திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் பெரியார் உலகத்தின் கட்டுமானப் பணிகள் தொய்வ டையக் கூடாது என்பதால், கடந்த 30.5.2025 அன்று நான், நமது பெரியார் பற்றாளர்களாகவும், பகுத்தறிவாளர்களாகவும் உள்ள பெருமக்களிடம், பெரியார் தொண்டறத்தின் பெருமை – சிறப்பை, காலத்தைத் தாண்டி, இனிவரும் தலைமுறையினரின் நினைவில் நீங்காது நிற்கச் செய்யவேண்டும் என்பதற்காக, அப்பணிக்கான அறக்கொடையை அவசரமாக வழங்கிடவேண்டுமென்று விடுத்த கனிவான வேண்டுகோளை ஏற்றும், நம் பணியை ஊக்கப்படுத்தி, உற்சாகம் குறையாமல் முடிக்க விருப்பதற்காவும், நமது கொள்கைக் குடும்ப உறவுகள் உடனடியாக வாரி, வாரி வழங்க வழங்க முன்வந்துள்ளனர் – எப்படி நன்றி செலுத்துவது என்றே தெரியவில்லை, திகைக்கிறோம்!
‘‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே போல’’,
எனது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!
‘‘எனது தாத்தா, பாட்டியின் பங்களிப்பும் இந்த மகத்தான பெரியார் உலகத்தில் ஒரு சிறு துளியாக இருக்கிறது’’ என்ற வரலாற்று வைர வரிகளை எழுதிடவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள நன்கொடை தரும் குடும்பங்களுக்கு எனது கடமை உணர்வுடன் தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!
‘‘பெற்றது கைமண் அளவு –
பெறவேண்டியது உலகளவு’’
கோ.அரங்கசாமி – ராஜம் குடும்பத்தின் சார்பில், மருத்துவர் மீனாம்பாள் சந்திரகுமார் ரூ.2 லட்சம், வேல்விழி இராமச்சந்திரன் ரூ.2 லட்சம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர் (சென்னை, 12.6.2025).
என்ற புதுமொழிப்படி, அறிவித்தவர்கள் இதுவரையில் 23 லட்சங்களை இந்த ஒரு வாரத்தில் அனுப்பி, ஊக்கச் செயலிகள்போல் கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். (சில கடிதங்கள் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் வெளிவந்துள்ளன).
ஆகஸ்ட் முதல் தேதிக்குள் எனது சிறிய நிதி திரட்டல் ‘கோட்டாவை’ நிறைவு செய்ய 2 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு 200 பேர் கூடவா கிடைக்கமாட்டார்கள் என்று நாம் வைத்த நம்பிக்கை, நன்னம்பிக்கையாகி வருகிறது!
நன்கொடையைத் திரட்டுவீர்
கொள்கை உறவுகளே!
விரைந்து செயலாற்றி ‘தருக்களாகி’ தருவோரைத் தேடித் தேடிக் கண்டு நன்கொடையைத் திரட்டுவீர் கொள்கை உறவுகளே!
‘‘நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது!
வேறு எவராலும் முடியாதது, நம்மால் மட்டுமே முடியும்!’’
என்றும், உங்கள் தொண்டன்,
தோழன்,
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.6.2025