ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 6 “வாயடைத்துப் போனவரின் வாயடைப்பை அகற்றிய மருத்துவம்”

viduthalai
7 Min Read

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

கட்டுரை, ஞாயிறு மலர்

அது ஒரு பொன் மாலைப் பொழுது. கதிரவனின் பொன்னிற கதிர்கள் மேற்கு மலைத் தொடர்களில் மறையும் அந்த அந்தி மாலை நேரத்தில் என் சொந்த மருத்துவமனையில் அமர்ந்திருந்தேன்.

அப்பொழுது மருத்துவமனைக்கு வெளியில் ஒரு சிற்றுந்து வந்து நின்ற சத்தம் கேட்டது. செவிலியர் வெளியே சென்று பார்த்தார். சிற்றுந்திலிருந்து அய்ந்து பேர் இறங்கினர். இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள். அதில் ஒரு நடுத்தர வயதான ஆண் முகக்கவசம் அணிந்திருந்தார். அவர்கள் வரவேற்பாளரை அணுகி, பேர் மற்றும் முகவரியெல்லாம் கொடுத்து அந்த முகக்கவசம் அணிந்தவரின் கூட வந்தவர்கள், முகக்கவசம் அணிந்தவரின் விவரங்களைப் பதிவு செய்தனர். சற்று நேரத்தில் அவர்கள் அனைவரும் என்னைப் பார்க்க என் அறைக்கு வந்தனர்.

அவர்களில் ஒருவர் நோயாளி பற்றி என்னிடம் விவரிக்கத் தொடங்கினார். முகக்கவசம் அணித்திருந் தவர்தான் நோயாளி. அவர் பெயர் போஜன். 42 வயதான அவர், புகையிலைப் பழக்கம் உடையவர்.

“ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பழக்கம் அவருக்கு இருக்கிறது. ஒரு ஆறு மாதங்களுக்கு முன், மேல் நாடி முன் பற்கள் மேல் கருப்பாக ஒரு சிறிய கொப்புளம் போல் வந்தது. வலி இல்லாததால், நாங்களும் சற்று அசட்டையாக இருந்து விட்டோம். ஒரே மாதத்தில் அந்த கொப்புளம், பெரிதாகத் தொடங்கியது. வேகமாக வளரத் தொடங்கிய அது, ஒரு கட்டியாக மாறிவிட்டது. உடனே நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

டாக்டர் அவரைப் பரிசோதித்து விட்டு, போஜனை வெளியில் இருக்கச் சொல்லி விட்டு, எங்களிடம் பேசினார். அவர் எங்களிடம் சொன்ன செய்தி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது “கருப்புக் கட்டி” (Malignant Melanoma) என்றழைக்கப்படும் ஒருவகை புற்று நோய்க் கட்டி போல் இருக்கிறது. ஒரு “திசுப் பரிசோதனை” (Biopsy செய்து பார்த்து நோயை சரியாகக் கண்டறியலாம் என்று டாக்டர் கூறினார். நாங்களும் சம்மதித்தோம்.

இரண்டே நாட்களில் மருத்துவப் பரிசோதனைக்கு மீண்டும் மருத்துவமனைக்கு போஜனை அழைத்துச் சென்றோம். டாக்டர் கட்டியின் மேல் புறம் மரப்பு ஊசியைப் போட்டு கட்டியின் ஒரு சிறு பகுதியை எடுத்துப் பரிசோதனைக்கான மருந்துள்ள சிறிய குடுவையில் வைத்து, ஆய்வுக்கு அனுப்பினார். ஒரு வாரத்தில் ஆய்வு முடிவு கிடைக்கும் என்றும், ஒரு வாரம் கழித்து வரும்படியும் எங்களைப் பணித்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் டாக்டரைப் போய் மீண்டும் பார்த்தோம்.  அந்த ஒரு வாரத்திலேயே வாயில் இருந்த கட்டி மிகவும் பெரிதாக வளர்ந்து விட்டது. டாக்டர் கையில் ஆய்வறிக்கையின் முடிவு இருந்தது.

வாயில் இருப்பது,”கருப்புக்கட்டி” என்றே முடிவு வந்திருப்பதாகச் சொன்னார் டாக்டர். அதோடு இல்லாமல் அந்தக் கட்டி புற்றுநோய் வகையைச் சேர்ந்தது என்றும், உடனே பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய் காட்டுங்கள், இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும், நாங்கள் பதறிப் போனோம். சரியென்று ஆய்வறிக்கையை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோம். கொஞ்சம் பணம் திரட்டிக் கொண்டு கோவைக்கு சென்று ஒரு பெரிய மருத்துவமனையில் காட்டுவதென்று முடிவெடுத்தோம்.

நாங்கள் திட்டமிட்டபடி கோவை செல்லுவதற்கு மேலும் பத்து நாட்கள் ஆகிவிட்டது. வாயிலிருந்து கட்டி, அதற்குள் மேலும் வளர்ந்து ஏறத்தாழ முக்கால் அளவு வாயின் முன்புறம் வளர்ந்து வாயை அடைத்து விட்டது. ஏதாவது உணவு சாப்பிடக் கூட போஜனால் முடியவில்லை. முக்கால் பங்கு வாய் மூடிவிட்டதால் கெட்டியான உணவுகள் வாயின் உள்ளே போகவில்லை. அதனால் கஞ்சி, பால், பழரசம் போன்றவைதான் அவரால் சாப்பிட முடிந்தது.

கோவையில் ஒரு புற்றுநோய்க்கு சிகிச்சை தரும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றோம். மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு மேலும் பல ஆய்வுகள் செய்தனர். இரத்தப் பரிசோதனை, MRI ஸ்கேன், திசு ஆய்வுகள் செய்யப்பட்டன. அதன் முடிவுகள் கிடைக்க மேலும் ஒரு வாரம் ஆகிவிட்டது அதற்குள் கட்டி வாயை முழுமையாக மூடிவிட்டது. இப்பொழுது நீராகாரம் கூட வாய் வழியே அவரால் சாப்பிட முடியாது போய்விட்டது. மருத்துவமனையில் மூக்கில் ஒரு குழாயைச் செருகி அதன் வழியே பால் போன்ற நீராகாரம் செலுத்தப்பட்டது.

அதை செவிலியர்கள்தான் ஊசி போடும் சிரஞ்சுகள் மூலம், அந்த குழாய் வழியே உள்ளே செலுத்தினர். நரம்பு வழியே, குளுகோசும் செலுத்தப்பட்டது. வார்டு டாக்டர் கட்டியின் தன்மைபற்றி எங்களிடம் சொன்னார். அது மிகவும் ஆபத்தான புற்று நோய்க் கட்டி என்றும், முகத்தின் முன்பக்கம் இருப்பதால் அறுவை மருத்துவமோ, கரண்ட் (Radiation) வைப்பதோ முடியாது என்றும், அவர் இன்னும் ஓரிரு மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்றும் கூறினார். மிகவும் அதிர்ச்சியுடனும், மன வருத்தத்தோடும் நாங்கள் திரும்ப வந்து விட்டோம். இப்பொழுது வாயின் முன்புறம் முழுவதும் கட்டி மூடி வாயையே முழுவதுமாக அடைத்து விட்டது.

வாய் வழியே ஏதும் சாப்பிட முடியாது முழுவதும் வாய் அடைத்து விட்டது கோவை மருத்துவமனையில் போட்ட மூக்குக் குழாய் (Ryle’s tube feeding) வழியேதான் நீராகாரம் செலுத்தினோம். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு கூட்டி வந்தோம்” என்று ஒரு மருத்துவ அறிக்கையையே போஜனைப் பற்றி கூறி முடித்தார். அவர்களோடு வந்த பெண், “சார் அவர் இன்னும் ஓரிரு மாசம்தான் இருக்கப் போறார். அவரை எப்படியாவது சாப்பிட்ற மாதிரி செஞ்சிட்டீங்கன்னா அதே போதும்” என்று கண்ணீரோடு கூறினாரர்.

நான் நோயாளியை அழைத்து, முகக்கவசத்தை எடுக்கச் சொன்னேன். அவர் முகக் கவசத்தை அகற்றியவுடன் நானே பேரதிர்ச்சியடைந்தேன். கருப்பு நிறத்தில் ஒரு பெரிய கட்டி வாயை முழுவதுமாக அடைத்து, வாய்க்கு வெளியேயும் துருத்திக் கொண்டு வெளியே வந்திருந்தது. என் மருத்துவ அனுபவத்தில் நான் இதுபோன்ற ஒரு பெரிய “கருப்புக் கட்டி”யைப் பார்த்ததேயில்லை. போஜனின் மருத்துவ அறிக்கைகளைப் பார்க்கத் தொடங்கினேன்.

இரத்தச் சோதனைகள், இதய மின்னலைப் பதிவு, MRI படங்கள், திசு ஆய்வுச் சோதனை ஆகியவற்றைப் ‘பார்த்தேன். “மெலக்னன்ட் மெலனோமா” (Malignant Melanoma) எனப்படும் “கருப்புக் கட்டி” என்று தெளிவாக சோதனைகள். விளக்கின. “கருப்புக் கட்டி” என்றழைக்கப்படும் இந்த வகைக் கட்டிகள் தோலில் ஏற்படும் புற்றுநோய், நமது தோலில் நிறமி செல்கள் உள்ளன. “மெலனோசைட்” (Melanocytes)  என்ற நிறமி செல்கள் அழைக்கப்படுகின்றன. இவை வாயின் உள்புறம் உள்ள சவ்வுப் படலிலும் (Mucous membrane) இருக்கின்றன.

போஜனுக்கு வந்த கட்டி வாயின் சவ்வுப் படலத்திலிருந்த நிறமி செல்களில் இருந்து தோன்றியுள்ளது. மிகவும் ஆபத்தான புற்றுநோய் வகை இந்த நோய். “மெலனின்”, நிறமியை உருவாக்கும் நிறமி செல்கள்தான் நமது தோலின் நிறத்தைக் கொடுக்கின்றன. “மெலனோமா” கட்டி இந்த நிறமி செல்களிலிருந்துதான் உற்பத்தியாகிறது. பொதுவாக சூரிய ஒளியில் நீண்ட நேரம் (Sunbath) இருப்பது, பளபளப்பான தோல், குடும்பப் பாரம்பரிய நோய் என்ற காரணிகளால்தான் வருகிறது.

மச்சங்களிலிருந்தும் தோன்றுவது ஓர் இயல்பான ஒன்று. திடீரென உடலில் நிறைய மச்சங்கள் தோன்றுவது, தோலில் எந்தக் காரணமுமின்றி, அரிப்போ, எரிச்சலோ இல்லாமல் தடிப்புகள் தோன்றுதல், அல்லது ஏற்கெனவே இருக்கும் இயல்பான தோலில் ஏற்படும் மாற்றங்கள், சிவப்பு நிறத் தோல் திடீரென்று கருமையாவது, நிறமாற்றம் (Pigmentation) போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் எளிதாக, முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய கட்டி இது. ஆனால், விரைவில் பெரிதாகி விடும். வளர்ந்துவிட்டால் சரி செய்ய முடியாது. உயிர்க்கொல்லி நோயாகிவிடும்.

போஜன் கட்டி பெரியதாக வளர்ந்த பின் மருத்துவமனைக்கு வந்ததால்தான் சிக்கலாகி விட்டது. நோயாளிக்கும், நோயாளியின் உறவினர்களுக்கும் அவர் வாழ்நாள் முடிவுக்கு வருகிறது என்று அறிந்தே வந்தார்கள். வாய் முழுவதும், இரண்டு உதடுகளுக்கும் இடைவெளி இல்லாமல் மூடிவிட்டிருந்தது. அதனால் அவர் குரல் தெளிவாக இல்லை. எந்த உணவையும், நீராகாரமோ, தண்ணீரையோ கூட குடிக்க முடியாத சிக்கலான நிலையில் இருந்தார்.

அவர் கூட வந்த பெண் அவரின் மனைவியாவார். அவர், “சார், அவரு சீக்கிரமாவே போயிடுவாரு அதுவரைக்கும் எப்படியாவது அவரை சாப்பிட வைச்சுடுங்க, அது போதும்” என்று கண்ணீர் மல்க கூறினார். நான் மற்ற உடல் சோதனைகளை ஆய்வு செய்து, அவருக்கு அறுவை மருத்துவம் செய்வது என்று முடிவெடுத்தேன். மற்ற எல்லா ஆய்வுகளும் சீராக இருந்ததால் அடுத்த நாளே அறுவை மருந்துவம் செய்வது  என்று முடிவு செய்தோம்.

வாய் முழுமையாக அடைத்துக் கிடந்ததால் மூச்சுக் குழாயை (Trachea)யைத் தோராயமாக கணக்கிட்டு, மயக்குநர், மூக்கு வழியாக மிகவும் சங்கடத்துடன் மயக்க மருந்துக் குழாயை மூச்சுக் குழாய்களுள் செருகினார். நோயாளி ஒரு வழியாக மயங்கிய பின் நான் ஏறத்தாழ இரண்டு மணிநேர முயற்சிக்குப் பின் வாயின் மேல் நாடியின் முற்பகுதியில் முன்பற்களோடு இணைந்து, ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவில் இருந்த கட்டியை ஏறத்தாழ அகற்றினேன்.

கட்டியை எடுத்த இடத்திற்கு தையல் போட்டேன். கட்டியை எடுத்தப் பகுதியின் ‘குழி’ போன்ற பகுதி தெரியாமல் தையல் போட்டேன். நோயாளியின் மற்ற உறுப்புகள் சீராக இயங்கிய நிலையில் மயக்க மருந்து குழாயை மயக்குநர் வெளியே எடுத்தார். அறுவை மருத்துவ அரங்கிலிருந்து போஜன் படுக்கைப் பகுதிக்கு மாற்றப்பட்டார். மாலை 4 மணியளவில் மயக்கம் முழுவதுமாக தெளிந்து, இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

வாய் முழுமையாக திறந்திருப்பதைப் பார்த்து மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் என்னை கையெடுத்துக்  கும்பிட்டார். கண்களில் கண்ணீர். உடன் இருந்த பெண்ணுக்கும்,  மற்றவர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அன்று இரவு பல மாதங்களுக்குப் பிறகு அவர் இட்லி சாப்பிட்டார். இரவுச் சுற்றுக்கு நான் போனபொழுது அவர் “உண்ணும் அழகை”ப் பார்த்து மனமகிழ்ச்சியோடு திரும்பினேன். ஒரு வாரத்தில் தையல்களை எடுத்து விட்டு, வீட்டிற்கு அனுப்பினேன்.

அதிசயப்படும் வகையில் மூன்று மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று கூறப்பட்ட போஜன் அதற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் உயிரோடு இருந்தார். என்னே, மருத்துவ விந்தை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *