காவல்துறை தலைமை இயக்குநர்
நேர்காணலை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு
சென்னை, ஜூன் 14- தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு என்ற தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை சுட்டிக்காட்டி காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேர்காணல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.6.2025) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நேர்காணல்
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாக பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நேர்காணலை பகிர்கிறேன்.NCRB தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது.
விழிப்புணர்வு
அதே நேரம் போக்சோ குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகார் அளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
அச்சமின்றி புகார் அளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைது செய்து தண்டனை பெற்றுத்தர முடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம். ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் Zero Tolerance விரைவான விசாரணை – அதிகபட்ச தண்டனை – முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் கொள்கை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.