பாடம் 21
அடுத்து என்ன வேலை?
வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
கழகம்
ஆசிரியரின் ஆஸ்திரேலியப் பயணம் முடிவானபோது சிட்னி, பிரிஸ்பேன், கேன்பரா, மெல்பேர்ன் நகரங்களில் நிகழ்ச்சிகளை முடிப்பதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும். ஆனால் சிட்னியில் எந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தையும் பார்க்க வாய்ப்பில்லை. எனவே மெல்பேர்ன் நிழ்ச்சியை முடித்த பிறகு சிட்னிக்கு வந்து இரண்டு நாட்களாவது ஆசிரியர் ஓய்வாக இருக்கவும், சில இடங்களை சுற்றிப் பார்க்கவும் திட்டமிட்டோம். அதற்காகத்தான் 24.3.2025 அன்று மெல்பேர்னில் இருந்து சிட்னி வந்தோம்.
ஓய்வுக்கே ஓய்வு
ஆனால் 12 நாட்களாக இடையறாத நிகழ்ச்சிகள், பயணங்கள், அலைச்சல் அனைத்தும் சேர்ந்து ஆசிரியரின் உடல்நிலையை கடுமையாக பாதித்து விட்டது.. எனவே சிட்னியில் ஆசிரியருக்கு முழு ஓய்வு கொடுத்து விடலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஓய்வுக்கும் ஆசிரியருக்கும் தூரம் அதிகம் என்பதை பிறகுதான் புரிந்து கொண்டோம்.
மார்ச் 24 காலை சிட்னி சென்று அங்கு நகரின் மையத்தில் உள்ள ரிட்ஜஸ் என்ற ஓட்டலின் 23 ஆம் மாடியில் உள்ள அறைக்குச் சென்றோம்.
வாஞ்சையுடன் ஆசிரியரை அழைத்துச் செல்கிறார் குலசேகரம் சஞ்சயன்
ஓபரா அரங்கில் ஆசிரியர் உடன் அருள்மொழி
காணொளி கூட்டத்தில் பன்னாட்டு மாநாட்டிற்கு
அறிவுரை கூறுகிறார் ஆசிரியர்
சிட்னியில் சிறுகப்பல் பயணத்திற்காக துறைமுகம் நோக்கி.. உடன் செல்பவர் ரேமண்ட் செல்வராஜ்
கடற்பயணத்தில் ஆசிரியர்
கப்பலிலும் கலந்துரையாடல் .. ஆசிரியருடன்
ரேமண்ட் செல்வராஜ், குலசேகரம் சஞ்சயன்
‘விடுதலை’ ஆசிரியருடன் இலங்கை தினகரன் ஏட்டின்
மூத்த பத்திரிகையாளர் குமாரதாஸ் அவர்கள்
சற்று நேரத்தில் SBS வானொலியில் ஆசிரியரை நேர் காணல் செய்த தோழர்கள் ரேமன்ட் செல்வராஜ் அவர்களும்,குலசேகரம் சஞ்சயன் அவர்களும் ஆசிரியரைக் காண வந்தார்கள்.அவர்கள் வீட்டில் இருந்து எங்கள் அனைவருக்கும் அருமையான உணவும் கொண்டு வந்தார்கள். உணவுக்குப்பின் ஆசிரியருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு மறுநாள் ஒரு சிறு கடல் பயணம் செல்லவும், சிட்னியின் புகழ்பெற்ற ஓபரா அரங்கத்தைப் பார்க்கவும் ஏற்பாடுசெய்திருப்பதைத் தெரிவித்தார்கள்.
