சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 13 சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர் கல்வி குறித்து வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக. அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உயர் கல்வி சேர்க்கை

தமிழ்நாட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை சதவீதத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022-ஆம் ஆண்டு ‘நான் முதலமைச்சன் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை மூலம், பெற்றோர் இல்லா மாணவர்கள், மாற்றுத் திறனாளி மற்றும் ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவர்கள், உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், உயர் கல்விக்கு செல்ல இயலாத மாணவர்கள், குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது.

சேர்க்கை நடவடிக்கை

இதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக 6-வது தளத்தில் உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10 முதல் மாலை 5.45 மணிவரை செயல்படும்.

இங்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை பாலிடெக்னிக், அய்டிஅய்-யில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், உயர்கல்வி சார்ந்த உதவிகள், ஆலோசனைகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி , பாலிடெக்னிக் மற்றும் அய்டிஅய் காலிப் பணியிடங்கள் சார்ந்த விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 044 25268320 (604), 98944 68325 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *