நேர்மையாக தேர்வெழுதுவதற்காக ஒட்டுமொத்த ஏ.அய். சேவைகள் நிறுத்தம்

viduthalai
3 Min Read

சீனாவின் மிகவும் கடினமான  பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, இந்த ஆண்டு 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுடன் சனிக்கிழமை (ஜூன் 7) தொடங்கியது.

7 முதல் 10 ஆம் தேதிவரை நான்கு நாட்கள் நடக்கும் இந்தத் தேர்வு, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் என்பதால், எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க சீனா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளன.

மோசடிகளைத் தடுக்க ஏ.அய். முடக்கம்

இந்த ஆண்டுத் தேர்வின்போது, AI மூலம் சிறிய உதவி கிடைக்கும் என்று சில மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக, வினாக்களுக்கு பதில்களைத் தேட அல்லது புள்ளி விவரங்களைப் பெற பெற AI கருவிகளைப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, முக்கிய AI சேவைகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

DeepSeek மற்றும் ByteDance நிறுவனத்தின் கீழ் செயல்படும் Doubao போன்ற பிரபலமான AI தளங்கள், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை முன்னிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு தங்கள் சேவைகள் வழங்கப்படமாட்டா என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

தேர்வு நடைபெறும் நாட்களில், AI அம்சங்கள் முடக்கப்படுவதற்கான காரணம், மாணவர்கள் எந்தவிதமான ஏமாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதேயாகும் என்று தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கல்வியின் நம்பகத்தன்மை

இந்த நடவடிக்கை, சீனாவின் கல்வி முறையில் நேர்மை மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். கவோகாவ் தேர்வு, சீனாவில் ஒரு மாணவரின் கல்வி மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இத்தேர்வில் ஏற்படும் எந்தவிதமான முறைகேடும் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், சீனாவின் கல்வி முறையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும். எனவே, AI போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஏமாற்றும் வாய்ப்புகள் உருவாவதைத் தடுக்கும் வகையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, மாணவர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்வின்  உண்மைத்  தன்மையைப் பாதுகாப்பதற்கான அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தேர்வுக் காலப்பகுதியில் AI சேவைகள் முடக்கப்படுவது, மாணவர்கள் தங்கள் சொந்த அறிவையும் திறனையும் மட்டுமே நம்பி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்தியாவில் 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்த மிக முக்கிய தேர்வுகளில் மோசடி நடக்கவில்லை என்று செய்தி வந்தால்தான் அது உலக அதிசயம்.

பேனா மோசடி

2022ஆம் ஆண்டு சண்டிகரில் நடந்த அரியானா மாநில அரசுப்பணியாளர் தேர்வு எழுத வந்தவர் தன்னுடைய பேனாவடிவில் இருந்த சிறிய வகை தகவல் பரிமாற்ற கருவி மூலம் கனடா நாட்டில் உள்ள தனது நண்பனுக்கு கேள்விகளை ஸ்கேன் செய்து அனுப்ப கனடா நாட்டில் உள்ள அந்த நபரும் அக்கேள்விக்கான விடை அவரது பேனாவடிவில் உள்ள கருவிக்கு மீண்டும் அனுப்பினார். அது சிறிய டிஸ்பிளேவில் தெரியவர பதில் எழுதி தேர்வை முடித்தார். இதற்கு தேர்வு நடக்கும் அறையின் மேற்பார்வையாளரும் உடந்தையாக இருந்துள்ளார். 2024 ஆம் ஆண்டு தேர்வின் போது நடந்த சோதனையில் சிலர் பேனாவடிவில் மின்னணுக் கருவிகள் பயன்படுத்தி மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

என்ன நடவடிக்கை?

இந்த மோசடி பல ஆண்டுகளாக நடந்து வருகிறதாம். ஆனால் இந்த செய்தி வந்த பிறகு அடுத்து என்ன நடந்தது இதனை தடுக்க என்ன செய்தார்கள் என்ற விவரங்கள் எதுவுமே இல்லை. அதே போல் முன்பு தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசுப்பணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற செய்தி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நீட் மற்றும் ஜே இ இ தேர்வுகள் மோசடி நடக்காத ஆண்டுகளே கிடையாது என்ற நிலை உருவாகி விட்டது.

இடையூறு இல்லாமலிருக்க…

இந்த நிலையில் பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்காக ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவு (AI) சேவை நிறுத்தப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமா? சீனாவின் பல்வேறு நகரங்களில் தேர்வு தொடங்கி முடியும் வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட செய்திகளும் வருகிறது, காரணம் விமான இறைச்சல் மாணவர்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தான், காரணம் பல பல்கலைக்கழகங்கள் தேர்வை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளிப்பூங்கா மற்றும் நீர் நிலைகளின் அருகில் மாணவர்களை தேர்வெழுத வசதிகள் செய்து தரும். அப்போது எந்த ஒரு ஓசையும் அவர்களுக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்பதற்காக விமான சேவையையே தற்காலிகமான நிறுத்தும் அதிகாரம் கல்வித்துறைக்கு தரப்பட்டுள்ளது. அங்கு கல்விக்கு எந்த அளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *