அறிய வேண்டிய பெரியார்

viduthalai
7 Min Read

சுயமரியாதைத் தொண்டு

சுயமரியாதை மாகாண மாநாடு முதல் முதலாக சென்ற வருடம் செங்கற்பட்டில் கூடியதும், அதை அடுத்த வருஷத்திற்கு ஈரோட்டிற்கு அழைக்கப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி நான்கைந்து வருட காலமானாலும், அது ஒரு விதமாக, அதாவது – சாதகமாகவோ அன்றிப் பாதகமாகவோ எப்படியோ ஒரு விதத்தில் பொது மக்களின் கவனத்தை இழுத்து, எங்கு பார்த்தாலும் இவ்வியக்கத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்படியான நிலைமையைப் பெற்றுவிட்டது.

மற்றும், இவ்வியக்க வேகமானது இன்றைய தினம் அரசியல் விஷயங்களிலும், மத விஷயங்களிலும், சமூக விஷயங்களிலும் புகுந்து அவைகளையெல்லாம் சற்று ஆட்டி விட்டதோடு, இதன் பேரால் பிழைத்துவந்தவர்களின் பிழைப்பில் மண் போடும்படியான நிலைமை ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவைகளுக்கு ருஜு வேண்டு மானால், நமது எதிரிகளின் வாக்குமூலங்களில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். அதாவது, சட்டசபை களில் முத்துரங்க முதலியார் போன்றவர்கள் மூலமாய் சுயமரியாதை இயக்க விஷயமாய்க் கேட்கும் கேள்விகளாலும், வெளியில் திருவாளர் சத்தியமூர்த்தி, பி. வரதராஜுலு போன்றவர்கள் தேசியத்திற்கு ஆபத்து என்னும் பேரால் பிரசவ வேதனைப்படுவதாலும், இந்து, கிறிஸ்தவ, முகமதிய முதலிய மதப் புரோகிதர்கள் இதைப்பற்றி ஆவலாதி கூறுவதாலும், சைவ சமாசக்காரரும் வைஷ்ணவ மண்டலக்காரர்களும் கூடிக்கொண்டு மூலை மூலையாய் ஒப்பாரி வைத்து அழுவதாலும், பண்டிதர்கள், சாஸ்திரிகள், தங்களுக்கு மரியாதை இல்லாமல் பரிதவிக்கின்றதாலும், பல மடாதிபதிகள் இதை எதிர்க்கப் பணம் கொடுத்துக் கூலிகளைப் பிடித்து உளறச் செய்வதாலும், சில, அதாவது  – சிருங்கேரி போன்ற பெரிய மடாதிபதிகள் நம்மையே ராஜி பேச ‘ஸ்ரீமுக’த்தின் மூலம் கூப்பிடுவதாலும் மற்றும் ஸநாதன மகாநாடுகளும் ஆஸ்திகர்கள் மகாநாடுகளும் தினமும் நடப்பதாலும், கோவில் அதிகாரிகள் தங்கள் கோவில்களுக்கு ஆபத்து என்றும், வரும்படி குறைந்து விட்டது என்றும், ‘கோவிலுக்குள் தாழ்ந்த வகுப்பார் பிரவேசித்து விடுவார்கள்’ என்று சொல்லி நாம் போகின்ற ஊர்களில் எல்லாம் போலீஸ் உதவியுடன் கதவுகளைச் சாத்திக் கொண்டு இருப்பதாலும், ஒருவாறு இதன் வேகத்தை உணரலாம். அன்றியும், இவ்வியக்கம் தமது நாடு மாத்திரமல்லாமல் வெளிநாடுகளிலும் கானலில் நெருப்புப் பிடிப்பதுபோல் படர்த்துகொண்டேயும் போகின்றது.

