அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமானம்– கோர விபத்து! 241 பயணிகள் உள்பட 5 மாணவர்களின் உயிரைப் பறித்த அவலம் மறைந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல் – பிரிந்தோருக்கு ஆறுதல்!

viduthalai
2 Min Read

இனி இதுபோல் நடக்காவண்ணம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தேவை!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அகமதாபாத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், எதிர்பாரா விபத்துக் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தும், இனி இதுபோன்ற விபத்துகள் நேராவண்ணம் உரிய தடுப்புக்கான, பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்வது அவசர, அவசியமாகும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்தியாவின் வரலாற்றில் மிகவும் வேதனையும், துயரமும் தந்த கருப்பு நாள் – 12.6.2025!

குஜராத் மாநில அகமதாபாத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளை ஏற்றிக்கொண்டு லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங்  விமானம் சில நிமிடங்களுக்குள், விமானக் கோளாறு காரணமாக, அதன் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு, ‘‘உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் (‘May-Day’)’’ என்று உதவி கேட்டு அழைத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அதற்குள் விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானமானது, சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து அந்த விமானம் நிலைய அருகில் மெகானி என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தின்மீது விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதனால் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில், 241 பேரும், மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்கள் 5 பேரும் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

எளிதில் மீள முடியாத
அதிர்ச்சித் தகவல் என்னே அவலம்!

மனிதநேய உணர்வாளர்களின் நெஞ்சம் எல்லாம் நெக்குருகச் செய்தது. எளிதில் மீள முடியாத அதிர்ச்சித் தகவல் இது!

இலண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்கப் புறப்பட்ட குஜராத் மேனாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் உடல் கருகி இறந்துள்ளது கொடுமையிலும் கொடுமை!

‘விபத்து’ என்பது எங்கும், எதிர்பாராமல் கண் இமைக்கும் சில நிமிடங்களில் ஏற்படக் கூடியதே என்றாலும், இப்படி ஒரு கோரம்!

‘விமானத்தின் கருப்புப் பெட்டி’ கிடைத்துள்ளது. அதிலிருந்து கூடுதல் தகவல்கள் கிடைக்கக் கூடும்!

‘ஏர் இந்தியா’ விமான சேவையின் நம்பகத்தன்மை, அண்மைக்காலத்தில் விமானப் பயணிகளிடம் வெகுவாகக் குறைந்துவரும் நிலையில், இந்த விமான விபத்து, அதனை மேலும் பல மடங்கு பெருக்கியுள்ளது.

சரியான பாதுகாப்பு
ஏற்பாடுகள் தேவை!

இதுபற்றி சரியான நீதி விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில்  இதுபோன்று நடக்காவண்ணம்  உரிய தடுப்புக்கான பாதுகாப்பு வழிமுறைகளைச் செய்வது அவசர அவசியமாகும்.

மறைந்த மனித உறவுகளுக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் உரித்தாகுக!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.6.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *