சென்னை, ஜூன் 12 சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதியும், சீரிய பகுத்தறி வாளரும், சமூகநீதியாளருமான ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் படத்திறப்பு – புகழ் வணக்க நிகழ்வு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11.6.2025 மாலை 6.45 மணியளவில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நன்றி பாராட்டும் உணர்ச்சிப் பூர்வ நிகழ்ச்சியாக நடைபெற்றது.
ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் படத்திறப்பு – புகழ் வணக்க நிகழ்வுக்குத் தலைமை வகித்து, அவரது படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் குறித்த அறிமுக உரையாற்றினார்.
படத்திறப்பு
இந்நிகழ்வில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் புடைசூழ மறைவுற்ற நீதிபதி ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நீதிபதி கே.என். பாட்சா (ஓய்வு), நீதிபதி பாஸ்கரன் (ஓய்வு) கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், சென்னை மருத்துவக் கல்லூரி மேனாள் தலைவர் மோகனசுந்தரம், கள்ளக்குறிச்சி மருத்துவர் சா. குமார், அருள்நெறி – அருள்மறை – அருந்ததியர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்தராஜ், அருந்ததிக் கட்சி மாநிலத் தலைவர் பி. புருசோத்தமன் ஆகியோர் ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களுக்குரிய பல்வேறு சிறப்புகளைக் குறிப்பிட்டு புகழ் வணக்க நினைவேந்தல் உரையாற்றினர்.
ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு, மருமகன் – சிறுநீரகத் துறை மருத்துவர் அருணகிரி, பெயரன் ஈஸ்வர் ஆகியோர் நீதிபதி அவர்களுடனான தம் நினைவுகளைப் பகிர்ந்து உரையாற்றினர்.
காணொலி திரையிடப்பட்டது
ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய காணொலிப் பதிவுகள் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு நிதி
ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படுவதற்கு ரூபாய் ஒரு இலட்சம் என நன்கொடையை மருமகன் – சிறுநீரகத் துறை மருத்துவர் அருணகிரி – மகள் மருத்துவர் அருமைக்கண்ணு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
தமிழர் தலைவர் உரை
நிறைவாக, தம்மோடு இளமைக் காலம் முதல் இறுதி நாள் வரை நட்பு பூண்ட அரிய சாதனையாளர், நேர்மை தவறாத நீதிபதி, கருணை உணர்வு மிக்க, கண்டிப்பான மனிதநேயர், தமது இறுதி நிகழ்வில் எவ்வித சடங்குகளுக்கும் இடந் தரக் கூடாது – தவிர்க்க வேண்டுமென அறுதியிட்டு தமது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியும், தாம் இறந்த பிறகு தமது வாழ்விணையர் திருமதி அனுசுயா அம்மையாரின் உருவத்தில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது எனத் தெளிவாக உரைத்தும் சென்ற சீரிய பகுத்தறிவுக் கொள்கையாளர் – நீதிபதி ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மாண்புகளைப் பகிர்ந்து தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் புகழ் வணக்க நினைவேந்தல் உரையாற்றினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வுக்கு இணைப்புரை வழங்கினார்.
பங்கேற்றோர்
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, மோகனா வீரமணி, பொதுக் குழு உறுப்பினர் சி. வெற்றிச்செல்வி, மருத்துவர் ச.மீனாம்பாள், மாநில ப.க. தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு. அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, பொறியாளர் த.கு. திவாகரன், ஆடிட்டர் இராமச்சந்திரன், நெய்வேலி வெ. ஞானசேகரன், வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், ஜெ. துரை, பொறியாளர் கரிகாலன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மருதூர் இராமலிங்கம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலை இயக்குநர் பசும்பொன், பொதுக் குழு உறுப்பினர்கள் தங்க. தனலட்சுமி, கோ.வீ. இராகவன், மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், மு.இரா. மாணிக்கம், கொடுங்கையூர் கழக தலைவர் கோ. தங்கமணி, இளவழகன் (ம.தி.மு.க..)
க. கலைமணி, க.ச. பெரியார் மாணிக்கன், பூவை செல்வி, ச. மாரியப்பன் மற்றும் மேனாள் நீதியரசர்கள், வழக்குரைஞர்கள், கழகத் தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிறைவாக ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் அருள்மூர்த்தி நன்றி உரையாற்றிட நிகழ்ச்சி நிறைவடைந்தது.