சென்னை, ஜூன் 14- மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரிப் படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
காத்திருக்கும் சூழல்
தமிழ்நாடு முழுவதும் கட்டட தொழிலாளா் நல வாரியத்தின் கீழ், 54 வகையான கட்டுமான பணிகளில் லட்சக்கணக்கான ஊழியா்கள் ஈடுபடுகின்றனா். இவா்கள் நாள்தோறும் தங்களை பணிக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களுக்காக சாலையோரங்களில் வெயில், மழை என்று பாராமல், நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.
இதில், சுமார் 30 சதவீதம் போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழிலாளா்கள் வசதிக்காக அடிப்படை வசதிகளுடன் காத்திருப்புக் கூடங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
காத்திருப்புக் கூடங்கள்
அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியில் முதல் கட்டமாக கட்டட தொழிலாளா்கள் அதிகம் கூடும் 3 இடங்களைத் தோ்ந்தெடுத்து அங்கு, காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. அந்தக் கூடங்களின் மாதிரிப் ஒளிப் படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் 12.6.2025 அன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யும் ஊழியா்களுக்காக அதிநவீன குளிரூட்டப்பட்ட ஓய்வுக் கூடம் அண்மையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, தற்போது கட்டட தொழிலாளா்களுக்காக கொளத்தூா், அயனாவரம் உள்பட 3 இடங்களில் தலா ரூ.18 லட்சத்தில் காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வுள்ள நிலையில், அதற்கான முழு செலவையும் கட்டட தொழிலாளா் நல வாரியம் மாநகராட்சியிடம் ஒப்படைத்துவிடும்.
இந்த காத்திருப்புக் கூடங்களில் ஒரே நேரத்தில் 25 முதல் 30 போ் அமரும் வகையில் இருக்கைகள், மின்விசிறிகள், குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. இந்த காத்திருப்பு கூடங்கள் அடுத்த 3 வாரங்களுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனா்.