உதாரணமாக, நாம் இவ்வியக்க விஷயமாய் மலாய் நாட்டிற்குப் போகும்போது ‘தமிழ்நாடு’ பத்திரிக்கை செய்த விஷமம் யாவருக்கும் தெரித்திருக்கும். மலாய் நாட்டிலுள்ள இவரது கூலிகளையும் மருந்து விற்கும் ஏஜண்டுகளையும் ஏவிவிட்டு விஷமம் செய்ததும் தெரிந்திருக்கலாம். நாம் மலாய் நாடு போகின்றோம் என்று தெரிந்ததும், ‘நம்மைத் தடுத்துவிட்டார்கள்’ என்றும், ‘நாயக்கர் கோஷ்டி பகிஷ்காரம்’ என்றும், ‘நாயக்கருக்குத் தடை உத்தரவு’ என்றும் அது பலவிதமாய் எழுதி வந்தது யாவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாம் மலாய் நாடு போய் வந்த பிறகு அதே ‘ தமிழ்நாடு’ பத்திரிக்கையும் அதன் பத்திராதிபருமான திரு.வரதராஜுலுவும், அதன் கூலிகளும் பொறாமைப்படும் அளவையும், தன்னை அடியோடு ஒழிக்க முயற்சித்த ஆட்களின் காலுக்குள் புகுந்து கூலி கொடுத்துக் கூட்டி வைத்து அழும் ஒப்பாரி அழுகையும், ஆத்திரப்படும் மாதிரியும் அவர் பத்திரிக்கையில் பார்த்தாலே, குடியேற்ற நாடுகளிலும் இவ்வியக்கத்தில் மக்களுக்கு உள்ள ஆர்வம் இன்னதென விளங்கும்.

இது சமயத்தில் இதை ஏன் எழுதவேண்டி வந்ததென்றால்,
‘சில தலைவர்களும் சில தொண்டர்களும் எதிரிகளாயும் எதிரிகளின் ஆட்களாயும் இருக்கின்ற இந்தச் சமயத்தில் மகாநாடு நடத்துவது சற்று கஷ்டமாய் இருக்காதா? என்று சில நண்பர்கள் கவலைப் படுவதால் இதை எழுதவேண்டி வந்ததே தவிர வேறில்லை.

இவற்றிற்குக் காரணம் என்னவென்றால், எவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்ட காலத்தும் அவைகளை எல்லாம் லட்சியம் செய்யாமல், எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆரம்பித்த கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் பின்வாங்காமல் உறுதியாய் நின்றதோடு, மேலும் மேலும் முன்போலவே முயற்சித்ததாலுமேதான் எவ்விதக் குறைவோ, தடையோ இல்லாமல் இவ்வியக்கம் முன்னேறிக்கொண்டு போகின்றது.

நிற்க, எப்படி எல்லா இயக்கங்களையும் ஒரு கூட்டம் தங்கள் சுயநலத்துக்கும், வயிற்றுப் பிழைப்புக்கும், சோம்பேறி வாழ்வுக்கும் உபயோகப்படுத்தி வாழ்வது போலவே, இவ்வியக்கத்தையும் சிலர் தங்கள் வாழ்வுக்கும், வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகப் படுத்திக்கொண்ட முறையில் ஏதாவது சிறு சிறு தடையோ, பொது ஜனங்களுக்குச் சிறு அதிருப்தியோ உண்டாகும்படியான காரியங்கள், சில சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை. உதாரணமாக, ஈரோட்டில் நடந்த இரண்டொரு காரியங்களைச் சொல்லலாம். ஆனாலும், அவைகளைக் கண்டு நாம் பயப்படாமலும் சளைக்காமலும் அதற்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்துவிட்டு, மேல் போக வேண்டியது அறிவுடைமையே ஒழிய, அதற்காக இயக்கத்தைக் குற்றம் சொல்லிவிடக் கூடாது. இப்போதுங்கூட, வயிற்றுப் பிழைப்புக்காக சுயமரியாதை இயக்கத்தின் பேரை வைத்துக்கொண்டு திரிபவர்களில் சிலர், திருடுவதையும், நம்பிக்கைத் துரோகம் செய்வதை யும், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதையும், சிறு பிள்ளைகளை வஞ்சிப்பதையும், சமயத்திற்குத் தகுந்தபடி வேஷம்போட்டுப் பேசி மக்களை ஏமாற்றிப் பொருள் பறிப்பதையும், துர்ச்செய்கைகளையும் செய்துவிட்டுச் சுயமரியாதை என்று சொல்.லிக்கொண்டு திரிந்து வயிறு வளர்ப்பதையும் நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். இதற்காகவும் நாம் இயக்கத்தைக் குற்றம் சொல்லவோ, நிறுத்திவிடவோ முயற்சிப்பதும் மடமையாகும். வேண்டு மானால் எதிர்காலத்தில் இவ்விதமான காரியங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியதை முன்னிட்டுச் சற்று ஜாக்கிரதையாகவும், கண்டிப்பாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் மனப்பூர்த்தியாய் ஒப்புக்கொள்கின்றோம்.

