இதுதான் பா.ஜ.க.! எங்கு வந்து நிறுத்தி உள்ளது பாருங்கள்!
மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் ஓட்டுநர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றதும், அவரது வண்டியில் இருந்து உயர்ஜாதி நபர் இறங்கிய சம்பவம் நடந்துள்ளது.
இணையதளத்தில் கிராந்தி குமார் என்பவர் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூக ஓட்டுநரின்
காரில் பயணிக்க மறுத்த பயணி
போபாலில், மந்திர் சால் பகுதிக்குச் செல்ல ஒருவர் கார் முன்பதிவு செய்திருந்தார். கார் வந்ததும், பயணி காரில் ஏறி அமர்ந்தார். அப்போது, காரின் ஓரத்தில் அம்பேத்கரிஸ்டுகள் பயன்படுத்தும் நீல வண்ணத் துண்டு ஒன்று வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
உடனே பயணி, ஓட்டுநரிடம் அவர் பெயரை கேட்டார். ஓட்டுநர் தனது பெயரைச் சொன்னதும், பயணி அவரது குடும்ப பெயரைக் (சர்நேம்) கேட்டார். அதற்கு ஓட்டுநர் தனது குடும்பப் பெயர் (Surname) ஜட்கி என்று கூறினார். ஜட்கி என்பது மத்தியப் பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள ஒரு தாழ்த்தப்பட்டோர் பிரிவு.
இதைக் கேட்டவுடன், “நீ மாடு தின்னும் நபர், நான் உனது காரில் வரமாட்டேன்” என்று பயணி கூறியுள்ளார். அதற்கு ஓட்டுநர், “நான் இறைச்சி சாப்பிட மாட்டேன்” என்று பதிலளித்துள்ளார். இருப்பினும், அதைக் கேட்காமல் பயணி காரைவிட்டு இறங்கிவிட்டார்.
மோடி ஆட்சிக்கு வந்தது முதல் மதவாதம் குறிப்பாக வட இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது.
தலைநகர் டில்லியில் உள்ள ஆனந்த் பர்பத் என்ற பகுதியில் இருந்து ஜாமியா நகர் என்ற பகுதிக்குச் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதியவர் தன்னுடைய மகளைப் பார்க்கச் செல்கிறார். அவரது மகன் ஓலா கார் புக் செய்கிறார்.
இந்த நிலையில் காரை குறிப்பிட்ட இடத்திற்கு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தி விடுகிறார். அந்த முதியவரை கிழே இறங்கச் சொல்கிறார். அவர் நான் செல்லவேண்டிய பகுதி இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்று கூற அதற்கு அந்த ஓட்டுநர், “நீங்கள் செல்லும் பகுதி முஸ்லீம் இருக்கும் பகுதி அங்கு நான் வரமாட்டேன்” என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிடுகிறார்.
இது தொடர்பாக ஓலா நிறுவனம் மன்னிப்பு கேட்டது. மேலும் இனிமேல் இது போன்ற நடக்காது. அந்த ஓட்டுநரை நீக்கிவிட்டோம் என்றது.
இன்னொரு நிகழ்வு
2018ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள அலுவலகத்தில் இருந்து தினேஷ் ஜஸ்வால் என்பவர் தன்னுடைய அலுவலகப் பணி தொடர்பாக வெளியே செல்கிறார். நிறுவனம் அவருக்குக் கார் ஒன்றை புக் செய்துகொடுக்கிறது. காரில் ஏறிய அவர் ஓட்டுநரின் பெயரைக் கேட்கிறார். அவர் இசுலாமியர் என்று தெரிந்ததும் உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி இசுலாமியரின் காரில் ஏறமாட்டேன் என்று கூறி அந்தக் காரில் செல்ல மறுத்துவிடுகிறார்.
நிறுவனமும் வேறு காரை ஹிந்து டிரைவராக இருக்கும்படி பார்த்து புக் செய்து கொடுக்கிறது. தினேஷ் ஜஸ்வால் சமூகவலைதலத்தில் அவர் கான்பூர் அய்.அய்.டி.யில் படித்து, சிங்கப்பூரில் கொரியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பி.எச்.டி. முடித்துச் சிங்கப்பூரில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து, பிறகு லக்னோ நிறுவனத்தில் வேலை செய்கிறாராம்.
2018 மற்றொரு நிகழ்வு
மத்தியப் பிரதேசம் குனா என்ற பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அபிசேக் மிஸ்ரா, ஓலா கார் ஒன்றை புக் செய்கிறார். கார் வந்து அதன் ஓட்டுநர் முஸ்லீம் என்று தெரிந்த பிறகு அவர் காரை விட்டு இறங்கி ஹிந்து டிரைவரை அனுப்புங்கள் என்று கார் அனுப்பிய நிறுவனத்திற்கு போன் செய்து மிரட்டல் விடுக்கிறார்.
இதை அவரே பெருமையோடு சமுகவலைதளத்தில் பதிவிடுகிறார்.
