60 வழக்குகளில் தொடர்புள்ள ரவுடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு

viduthalai
3 Min Read

60 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசனும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சந்தித்த விவகாரம் பாஜவிலும், காவல் துறையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காவல் அதிகாரிகளை மிரட்டும் வகையில் அமித்ஷாவை சந்தித்த ஒளிப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டது கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி என்று பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் கடந்த சில மாதங்களாகவே பாஜவில் இணைந்து வந்தனர்.

காவல் அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றியதாகக் கூறும் அண்ணாமலைதான் இந்த குற்றவாளிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வழங்கியுள்ளார் என்று அக்கட்சியினரே குற்றம் சாட்டத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் (எ) கே.ஆர்.வெங்கடேஷ்.

இவர், தமிழ்நாடு பாஜவில் ஓபிசி பிரிவு தலைவராகவும் உள்ளார். இந்த பதவிகளை வாங்க அவர் பல கோடிகளை செலவு செய்ததாக கூறப்படுகிறது. வெங்கடேசன் மீது தற்போது, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் 60 வழக்குகள் உள்ளன.

அதில் ஆந்திரா, தெலங்கானாவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திரா காவல் துறையினரால் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். இவர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். இவ்வளவு வழக்குகள் உள்ளவருக்குத்தான் பாஜவில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள் போட்டிப் போட்டு விருப்பம் தெரிவித்தனர். இதனால் மதுரைக்கு வருவதால் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே அமித்ஷாவைச் சந்திக்க வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் முடிவு எடுத்தனர். ஆனால் திடீரென இந்த உத்தரவுகளை மீறி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில நிர்வாகி வினோஜ் பி. செல்வம் ஆகியோரது ஆதரவுடன் அமித்ஷாவை வரவேற்க நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றார் மிளகாய் பொடி வெங்கடேசன். இவர், அமித்ஷாவை மதுரை விமானநிலையத்தில் சால்வை கொடுத்து வரவேற்றார்.

செம்மரக்கட்டை கடத்தல் உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பட்டியலில் உள்ளவரை அமித்ஷா சந்தித்த விவகாரம் கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை உருவாக்கியது. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த மேனாள் துணை மேயர் ஒருவருக்கு அனுமதி கேட்டனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேநேரத்தில், சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கு அனுமதி வழங்கப்பட்டது மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதோடு இல்லாமல், அமித்ஷாவைச் சந்தித்த இரு ஒளிப்படங்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மிளகாய்ப்பொடி வெங்கடேசன், அதில், ஆவடி காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலங்கானா காவல்துறை என அனைவரையும் டேக் செய்து தான் யார் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் மமதையுடன் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வழக்குகளை விசாரிக்கும் காவல் துறையினரை மறைமுகமாக மிரட்டும் செயல் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்ததால், ஆவடி காவல் துறையினர் மிளகாய்ப் பொடி வெங்கடேசனை கைது செய்தனர். பல நாள் சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் தவித்தார். இப்போது, இந்த போட்டோ மூலம் அமித்ஷாவே என் பின்னால் உள்ளார் என்று அவர் சொல்கிறார் என்றும் காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். இப்படி குற்றப்பின்னணி கொண்ட நபரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பதற்கு, ஒன்றிய உளவுத்துறை எப்படி அனுமதித்தது. உளவுத்துறை அதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லையா அல்லது அவர்களையும் மிளகாய் பொடி வெங்கடேசன் சரிக்கட்டினாரா என்ற சந்தேகங்கள் எழும்புவதாக பா.ஜ.வி.னர் தெரிவிக்கின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *