கடந்த வாரம் மோடியின் அடிவருடி ஊடகங்கள் உலகில் 4 ஆவது பணக்கார நாடாக இந்தியா மாறிவிட்டது என்று தம்பட்டம் அடித்தனர். அது உண்மையில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் புள்ளி விவரங்களோடு எடுத்துக்கூறியும் வதந்தியை பரப்பிக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிய நிகழ்வு ஜூன் இரண்டாம் வாரம் முதல் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகத்தான் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் பயனாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறிவிட்டது என்று விளம்பரம் செய்கின்றனர்.
அதாவது திட்டமிட்ட வதந்தியை பரப்பி மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ந்துவிட்டது என்று தொலைக்காட்சியில் கூட விளம்பரம் செய்தனர்.
ஆனால் உண்மை என்ன? பெரும் தொழில் நிறுவனங்கள் நலிவடைந்ததால் வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. கூலி வேலையாவது கிடைக்காதா? என்ற மனநிலையில் நடுத்தர மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு நெஞ்சை நொறுக்கும் ஓர் எடுத்துக்காட்டு.
10.06.2025 அன்று அரியானா மாநிலத்தில் இருந்து செய்தி ஒன்று வெளியானது.
வேலை இல்லாமல், பிள்ளைகளுக்கு சாப்பிட உணவு வாங்கிக் கொடுக்கவும் வழியில்லாமல் தந்தை தனது நான்கு குழந்தைகளுடன் ரயிலில் விழுந்து தன்னுயிர் மாய்த்துவிட்டார்.
அரியானா மாநிலம் பரிதாபாத்: 10.6.2025 அன்று மதியம், குர்கானில் 36 வயதான மனோஜ் என்ற நபர், தனது நான்கு மகன்களுடன் – இளையவர் மூன்று வயது, மூத்தவர் ஒன்பது வயது – ரயில் தண்டவாளத்திற்குச் சென்று, கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதும் வரை அவர்கள் அனைவரையும் கெட்டியாக அணைத்துக்கொண்டு இருந்துள்ளார். வேகமாக வந்த ரயிலுக்கு முன்பாக குனிந்த நிலையில் இருந்ததால் அத்தனை பேரையும் ரயில் உள்ளிழுத்துக் கொண்டு ரயில் சக்கரங்களில் சிக்கி உருக்குலைந்து போனார்கள்.
அருகிலிருந்தவர்கள் குழந்தைகளையாவது விட்டுவிடு என்று கத்தியும் அவர் கேட்கவில்லையாம். “மும்பையில் இருந்து வந்த ரயில், பிற்பகல் 1.10 மணியளவில் அவர்கள் மீது மோதியது,” என்று ரயில்வே காவல் துறை பிரிவின் அதிகாரி ராஜ்பால் தெரிவித்தார்.
வீட்டிலிருந்து கிளம்பும்போது பூங்காவுக்குச் செல்வதாகக் கூறிய மனோஜ், பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி அரியானா மாநிலம் வந்த மனோஜ், தனது மனைவி பிரியாவிடம், குழந்தைகளை அருகில் உள்ள பூங்காவுக்கு விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். நான்கு குழந்தைகளையும் பூங்காவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, மனோஜ் மெஹ்தோ அவர்களை ரயில் தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு மணி நேரம் ரயில் வருவதற்காகக் காத்திருந்துள்ளார். அவர் குழந்தைகளுக்காக சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களையும் வாங்கி கொடுத்துள்ளார்.
மனோஜின் ஆதார் அட்டை மூலம் காவல் துறையினர் அவரை அடையாளம் கண்டனர். மேலும் அவரது சட்டைப் பையில் ஒரு துண்டுக் காகிதத்தில் அவரது மனைவியின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது,
இது தொடர்பாக அவரது மனைவி கூறியதாவது: “நீண்ட நாள்களாகவே வேலையில்லாமல் இருந்தார். வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. கூலிவேலையும் கிடைப்பதில் பெரும் சிரமம், நான் வேலைக்குச் செல்லாம் என்றால் பிள்ளைகளை யார் கவனிக்க முடியும் என்ற கேள்வி. பீகாரில் வேலை இல்லை என்று இங்கே வந்தோம், இங்கேயும் வேலை சரியாக கிடைக்கவில்லை. மூத்தவனை பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று நினைத்தோம். ஆனால், பள்ளிக்கான கட்டணம் அதிகம் என்பதால் பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை. திரும்ப பீகாருக்குச் சென்றால் அங்கே சென்று என்ன செய்வது என்று புலம்பிக்கொண்டு இருந்தார்.
நான் தான் பரவாயில்லை. ஏதாவது வேலை கிடைக்கும் என்று ஆறுதல் கூறியிருந்தேன். ஆனால் கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். நான்கு பிள்ளைகள் மற்றும் அவரது உடல் ஆகிய அனைத்தையும் ஒன்றாக வெள்ளைத் துணியில் கட்டி எங்களிடம் கொடுத்தார்கள், இந்தக் கொடூர மரணம் வேறு யாருக்கும் வரக்கூடாது” என்று கூறினார்.
மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே உலகப் பணக்கார வரிசையில் வந்துவிட்டனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழைகள் குடும்பத்தோடு தன்னுயிர் மாய்த்துக்கொண்டு வருகின்றனர்.
மும்பை ரயில் விபத்திலும் இதே நிலைதான். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளபோது, கிடைக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள எப்பாடு பட்டாவது வேலையிடத்திற்குச் சென்று சேரவேண்டும் என புறநகர் ரயிலில் முண்டியத்த கூட்டம் கொத்து கொத்தாக விழுந்து மரணித்துவிட்டது.
மும்பை ரயில், குர்காவ் உயிரிழப்புகள் இரண்டுமே மோடி அரசின் 11 ஆண்டுகால அவல ஆட்சிக்கு சாட்சியாக அமைந்துவிட்டன.