‘நான் முதல்வன்’ ஏற்படுத்திய இமாலய சாதனை!

viduthalai
2 Min Read

தமிழ்நாட்டிலிருந்து இந்தாண்டு ஒன்றிய அரசு பணியாளர் முதல்நிலைத் தேர்வு (UPSC) எழுதியவர்களில் 700-க்கும் அதிகமானோர் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற செய்தி மகத்தானது.

9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்நிலைத் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து இம்முறை அதிக மாணவர்கள் தேர்ச்சி என்ற சாதனை எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாண்புமிகு முதலமைச்சர்   அவர்களின் கனவுத் திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை பெற்ற 315 மாணவர்கள், இந்தாண்டு முதல் நிலைத்  தேர்வில் வென்று காட்டி இருக்கிறார்கள்.

கடந்தாண்டு,  276 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், அதைவிடப் பிரமிக்கத்தக்க அளவில் இந்தாண்டு அதைவிடக் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் வென்றிருப்பதே,  ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிக்குத் தலை சிறந்த சாட்சி!

முதல் நிலைத் தேர்வுக்குப் பிறகு, முக்கிய தேர்வுக்குத் (Main Exam) தயாராக தலா ரூ.25,000, நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது, தலா ரூ.50,000 என ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

ஒன்றிய அரசுப்பணியை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்துள்ள நம் மாணவர்கள், அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்வுகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பதில் அய்யமில்லை. அதற்காக இப்பொழுதே நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற ஒன்றிய அரசுப்பணி எனும் மாணவர்களின் கனவு நனவாக ‘நான் முதல்வன்’ என்றும் துணை நிற்கும்.

கல்வி என்பதில் நம் நாட்டைப் பொறுத்தவரை வருணாசிரம அடிப்படையில், எண்ணிக்கையில் சிறுபான்மையாக உள்ள பார்ப்பனர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

வருணாசிரம அடிப்படையில் சூத்திரன் என்று ஆக்கப்பட்ட இந்நாட்டின் 97 விழுக்காடு மக்கள் தொகைக் கொண்ட சூத்திரர்களுக்கு கல்விி மறுக்கப்பட்டு இருந்தது.

சூத்திரர்கள் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்கிற அளவுக்கு மத அடிப்படையான கட்டளையாக இருந்தது. குளித்த குதிரையும், படித்த சூத்திரனும் ஆபத்தானவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டனர்.

திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் தோற்றமும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் பிறப்பும் ஏற்பட்ட பிறகுதான் பார்ப்பனரல்லாதாரின் கல்வி உரிமைப் பற்றிய எழுச்சி ஏற்பட்டது.

வெள்ளைக்காரர்கள் கல்வியைப் பரவலாக்கிய நிலையில்தான் பார்ப்பனர்களே, அவர்களை எதிர்க்க ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை.

கல்லூரிகளில் சேர்ப்பதற்கு குழு அமைக்கப்பட்டதும்கூட நீதிக்கட்சி ஆட்சியில் பனகால் அரசர் பிரதமராக இருந்தபோதுதான். பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff selection Commission) ஏற்படுத்தப்பட்டதும் அப்பொழுதுதான்.

அதே நேரத்தில் பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரத்தில் வந்த போதெல்லாம் நம் மக்களின் கல்வியில் கை வைப்பதில்தான் குறியாக இருந்து வந்துள்ளனர்.

இரண்டு முறை ஆச்சாரியார் (ராஜாஜி) முதன்மை   அமைச்சராக வந்த போதெல்லாம் இருக்கிற பள்ளிகளை மூடுவதில்தான் மும்முரமாக இருந்து வந்துள்ளார்.

தந்தை பெரியாரின் உந்துதலால் காமராசர் ஆட்சியும், தொடர்ந்து வந்த திராவிட இயக்க ஆட்சிகளுமே நம் மக்களின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தினர்.

அதிலும் சமூக நீதிக்கான சரித்திர நாயகராம் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சியில் தற்போது கல்வியில் பெரும் பாய்ச்சல் நம் மக்களுக்குக் கிடைத்துள்ளது.

அதனுடைய விளைச்சல்தான் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் (UPSC) தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றதற்கான காரணமாகும்.

இதனை நம் இருபால் மாணவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *