நாகர்கோவில், ஜூன் 12- குமரி மாவட்டம் குருந்தன்கோடு காடேற்றி பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 55). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூத்த மகன் இசக்கி முத்துகுமார் (33), வெல்டிங் தொழிலாளி. திருமணமாகாத அவர் கடந்த சில மாதங்களாகவே வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (10.6.2025) காலையில் வீட்டில் இசக்கி முத்துகுமார் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து வந்த இரணியல் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கடிதம்
இதைத் தொடர்ந்து வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கி முத்துகுமார் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், “தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும், ஆகவே அதனுடன் செல்கிறேன்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்துகுமார் மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.