சென்னை, ஜூன் 12- காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்களும் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங் களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் விரைவில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.