இயக்கம் ஏற்பட்டு இன்றைக்கு நான்கைந்து வருஷ காலம் ஆகியிருந்தாலும், இதன் பேரால் நம்மால் வெளியிடப்படும் பத்திரிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் பொறுப்பாளியாய் இருந்து வந்ததோடு, பொது ஜனங்களிடமிருந்தோ அல்லது வேறு நண்பர்களிடமிருந்தோ, இன்றைய வரையில் ஒரு சின்ன காசாவது இவைகளுக்காக நாம் வாங்கயில்லை என்பதையும் இந்தச் சமயத்தில் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இவ் விஷயத்தில் நாம் வேண்டுமென்றே ஜாக்கிரதையாய் இருந்து வருகிறோம். ஏனெனில் பணம் கொடுத்த காரணத்தாலோ அல்லது வேறுவித உதவி செய்த காரணத்தாலோ தமது அபிப்பிராயத்தின் மீது அதிகாரம் செலுத்த ஏற்பட்டுவிட்டால், அது நமது இயக்கத்திற்குத் தொல்லை விளைவிக்கக் கூடியதாகிவிடக் கூடுமென்று பயந்தே, நமது அபிப்பிராயத்தை ஏற்றுக்கொள்பவர்கள் எல்லாம் நமக்கு வேண்டியவர்கள் என்றும், ஏற்றுக்கொள்ளாதவர்களானால் அவர்களிடத்தில் நமக்கு வேலையில்லை என்றும் மாத்திரம் முடிவு செய்து கொண்டு நடந்து வருகின்றோம்.

இந்த முறையில் இன்றைய தினம் வேண்டாதவர்களாய் இருப்பவர்கள் நாளை வேண்டியவர்களாகலாம். வேண்டியவர்களாய் இருப்பவர்கள் நாளை வேண்டாதவர்களும் ஆகலாம். ஆதலால், அப்படிப்பட்ட சமயங்களில் நாமும் மற்ற யாரும் மன வருத்தப் படாமல் இருப்பதற்கு, எவ்வித உதவியும் யாரிடமிருந்தும் பெறாமல் இருந்தால்தான். முடியும். அன்றியும், இந்தப்படி தைரியமாயும் உறுதியாயும் இருக்க வசதி இருந்தால்தான் தமது அபிப்பிராயத்தை நிலைநிறுத்தப் பாடுபட முடியுமே ஒழிய தாட்சண்யம் இருந்தால் முடியவே முடியாது.

இவ்வியக்கத்தை ஆரம்பிக்கும்போதுகூட நாம் ‘என்னையே எண்ணி இப் பெரும் பணி ஏற்றேன்’ என்று ஒரு பாட்டில் சொல்லப்படுதல்போல், நம்மையே நாம் பொறுப்பாளியாகவும் உதவியாளனாகவும் எண்ணியும் நம்பியுமேதான் இக் காரியத்தில் இறங்கினோமே ஒழிய நமக்குத் தொண்டர்கள் உண்டு, தலைவர்கள் உண்டு, சிநேகிதர்கள் உண்டு, பண உதவி செய்கிறவர்கள் உண்டு என்று நினைத்து அவர்கள் உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்து இவ் வியக்கத்தில் நாம் இறங்கவில்லை. ஆதலால், நமது கொள்கை களை உத்தேசித்து வருகின்றவர்களை வரவேற்கவேண்டியதும், போகிறவர்களைப் போகச் சொல்ல வேண்டியதும், ஒழுக்கமற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள் தள்ளப்படவேண்டியதும் இவ்வியக்கத்தின் கடமையாகிவிட்டது. இவ் விஷயத்தில் நமக்கு உள்ள உறுதிதான் இவ் வியக்கத்திற்குச் சொத்தும் அஸ்திவாரமுமேயொழிய வேறொன்றும் இல்லை.

இது சமயத்தில் இதை ஏன் எழுதவேண்டி வந்ததென்றால், ‘சில தலைவர்களும் சில தொண்டர்களும் எதிரிகளாயும் எதிரிகளின் ஆட்களாயும் இருக்கின்ற இந்தச் சமயத்தில் மகாநாடு நடத்துவது சற்று கஷ்டமாய் இருக்காதா? என்று சில நண்பர்கள் கவலைப் படுவதால் இதை எழுதவேண்டி வந்ததே தவிர வேறில்லை.

செங்கற்பட்டில் சிலர் ஏற்றுக்கொண்டபடி, மகாநாடு இவ்வருடம் மார்ச்சு அல்லது ஏப்ரலில் நடத்தவேண்டியது அவசியமானது. அதற்கு இதுவரை 3000 ரூபாய் போல் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இனியும் இரண்டாயிரம் ரூபாய் ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் கிடைத்துவிடலாம். இது ஆனதும் மகாதாட்டின் வேலை துவக்கமாகி விடும். பிறகு மேற்கொண்டு கிடைப்பதையும் வெளி வசூல்களையும் உத்தேசித்தே மகாநாட்டை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது பற்றி யோசிக்கப்படும்.ஏனெனில், சென்ற மகாநாடு 10,000 ரூபாய் வரை செலவு செய்து இரண்டு நாளில் முடித்துவிட்டதானது பலருக்கு ஏமாற்றமாயும் பொசுக்கென்றும் போயிருக்கும். ஆதலால், ஈரோட்டில் ஒரு வாரமாவது மகாநாடு நடத்தவேண்டும் என்று கருதுகின்றோம். ஏனெனில், ஒவ்வொரு தினமும் இயக்க சம்பந்தமான வேறு மாநாடுகளும் தனித்தனி உபந்நியாசங்களும் கண்காட்சிகளும் நாடகங்களுமாக நடத்திக்காட்டவேண்டும் என்று சில நண்பர் ஆசைப்படுகின்றார்கள். அதுபோலவே, சில வடநாட்டுப் பெரியார்களை இங்கு வரவழைக்கவும் உத்தேசித்திருக்கிரோம். அனேகமாய் இம்மாதக் கடைசி வாரத்தில் இங்குச் சுயமரியாதை மகாநாடு ஆபீசு ஒன்று திறக்கப்படும். திரு. இராமநாதன் அவர்கள் அதன் முக்கிய நிர்வாகஸ்தராய் இருப்பார். அது சம்பந்தமான கடிதப் போக்குவரத்துகள் அவ்வாபீசுக்கே வைத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்வதோடு, மகாநாட்டில் வேலை செய்ய இஷ்டமுள்ள கட்டுப்பாட்டில் நிலை உள்ளவர்களும், உண்மையிலும் ஒழுக்கத்திலும் லட்சியம் உள்ளவர்களுமான தொண்டர்கள் கடித மூலமாய் இப்போதே தெரிவித்துக் கொள்ளக் கோருகிறோம். அனேகமாய் மார்ச்சு முதல் வாரத்தில் தொண்டர்களுக்கு அழைப்பு வந்துவிடும். உடனே வரத் தயாராய் இருப்பவர்கள் எழுதவும்.

(குடி அரசு’-16-2-1930)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *