மதுரையில் ஜூன் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறுகிறது!

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 14– முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத ஒன்றியபா.ஜ.க அரசைக் கண்டித்து தி.மு.க.மாணவர் அணி சார்பில் ஜூன் 18ஆம் தேதி “மதுரை, விரகனூர் சுற்றுச் சாலை” யில் ‘‘மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறுகிறது.

தீர்மானம்

கீழடி ஆய்வை மறுக்கும் தமிழர்விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்து 1.6.2025 அன்று மதுரையில் தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்மொழி – தமிழ்ப் பண்பாடு ஆகியவை காலத்தால் முந்தையவைஎன்பதை அகழாய்வுகளும் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன. 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தாதிலிருந்து இரும்புப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்கிற வரலாற்றுஉண்மை இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகள் மூலமாக நிறுவப்பட்டிருப்பதைத் தமிழ்நாடு அரசு ஆதாரப்பூர்வமாக வெளியிட்டும்கூட, அதற்கு இந்தியப் பிரதமரோ, இந்திய தொல்லியல்துறையோ வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை.

கீழடி ஆய்வு

இந்தப் பொதுக்குழு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வுகளின் அடிப்படையில் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதற்கான தரவுகள் கிடைக்கப்பெற்று அவை உலகளாவிய ஆய்வு நிலையங்கள் மூலமாக வும் நிறுவப்பட்டிருப்பதைத் தொல்லியல் துறை சார்பில் அதன் அதிகாரியாக இருந்த அமர்நாத்ராமகிருஷ்ணா ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்து ஆண்டுகளாகியும் அதனை ஏற்காமல், திருத்தங்கள் தேவை என ஒன்றிய அரசின்தொல்லியல் துறை தெரிவித்திருப்பது, தமிழ் மீதும் தமிழர்களின் பண்பாட்டின் மீதும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குள்ள வன்மத்தையே காட்டுகிறது.

தங்களின் பொய்யான – கற்பனையான சமஸ்கிருத–சரஸ்வதி ஆற்று நாகரிகத்தை, தமிழர்களின் வைகை ஆற்று – கீழடி ஆய்வுகள் உண்மைத்தரவுகளுடன் மிஞ்சிவிட்டன என்ற காழ்ப்புணர்விலிருந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிவந்து, கீழடி ஆய்வறிக்கையை ஏற்று, இந்தியாவின் பெருமைமிகு நாகரிகமாகத் தமிழரின் நாகரிகத்தை அறிவிக்க வேண்டும் என இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கீழடி தமிழரின் தாய்மடி! பரந்துபட்ட பார்வையோடு – அறிவியல் பூர்வமாக எங்களது தொன்மையை நிறுவுகிறோம். இதில்ஆணவ – ஆதிக்க அரசியல் செய்யநினைத்தால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒன்றிய பா.ஜ.க. அரசை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது!

இவ்வாறுதீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து, பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வருகிற18 ஆம் தேதி அன்று தி.மு.க. மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:–

முதலமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி;

கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற் கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.

கடந்தகால அடிமை எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு விரைவாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார்.

அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக்கண்டித்து வருகிற ஜூன் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மதுரை, விரகனூர் சுற்றுச் சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறுகிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், தி.மு.கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் – மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகி கள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தி.மு.க. மாணவரணிச் செயலாளர்
இரா.ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *