சென்னை, ஜூன் 12 பிரிட்டன் நாடாளு மன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர் கனகலட்சுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்துத் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு விவரம்: சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை கனகலட்சுமி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ளார். ஆசிரியர் கனகலட்சுமி ‘தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
கிராய்டன் தமிழ்ச் சங்கம்
தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளார். மேலும் தமிழ் பணியை தொண்டாகக் கருதி பணியாற்றி வருகிறார். இந்தப் பணியை பாராட்டி கிராய்டன் தமிழ் சங்கம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவரை கவுரவிக்கவுள்ளது.
தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார். தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியர் கனகலட்சுமிக்கு தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எளியவர்களை மறுப்பதே பா.ஜ.க. மாடல் : ராகுல்
கரோனா உயிரிழப்புகளை போலவே, மஹா கும்பமேளா உயிரிழப்புகளும் மறைக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். எளிய மக்களின் உடல்கள் புள்ளிவிவரங்களில் இருந்து காணாமல் போவதாகவும், ஒவ்வொரு பெரிய ரயில் விபத்துக்களிலும் இதுவே நடப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், எளியவர்கள் கணக்கிடப்படாமல் இருந்தால், கடமையில் இருந்தும் தப்பிக்கலாம் என்பதே பாஜக மாடல் என்றும் விமர்சித்துள்ளார்.
காலை உணவுத் திட்டத்தின்கீழ்
22 லட்சம் குழந்தைகள் பயன்
காலை உணவுத் திட்டத்தின்கீழ் 22 லட்சம் குழந்தைகள் பயன் அடைவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், பெண்களுக்காக திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிட்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1-5ஆம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் பயனடைவதாக அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு எப்போது?
அதிகாரி விளக்கம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அக்டோபரில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் பிழையின்றி அமைய வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு முன் வாக்குச்சாவடி சீரமைப்பு பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.