என்.வி.நடராசன் பிறந்தநாள் (12.06.2025)
திராவிடர் இயக்க தியாகச் செம்மல் என்.வி. நடராசன் சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஞாயிறு என்ற ஊரில் விஜயரங்கம்- தனலட்சுமி இணையரின் 2ஆவது மகனாகப் பிறந்தவர் என்.வி.நடராசன். ‘குடிஅரசு ஏட்டின் ஈர்ப்பால் தமிழ் உணர்வும், தன்மான உணர்வும் என்.வி.என். அவர் களைத் தொற்றிக் கொண்டது.
இதன் காரணமாக தமிழர்களே, ஹிந்திக்கு அடிமையாக மாட்டோம் என்று பகிரங்கமாகப் பேசினார். ஹிந்தி எதிர்ப்பு அறப்போரில் கலந்து கொண்டு தான் மட்டுமல்ல, தனது துணை வியார் புவனேஸ்வரி அம்மையாரையும், கைக் குழந்தை என்.வி.என். சோமு அவர்களையும் ஈடுபடச் செய்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்த இலட்சிய வீரர்
சென்னை மாவட்ட தி.க. செயற்குழு உறுப்பினர், பெரியாரின் அலுவலகச் செயலாளர் முதலான பொறுப்புகளில் சிறப்பாக ஈடுபட்டதுடன், 9 ஆண்டுகாலம் அய்யா பெரியாரின் தனிச் செயலாளராக கடமையாற்றினார். 1969ஆம் ஆண்டில், கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு, பிற்படுத்தப் பட்டோர் நலனுக்காக தனித்துறையையே உருவாக்கி அதன் முதலாவது அமைச்சராக என்.வி.நடராசன் அவர்களை நியமித்தது.
இந்தச் சூழலில் தந்தை பெரியார் அவர்களிடம் வாழ்த்துகளைப் பெற என்.வி. என். அவர்கள் சென்றார். அய்யா அவர்கள் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.அங்குதான் அமைச்சர் என்.வி.என். சென்றார். தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அருகில் இருந்த மருத்துவர்களிடம் 9 ஆண்டுகாலம் என்னுடைய தனிச் செயலாளராக அக்கறையுடன் நேர்மையுடன் பணியாற்றிய பெருமை மிக்கவர் இவர் என்று மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து வைத்தார். அருகில் இருந்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள், “The Honourable Minister was my secretary for 9 years, very sincere secretary” என ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார். தந்தை பெரியார் அவர்கள் அப்போது மேலும், “honest secretary” என்ற சொற்களையும் இணைத்துச் சொல்லி, என்.வி.என். அவர் களின் நேர்மைத் திறத்தை புகழ்ந்துரைத்தார்கள்.
என்.வி.என். அவர்களுக்கு நாராயணி, சோமு, செல்வம், மணிமேகலை, ஆசைத்தம்பி, பாண்டியன், சாக்ரடீஸ் என ஏழு பிள்ளைகள். இவர்களோடு எட்டாவதாக அவர் நடத்திய ‘திராவிடன்’ என்ற வார இதழையும் குழந்தையாகவே நினைத்து பொறுப்புடன் நடத்தினார். 1947ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் திராவிடன் இதழை எதிர் நீச்சலடித்து நடத்தி வந்தார். “எதையும் தாங்கும் இதயம் கொள்வோம்; எழில் சார் திராவிடம் பெற்றிட உழைப்போம்” என்ற வைர வரிகளுக்குக் கீழே, திராவி டன் இதழின் தலையங்கம் தனித் தன்மையுடன் திகழ்ந்தது.