சென்னை, ஜூன் 14- போலி ஆவணங்கள் தயாரித்து வழக்குரைஞர் ஒருவரின் நிலத்தை அபகரிக்க முயன்ற பா.ஜனதா மகளிர் அணி செயலாளர் கைது செய்யப்பட் டார்.
பழைமையான கட்டடம்
புதுவண்ணை கிராஸ்ரோட்டை சேர்ந்தவர் ஜோசப் ராஜ். வழக்குரைஞர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டடத்தை வாங்கி உள்ளார். அது 100 ஆண்டு பழைமையான கட்டடம் என்பதனால் இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டுவதற்காக ஏற்கெனவே செயல்பட்டு வந்த 5 கடைகளை காலி செய்யும்படி வழக்குரைஞர் தாக்கீது அனுப்பி உள்ளார்.
அந்த 5 கடைகளில் ஒரு கடையில் சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் பா.ஜனதா கட்சியில் மாவட்ட மகளிர் அணியில் செயலாளராகஉள்ளார். இவர் கடையை காலி செய்ய மறுப்பு தெரிவித்து அவரிடம் தகராறு செய்துள்ளார்
பின்னர் சாமுண்டீஸ்வரி தாமாகவே கடையை இடித்துவிட்டு விரிவாக்கம் செய்து கடையை நடத்தி வந்தார். இதுகுறித்து ஜோசப் ராஜ் சென்னை புதுவண்ணை காவல் துறை நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த புகார் நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி நடத்தி வந்தார்.
இதனால் ஜோசப் ராஜ் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் போலி அரசு ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக சாமுண்டீஸ்வரி மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, சாமுண்டீஸ்வரி தனது கடையில் ஜெராக்ஸ் எடுக்க வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த தாமஸ் என்பவரின் சொத்து வரி ரசீதை கணினி மூலம் பெயர் மாற்றம் செய்து வாடகையில் இருக்கும் இடத்தின் சொத்து வரியை தனது பேருக்கு மாற்றம் செய்தது தெரியவந்தது.
பா.ஜனதா பெண் நிர்வாகி
இதேபோல் சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பாரதி என்பவரது சொத்துப் பத்திரத்தில் அவரது மனைவி பெயரை அழித்து விட்டு சாமுண்டீஸ்வரி தனது பெயரை மாற்றி மோசடி செய் தது தெரிந்தது. மேலும் ஜோசப்ராஜ் பெயரில் உள்ள மின் இணைப்பில் அவரது பெயருக்கு மாற்றி சாமுண்டீஸ்வரி போலியான பத்திரம் ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தது உறுதியானது.
இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி புதுவண்ணை காவல் துறையினர் மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், பிறரை ஏமாற்றி சொத்தை அபகரித்தல், கணினி மூலம் அரசு ஆவணங்களை உருவாக்குதல் ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சாமுண்டீஸ்வரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.