பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் அனைத்து கடல்களை விட 3 மடங்கு பெரிதான கடல் மறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நாம் வாழும் பூமிக்கு அங்கிருந்து தான் தண்ணீர் கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
நிலத்தடி நீர் ஆராய்ச்சி
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள எவன்ஸ்டன் நகரில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பூமிக்கடியில் மிகப்பெரிய கடல் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கடல் தற்போது பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் ஒன்றிணைத்தால் இருக்கும் அளவை விட மிகப்பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
700 கி.மீ. ஆழத்தில்…
அதாவது பூமியின் நிலத்தடி நீர் ஆதாரம் குறித்து பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் தான் பூமியில் உள்ள கடலை விட பூமிக்கடியில் பெரிய நீர்ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கடியில் 700 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அது பூமியில் உள்ள அனைத்து கடல்களையும் விட மூன்று மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சிறிய கோள்கள் என அழைக்கப்படும் வால் நட்சத்திரங்கள் பூமியில் மோதியதன் காரணமாக தண்ணீர் பூமியில் உருவானதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய இந்த கண்டுபிடிப்பு என்பது பூமியின் ஆழத்தில் இருந்து பூமியில் தண்ணீர் தோன்றி இருக்கலாம் என யூகிக்க வைக்கிறது.