நேர்காணல் புதுமை
அன்று மாலை 5 மணிக்கு ஈழத்தமிழரும் பத்திரிகையாளருமான திரு. தாஸ் குமாரதாஸ் அவர்கள் ஆசிரியரை சந்தித்து இலங்கை தினகரன் பத்திரிகைக்காக ஒரு நேர்காணல் எடுத்தார். பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு கால அனுபவம் உடைய குமாரதாஸ் அவர்கள் ஆசிரியரை மூன்றாவது முறையாக இலங்கை தினகரன் இதழுக்காக பேட்டி காண்கிறார் என்பது கூடுதல் செய்தி. முதல்முறை 1978 ஆம் ஆண்டு ஆசிரியர் இலங்கைப் பயணம் சென்றபோதும், பின் 1986 ஆம் ஆண்டு திரு. குமாரதாஸ் அவர்கள் சென்னை வந்தபோதும் எடுத்த நேர்காணல்களைப் பற்றி நினைவூட்டினார். ஆசிரியரும் அதை நினைவு கூர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரது கேள்விகளுக்கு விடையளித்தார். மற்ற நேர்காணல்களில் இருந்து சற்று மாறுபட்டதாக இந்த கேள்வி பதில் அமைந்தது. திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் கோலோச்சிய திராவிட இயக்கத் த்லைவர்கள் பற்றியதாக அந்த உரையாடல் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் அவர்கள் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா, பேரறிஞர ்அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர். எம்.ஜி.ஆர் ஆகியோரைப் பற்றிய செய்திகளையும்,அவர்களோடு தனக்கு இருந்த தொடர்பு மற்றும் அனுபவங்களை ஆர்ப்பரிக்கும் அருவி போல அடுக்கடுக்கான செய்திகளை கூறி வியப்பில் ஆழ்த்தினார். 50 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மூத்த பத்திரிகையாளர் 63 ஆண்டுகளாக விடுதலை நாளேட்டின் ஆசிரியரை சந்தித்து உரையாடிய மகிழ்ச்சியுடன் அந்த நேர்காணல் நிறைவு பெற்றது.
தகைசால் தமிழர்
குமாரதாஸ் அவர்கள் விடை பெற்ற உடன், அடுத்து என்னங்க தலைவர் என்று ஆசிரியர் அவர்கள் அண்ணாமலை மகிழ்நனைப் பார்த்துக் கேட்டார். “ அய்யா மகிழ்நன் என்று சொல்லுங்கள், நீங்கள்தான் தலைவர் “ என்று அவர்பதில் கூற , இல்லை இங்கு நீங்கள்தான் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர், அதனால் அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறியது அவரது தகைமையை உணர்ததியது.? இந்த உரையாடல் இதற்கு முன்பும் பலமுறை நிகழ்ந்தது. இறுதிவரை ஆசிரியர் அவர்கள் அதனை மாற்றவே இல்லை. ‘தகைசால் தமிழர்’ என்பதன் பொருள் அதுதானோ என எண்ணினேன்.
அடுத்து என்ன வேலை ? இதுதான் ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் ஆசிரியர் கேட்கும் கேள்வி . அதனை ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தோழர்களுக்கும் கடத்தி விட்டார் ஆசிரியர். ஆம். அடுத்த நிகழ்வு சிந்தனை வட்டத்தின் பொறுப்பாளர்களுடன் ஒரு காணொளிக் கூட்டம். Zoom Meeting. பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சோம இளங்கோவன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பொறுப்பான தோழர்களைப் பாராட்டியதோடு அதே கேள்வியை முன் வைத்தார் ஆசிரியர்.
பன்னாட்டு மாநாடு
‘இவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தி ஆதரவைத் திரட்டி இருக்கிறீர்கள். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? உடனடியாக ஒரு பன்னாட்டு மாநாடு International Conference நடத்துங்கள்’ என்று அறிவுறுத்தினார். மருத்துவர் சோம இளங்கோவன் அவர்களும் அதனை வழிமொழிந்து ஆஸ்திரேலியா தோழர்களை ஊக்கப்படுத்தினார். அவ்வளவுதான் ஆசிரியரின் ஆணையை ஏற்று நவம்பர்1,2 தேதிகளில் மெல்பேர்ன் நகரில் பன்னாட்டு மாநாடு நடத்துவது என அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மாநாட்டில் பங்கேற்பதற்கான அறிவிப்பும் விடுதலையில் வெளியாகிவிட்டது.
ஓய்வு என்று திட்டமிட்ட ஒருநாள் இப்படிக் கழிந்தது.
மறுநாள் 25.3.2025 அன்று தோழர்கள் ரேமண்ட் செல்வராஜ் குலசேகரம் சஞ்சயன் இருவரும் காலையில் வந்து ஃபெரி (Ferry) என்று சொல்லப்படும் படகு ஒன்றில் கடல்பயணம் காண அழைத்துச் சென்றார்கள். குறைந்த நேரம்தான் என்றாலும் அருமையான குளுகுளு தென்றல் காற்று தெளிவான வானம் அந்தப் பயணத்தை சிறப்புடையதாக்கியது.
அங்கிருந்து அருகில் உள்ள ஓபரா அரங்கைப் பார்வையிடச் சென்றோம். ஆசிரியர் அவர்கள் அந்த அரங்கம் உருவமைக்கப்பட்ட முறையையும், கலை நயத்தையும் தொழில் நுட்பத்தையும் கவனமாகப் பார்வையிட்டார். எங்களை அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி கூறிய அரங்கின் சிறப்புத் தன்மைகளை கூர்ந்து கேட்டார். அவர் மனதில் பெரியார் உலகம் பற்றிய கற்பனை ஓடுகிறதோ என்று தோன்றியது. ஆனால் அதிகநேரம் அங்கு இருக்க முடியாதபடி ஆசிரியருக்கு சோர்வு ஏற்பட்டது. எனவே அறைக்குத் திரும்பிவிட்டோம்.
பிற்பகல் முழுவதும் ஓய்வில் இருந்தார். உண்மையில் அந்த அரைநாள்தான் அவருக்கு ஓய்வு. இராணி மகிழ்நன் அவர்கள் ஆசிரியரின் உடல்நலனிற்கு ஏற்றவாறு சத்தான உணவுகளை கொடுத்து கவனித்துக் கொண்டார். என்றாலும் ஆசிரியரின் உடல்நலம் பற்றிய கவலை ஏற்பட்டது உண்மை. ஆனால் ஆசிரியர் அவர்கள் இந்த மாத்திரை சாப்பிட்டால் சரியாகவிடும் என்று எங்களுக்கு தைரியம் கொடுத்தார்.
கபிலனின் பேருதவி
இந்தப் பயணத்தில் எங்களுக்கு பெரும் துணையாக இருந்தவர் கபிலன்.ஆசிரியருக்குஎன்ன உணவுகள் வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்று உடனிருந்து உதவியதோடு, ஆஸ்திரேலிய நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் செய்தார்.
மறுநாள் 25.3.2025 காலை ஆசிரியரும் கபிலன் அவர்களும் சிட்னியில் இருந்து புறப்பட்டார்கள். அவர்கள் சிங்கப்பூர் சென்று ஆசிரியர் அவர்களின் இளையமகள் கவிதா வீட்டிற்குச் சென்று விட்டார்கள் என்று அறிந்தபிறகு மனதில் ஒரு நிம்மதி எழுந்தது. ஆனாலும் அதற்குள் பயணம் முடிந்து விட்டதா என்று ஓர் வெறுமையும் தோன்றியது.
ஆசிரியரின் பயணம் உறுதி செய்யப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு ஏற்பாட்டையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு நாளும் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் உரையாடி நிகழ்ச்சிகள் பற்றியும் ஆசிரியரின் உடல்நிலை பற்றியும் விசாரித்து நிகழ்வுகளின் வெற்றிக்குப் பெரும் துணையாக இருந்தவர் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் .
இந்த ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து ஆஸ்திரேலியாவின் மூன்று பெரிய மாநிலங்களில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டிய ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன்,துணைத்தலைவர்,டாக்டர் ஆருன்,பொதுச்செயலாளர் சுமதி விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,உள்ளிட்ட அனைத்து தோழர்களின் கூட்டு முயற்சியின் பயனே ஆசிரியரின் ஆஸ்திரேலிய பயணத்தின் வெற்றி ஆகும். அதன் விளைவே வரும்நவம்பர் 1,2 நாட்களில் மெல்பேர்னில் பெரியார் சிந்தனையாளர்கள,மனிதநேயர்கள்,பகுத்தறிவாளர்கள் கூடும் பன்னாட்டு மாநாடு!
வாழ்வியல் பாடம்
பதினைந்து நாட்கள் ஆசிரியர் உடன் ஆஸ்திரேலியாவில் பயணம் செய்ததும் அவருக்கு உதவி செய்யும் வாய்ப்பினைப் பெற்றதும் எனக்கு மிகப் பெரிய வாழ்வியல் பாடமாகும்.அந்தப் பாடங்களை இயன்றவரை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எப்போதும் எழுது எழுது என்று என்னை ஊக்கப்படுத்தும் ஆசிரியர் அவர்களுக்கும் துணைத்தலைவர் கவிஞர் அவர்களுக்கும் என் நன்றி!
– நிறைவு பெற்றது