கேள்வி 1: நாடு முழுவதும் நடைபெறுகின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் சிந்தனை செயலாக்க கருத்தரங்கம் உள்ளிட்டவற்றிற்கு மக்களின் அமோக ஆதரவும், வரவேற்பும் இருப்பதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
– க. தமிழ்ச்செல்வி, செய்யாறு.
பதில் 1: நமது இயக்கத்திற்கும், கொள்கைப் பரப்பலுக்கும் முறுக்கேற்றியுள்ளது. இவ்வியக்கமும், தந்தை பெரியாரும் பேராயுதங்கள் என்று உணர்ந்து மக்கள் கூடுவதும், இறுதிவரை கலையாமல் இருந்து கேட்டு உள்வாங்கும் முறையும் நம்மை மகிழ்ச்சிக்குரியதாக்குகின்றன. பயிர்போன்று உழவர்க்கும், பசித்தவர்க்கு பாற்கட்டித் தயிர் போன்றும் அப்பேராயுதங்கள் தேவைப்படுகின்றன என்பதை நிரூபித்து, நிலைநிறுத்தி, வாலிப உள்ளங்களுக்குப் புத்தாக்கம் செய்கின்ற திருப்புமுனை!
***
கேள்வி 2: ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கும் அபாயம் இருப்பதால், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தமிழ்நாட்டுக்கான நிதியை ஒதுக்குங்கள் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ஒன்றிய அரசு அமல்படுத்துமா?
– ஜெ. இராஜேஸ்வரி, மேல்மருவத்தூர்.
பதில் 2: செயல்படுத்தியே ஆக வேண்டும். செயல்படுத்த வைக்கும் நமது ‘திராவிட மாடல்’ அரசு என்பது உறுதி!
***
கேள்வி 3: 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடு திகழ்வதாக ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் கூறி இருப்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை அல்லவா?
– இரா.சகுந்தலா, மேற்கு தாம்பரம்.
பதில் 3: வெறும் சாதனை அல்ல; சாதனை மகுடத்தில் ஒளிரும் – மிளிரும் வைரக்கல்!
***
கேள்வி 4: எத்தனை ஆன்மீக மாநாடுகளை நடத்தினாலும் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவால் வெற்றி பெற முடியாது என்று கூறும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனின் கூற்றை 2026 சட்டமன்றத் தேர்தல் மெய்ப்பித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கலாமா?
– இ.தனசேகரன், அரூர்.
பதில் 4: நிச்சயமாக! அது மூன்றாம் குழலின் முத்திரை முழக்கம்!
***
கேள்வி 5: 2026இல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறிவரும் நிலையில், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு மேனாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருப்பதை பாரதீய ஜனதா கட்சியினர் ஏற்றுக்கொள்வார்களா?
– க.முனியாண்டி, ஆரணி.
பதில் 5: இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு விடைபெற முயற்சித்தல் அவசியம், அவசரம்!
****
கேள்வி 6: தமிழ்நாட்டுக்கு கடந்த ஆண்டு கல்வி நிதி ரூ.2,291 கோடியை ஒன்றிய அரசு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா?
– ச.சாந்தி, நாமக்கல்.
பதில் 6: சில நேரங்களில் சட்டக் கோர்ட்டுகளாக மட்டுமே நீதிமன்றங்கள் நடந்து கொள்வது வாடிக்கையே என்றாலும் வெல்ல வேண்டிய நியாயங்களும், நீதியும் வெல்லும் என்பது உறுதி. சற்று கால தாமதமாகலாம். அதே உச்சநீதிமன்றம் முன்பு இம்மாதிரி நிலைகளில் நிபந்தனை போட முடியாது என்றும் கூறியுள்ளதே–!
***
கேள்வி 7: 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் பிரச்சாரம் மட்டுமே பார்க்க முடிகிறது என்றும், நிகழ்காலத்தை பேசுவதை விட்டு விட்டு 2047-ஆம் ஆண்டின் கனவுகளை விற்று வருவதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை அல்லவா?
– எஸ்.பத்ரா, திருப்பெரும்புதூர்.
பதில் 7: ஆம். ஆம்! அரசியலில் நாளை நடப்பதை யார் அறிவர்?
****
கேள்வி 8: அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை வழங்க பரிசீலனை செய்து வருவதாக இனிப்பான செய்தியை ஆந்திர அரசு அறிவித்துள்ளது போன்று, இன்பத் தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ அரசும் தெவிட்டாத தேனினும் இனிய செய்தியை அறிவிக்குமா?
– த.தமிழ்நிலா, திண்டிவனம்.
பதில் 8: தவறான கருத்து. தமிழ்நாட்டு பெண்ணுரிமை கண்ணோட்டத்திற்கு எதிரானது. சுயமரியாதை – சமூகநீதிக்கு முற்றிலும் முரண். அதிக போதை, அதிக உணவு என்பன உடல்நலக் கேட்டிற்கு ஊக்கத்தைத் தருவன போன்றதே, பெண் விடுதலைக்குக் கேடான அதிக பிள்ளைகளைப் பெருதல் என்பதும்! ‘திராவிட மாடல்’ ஆட்சி அத்தவறுகளை செய்யாது – செய்துவிடவும் கூடாது!
***
கேள்வி 9: தமிழ்நாடு முதலமைச்சர் போலி சமூகநீதி பேசுகிறார் என்றும், பிரதமர் மோடி தான் உண்மையான சமூகநீதியின் தலைவர் என்றும் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியிருப்பது 2026ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாமா?
– அ.வீராசாமி, வில்லிவாக்கம்.
பதில் 9: எப்போது அவர் பொறுப்போடு பேசினார்? பரிதாபத்திற்குரிய அத்தோல்வி மன்னர்!
***
கேள்வி 10: ஏழை, எளிய மக்களின் வீடுகளில் அடுப்பு எரிகிறதா? என்பதைப் பற்றி கவலைப்படாமல், தமிழ்நாட்டில் உள்ள 90 சதவீத கோயில்களில் விளக்குகள் எரிவதில்லை என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு மேனாள் அய்.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் அல்லவா?
– யாழினி ஏனாத்தூர்.
பதில் 10: இம்மாதிரி ஆசாமிகளைப் பற்றிக் கேட்டு உங்கள் நேரத்தையும், எனது நேரத்தையும் வீணடிக்காதீர்கள் தோழர்களே!