற சிறப்பு, தனி ஆற்றல் அதுதான்.

நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் சொன்னார். அவருடைய தந்தையார் கணபதி. அவருடைய மைத்துனர் ஆர்.கே.சுந்தரம் ஆகியோர் மிகப்பெரிய அளவிற்கு – இந்த  இயக்கத்திற்குப் பணிபுரிந்த ஒரு பெரிய வரலாறு உண்டு.

சுயமரியாதைச் சுடரொளிகள்
பெயர்ப் பட்டியல்!

சுயமரியாதைச் சுடரொளிகள் பெயர்ப் பட்டியலைக் கொடுத்தார்கள் நம்முடைய தோழர்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் இதில் இருக்கின்றன. அவர்களெல்லாம் உழைத்த உழைப்புதான் இந்த மேடை. இன்றைக்கு நாமெல்லாம் இவ்வளவு வசதியாக அமர்ந்திருக்கின்றோம். ஆனால், இப்படிப்பட்ட நிலை, ஒருகாலத்தில் கிடையாது.

தண்டோரா போட்டு கூட்டத்தைச் சேர்த்த இயக்கம் – சுயமரியாதை இயக்கம்!

1945 ஆம் ஆண்டில், திராவிடர் மாணவர் கழகத்தின் சுற்றுப்பயணம் நடைபெற்றது. என்னை மேசை மீதுதான் ஏறி பேசச் சொல்வார்கள். கூட்டத்தின் அழைப்பிதழ், ஒன்றுக்கு, 32 சைசில் அச்சடிப்பார்கள்.  அதைவிட சிறிய அளவிற்கு நோட்டீசு அச்சடிக்க முடியாது. அந்த நோட்டீசை அடித்தாலே பெரிய பெருமைதான் நம்முடைய இயக்கத்திற்கு. ஏனென்றால், வெறும் தண்டோரா போட்டு கூட்டத்தைச் சேர்த்த இயக்கம் இந்த இயக்கம். இன்றைய இளைஞர்கள் இதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஏர்கண்டிஷன் ஹாலில் அமர்ந்து இன்றைக்குக் கூட்டத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஆனால், அன்றைக்கு அப்படி இல்லை. இந்த இயக்கம் எப்படி வளர்ந்தது? என்பதைத் தோழர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

கழுத்தில் தமுக்கை தொங்கவிட்டுக் கொண்டு, கடைவீதி தெருவில் நின்றுகொண்டு, தமுக்கை அடிப்பார். அவரை சுற்றிக் கூட்டம் சேர்ந்துவிடும். இப்போதுகூட நீங்கள் அதைப் பார்த்திருக்கலாம்; மழைக் காலத்தில், ஆற்றில் வெள்ளம் வரப் போகின்றது என்கிற எச்சரிக்கை விடுப்பதற்காகக் கழுத்தில் தமுக்கைக் கட்டிக்கொண்டு எச்சரிக்கை செய்தியை சொல்வார்கள்.

எல்லோரும் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தைக் கேட்க வாருங்கள்!

நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்தவர், தமுக்கை அடித்து, ‘‘குடந்தை காந்தி காங்கேயன் பார்க்கில், சுயமரியாதை இயக்கப் பொதுக்கூட்டம் நடை பெறவிருக்கின்றது. அக்கூட்டத்தில், பொன்னம்பலம் என்ற ஒருவர் பேசுவார். எல்லோரும் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தைக் கேட்க வாருங்கள்’’ என்று தமுக்கை அடித்துக் கொண்டே செல்வார்.

அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சியோ, பொழுது போக்கிற்கு என்றோ எதுவும் கிடையாது.

‘‘என்னய்யா, சொல்லிவிட்டுப் போறான்?’’ என்று ஒருவர் கேட்பார்.

‘‘காந்தி காங்கேயன் பார்க்கில் கூட்டம் இன்று மாலை நடைபெறப் போகிறதாம்’’ என்று இன்னொருவர் சொல்வார்.

‘‘சரி, போய் பார்ப்போம்’’ என்று இவர் சொல்வார்.

‘‘அதெப்படி, சாமி இல்லை என்று சொல்கிறவர்கள், ஜாதி இல்லை என்று சொல்கிறவர்கள் அவர்கள்’’ என்று இன்னொருவர் சொல்வார்.

ஆனால், அன்று மாலையில் நடைபெறும் கூட்டத்திற்கு அப்படிப் பேசிக் கொண்டவர்களே சென்று பார்ப்பார்கள். கூட்டத்தில், பேசுகின்றவரை உற்றுப் பார்ப்பார்கள்.

‘‘ஏன்யா, இந்த ஆளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே?’’ என்று ஒருவர் சொல்வார்.

இன்னொருவரும், ‘‘ஆமாம், நானும் பார்த்த ஞாபகமாகத்தான் இருக்கிறது’’ என்பார்.

அங்கே பேசிக் கொண்டிருப்பவர் வேறு யாரும் இல்லை. பொன்னம்பலனார்தான், காலையில் தமுக்கை அடித்துக் கூட்டம் நடைபெறப் போற செய்தியை மக்களிடையே பிரச்சாரம் செய்துவிட்டு, மாலையில் அந்தக் கூட்டத்தில் உரையாற்றுவார்.

 இதுபோன்று பிரச்சாரம் செய்த
வேறு இயக்கம் உண்டா?

இந்தியாவில், வேறு எந்த இயக்கத்திலாவது பிரச்சாரத்தினை இதுபோன்று செய்த இயக்கம் உண்டா? என்றால், நிச்சயமாகக் கிடையாது.

அப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ததன் விளைவு தான், இன்றைக்கு அசைக்க முடியாத ஓர் ஆட்சியை, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியை, இந்த இயக்கம் பெற்றெடுக்க முடிந்தது.

நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் = திராவிடர் கழகம்!

1944 ஆம் ஆண்டு, நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக மாறியது. நீதிக்கட்சி + சுயமரியாதை இயக்கம் = திராவிடர் கழகம்.

அதிலிருந்து அரசியல் பிரிவாக, முன்பு நீதிக்கட்சி என்ன செய்ததோ, அதன் தொடர்ச்சியை செய்து வருகின்ற கழகம்தான், திராவிட முன்னேற்றக் கழகம்.

மிகச் சுலபமான அரசியல் வரலாறு; மிக எளிமையான அரசியல் வரலாறு. இவற்றை நீங்களெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்தக் காலகட்டத்தில், இந்த காங்கேயன் பார்க், உப்புக்காரத் தெரு என குடந்தையில் உள்ள ஒவ்வொரு பகுதியும் எனக்குத் தெரியும். அன்றைய காலகட்டத்தில் இயக்கக் கூட்டம் இதுபோன்ற அரங்கத்தில் நடைபெறாது. தெருத் தெருவாகக் கூட்டம் போடுவோம்.

கும்பகோணத்தில்தான்
திராவிட மாணவர் கழகம் உருவானது!

கும்பகோணத்தில்தான் திராவிட மாணவர் கழகம் உருவானது என்று சொன்னார்கள்.  ‘விடுதலை’யில் இருந்து வெளியே வந்து, அய்யாவின் வாழ்த்துதலோடு ‘திராவிட நாடு’ பத்திரிகையை அண்ணா அவர்கள் நடத்தினார்.

‘‘லேனா காயசித்தி லேகியம்’’ விளம்பரம்!

‘குடிஅரசு’ போன்ற நம்முடைய ஏடுகளுக்கு விளம்பரங்களே கிடையாது. ஒரே ஒரு விளம்பரம், அதுவும் சிறிய அளவில் இருக்கும். அது என்னவென்றால், ‘‘லேனா காயசித்தி லேகியம்’’ என்பதுதான். இங்கே யாருக்காவது அதுபற்றி தெரியுமா?

ஜெயராம் என்பவர்தான் நம்முடைய இயக்கத்திற்கு ஆதரவானவர், நம்முடைய ஏட்டிற்கு விளம்பரம் கொடுத்தவர்.

அன்றைய காலகட்டத்தில், தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்து, திட்டங்கள் பலவற்றைப் போட்டு, எல்லாப் பகுதிகளிலும் பிரச்சாரம் செய்வோம்.

பகுத்தறிவுப் பணியை செய்த ஊர் சாக்கோட்டை!

பெரிய பெரிய போராட்டங்கள் நடத்தினோம். அந்தக் காலத்திலேயே சாக்கோட்டை, பகுத்தறிவுப் பணியை செய்த ஊராகும்.

‘‘10 வயது பகுத்தறிவுச் சிறுவன் வீரமணி!’’

எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். என்ன அந்த ஆச்சரியம்? அந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியில், நோட்டீசு அச்சடிப்பதில், ‘‘திருவாரூர் மு.கருணாநிதி, மாணவர்’’ என்று குறிப்பிடுவார்கள். என்னுடைய பெயரை எப்படி குறிப்பிடுவார்கள் என்றால், ‘‘10 வயது பகுத்தறிவுச் சிறுவன்’’ வீரமணி’’ என்று குறிப்பிடுவார்கள். அப்படி கூட்டம் நடைபெறும்போது கடைசியாக  என்னை பேசச் சொல்வார்கள்.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *