சென்னை, ஜூன் 12- விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (11.6.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகளை வழங்கி, 33,312 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 3 லட்சத்து 76,443 பேருக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்வை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு
தொடர்ந்து, சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘மதி இலச்சினையை‘ வெளியிட்டு, சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட செக்கு கடலை எண்ணெயை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக, அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மகளிர் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கிவைத்தார். பின்னர், மகளிர் சுயஉதவிக் குழுவினர் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய மணிமேகலை விருதுகளை வழங்கினார்.
மணிமேகலை விருதுகள்
ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் மணிமேகலை விருதுகள் வழங்கப்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும், மணிமேகலை விருதுகளை மீண்டும் வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மீண்டும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு மணிமேகலை விருதுகள் வழங்கப்படுகின்றன.
மகளிர் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. எந்த மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், சிறப்பாகச் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுவினரை சந்தித்து, அவர்களது குறைகளைக் கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
6 மணி நேரத்தில் பட்டா…
அதன்படி, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லும்போது, 6 மணி நேரத்தில் பட்டா, 4 மணி நேரத்தில் வீடு என முடிந்த அளவு விரைவாக, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றுகிறார்.
அடையாள அட்டை
மேலும், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை கட்டணமின்றி பேருந்துகளில் எடுத்துச் செல்லும் வகையில் விரைவில் அடையாள அட்டை வழங்கப்படவிருக்கிறது. 2011-2021 காலகட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் பெற்றுத் தர இலக்கு நிர்ணயித்துள்ளார். இதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1.05 லட்சம் கோடி கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே 9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு பெண்களின் பங்களிப்பும் முக்கியக் காரணமாகும். தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகளிர் நலன் காக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுவினர் தூதுவர்களாக இருந்து, திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுக ஆட்சி பல ஆண்டுகள் தொடர ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். விடுபட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த முறை எப்படி சரியான முறையில் செயல் படுத்தப்பட்டதோ, அதேபோல தற்போதும் முறையாக தேதி அறிவித்து, மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்” என்றார்.