உணவு விடுதியில்…
2020 கரோனா லாக்டவுன் நேரத்தில் மும்பையில் உள்ள போரிவிலி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு குடும்பத்தினர் உணவகத்தில் உணவு ஆர்டர் கொடுக்கின்றனர்.
உணவு வந்துவிடுகிறது. 17ஆவது மாடியில் இருக்கும் அவர் பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆகையால் பாதுகாப்பு அதிகம், காவலாளிக்கு விளக்கம் எல்லாம் கொடுத்துவிட்டு மேலே சென்ற உணவு டெலிவரி செய்யும் நபரின் தோற்றத்தைப் பார்த்து உன் பேர் என்ன என்று கேட்டுள்ளார்கள். அவரோ தனது பெயரைக் கூறியதும் நாங்கள் இசுலாமியர்கள் கையில் வாங்கிச் சாப்பிடமாட்டோம் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
இதை அவரது குடும்பத்தினர் பெருமையாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். கரோனா லாக்டவுன் நேரத்தில் இந்தப் பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆனால், அவர்களின் செயலுக்கு ஆதரவாகத்தான் அதிக பதிவுகள் வந்தன.
அரியானா, இமாச்சல் பிரதேசம், கருநாடகா, மகாராட்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிர்தேசம், சத்தீஷ்கர் என பாஜக முன்பு ஆண்ட, தற்போது ஆண்டுகொண்டு இருக்கும் மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம்.
தலைநகர் டில்லியில்…
தலைநகர் டில்லியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரவீந்திர சிங் நெகி தனது பகுதியில் உள்ள கடைவீதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று இந்து என்றால் காவிக்கொடியைக் கட்டுங்கள் என்று கூறி காவிக்கொடி விநியோகித்தார். இசுலாமியர்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டாம் என்று கூறியது மட்டுமல்லாமல், இசுலாமியர்களின் கைவண்டிகளில் பெயர்களை எழுதச்சொல்லியும், பச்சைக் கலர் ஸ்ப்ரே அடித்தும் மதவாதத்தைப் பரப்பினார். இதற்காகத்தான் மோடி அவருக்குச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிற்கவைத்து வெற்றி பெறவைத்து டில்லி சட்டமன்றத்திற்கு அனுப்பினாரோ என்னவோ?
எல்லா இடங்களிலும் ஜாதிப் பாகுபாடு
இத்தனை நாட்களாக இசுலாமியர் என்ற பெயரில் வெறுப்பைக் காட்டிகொண்டு இருந்தவர்கள் இப்போது தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பக்கம் திரும்பி உள்ளார்கள்.
“உயர் ஜாதி” என்று கருதப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுடன் இணைந்து பயணம் செய்ய மறுக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. இது பொதுவெளியில் வந்த செய்தி என்பதால் தெரியவந்தது.
இந்த பாகுபாடு, பொது இடங்களிலும், குறிப்பாகப் போக்குவரத்து சாதனங்களிலும் வெளிப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்திற்கு முன்புவரை. பேருந்துகளிலோ, ரயில்களிலோ, அல்லது வேறு எந்தப் போக்குவரத்துச் சாதனத்திலோ ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அருகில் அமர “உயர் ஜாதியினர்” மறுப்பது, அவர்களைத் தனிமைப்படுத்துவது, அல்லது வெளிப்படையாக இழிவாகப் பேசுவது போன்ற செயல்கள் நிகழ்ந்துள்ளனர்
ஆனால், வட இந்தியாவில், ஆட்டோ அல்லது வாடகைக் கார்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏறினால், மற்ற பயணிகள் ஏற மறுப்பது போன்ற கொடுமைகள் அண்மைக் காலம் வரை பதிவாகியுள்ளன.
ஜாதி அடிப்படையிலான இந்த பாகுபாடு, தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் சுயமரியாதையைப் பெரிதும் பாதிக்கிறது. அவர்கள் சமூகத்தில் ஒரு பகுதியினர் அல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது அச்சத்தையும், அவமானத்தையும், சில சமயங்களில் கோபத்தையும் தூண்டுகிறது. இந்த வகையான பாகுபாடு, தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கும், அடிப்படை மனித உரிமைகளைப் பெறுவதற்கும் தடையாக உள்ளது. இது சமூக நல்லிணக்கத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக அமைகிறது.
அரசமைப்புச் சட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டம், ஜாதி அடிப்படையிலான தீண்டாமைப் பாகுபாட்டைத் தடை செய்கிறது. “தீண்டாமை” ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் ஜாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 (SC/ST (Prevention of Atrocities) Act, 1989) போன்ற சட்டங்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கு நீதி வழங்கவும் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், வடநாட்டில் மோடி ஆட்சிக் காலத்தில் சமூக ஒடுக்குமுறையும், ஒதுக்கு முறையும் அதிகரித்துக்கொண்டுதான் வருகின்றன.