உத்தரப்பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் காப்பீடுப் பணத்தைப் பெறுவதற்காக காப்பீடு பெற்றவர்களைக் கொலை செய்து காப்பீடுத் தொகையை அபகரிக்கும் அதிர்ச்சியூட்டும் மோசடி ஒன்று சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
காப்பீடு தொகையைப் பெறுவதற்காக நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை பல ஆயுள் காப்பீடுத் திட்டங்களை எடுக்கச் செய்துள்ளனர். இவர்களே சொற்ப தொகையும் கொடுத்துள்ளனர். மேலும் மோசடிக்காரர்களே நாமினியாக தங்கள் பெயரைச் சேர்த்துள்ளனர்.
பின்னர், திட்டமிட்டபடி அவர்களைக் கொன்று, விபத்து போல சித்தரித்து, காப்பீடுப் பணத்தை முழுமையாக விழுங்கி விடுகிறார்கள். இதற்காக காவல்துறையும் இவர்களின் மோசடிக்குத் துணை போயுள்ளது தெரியவந்துள்ளது
இந்த வழக்கில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பல் மாவட்டம் ராஜ்புரா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அமன் மற்றும் சலீம் ஆகியோர் ஒரே மாதிரி விபத்தில் இறந்துள்ளனர்
இவர்கள் இருவரும் பல காப்பீடுப் பாலிசிகளை எடுத்த பின்னரே விபத்து ஏற்பட்டுள்ளது.
அமனின் பாலிசிகளில் இருந்து ரூ.78 லட்சம் வரையும், சலீமின் பாலிசிகளில் இருந்து ரூ. 2.7 கோடி வரையும் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது.
முதலில், அமனின் மரணத்தை விபத்து என கூறிக் காவல்துறை வழக்கை முடித்து வைத்துள்ளது. பின்னர், காப்பீடு நாமினிதாரர் கணக்கில் அத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
சலீமின் மரணம், ரூ. 2.7 கோடி காப்பீடுப் பணத் திற்காக அரங்கேற்றப்பட்டுள்ளது. சலீம் ஒரு நாடக ஊழியர். பாபு என்ற ஒருவரின் அறிமுகத்தின் மூலம் இந்தக் கும்பலிடம் சிக்கியுள்ளார். பாபு, சலீமின் தனிப் பட்ட விவரங்களை இந்தக் கும்பலுக்கு அளித்துள்ளார்.
சலீம் 2022 ஜூலை 29 அன்று திட்டமிட்ட சாலை விபத்தில் இறந்துள்ளார். இதனையும் விபத்து – மரணம் என்று காவல்துறை அறிக்கை கொடுத்தது. இதே போல் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டு அது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
ஒரே நேரத்தில் ஒரே மாதிரி விபத்து மரணம் குறித்தும், இது போன்ற பல வழக்குகளில் நூறு கோடிக்கு மேல் காப்பீடாக தொடர்பில்லாத சிலரின் கணக்குகளில் வரவு வைத்திருப்பது குறித்தும் சந்தேகம் அடைந்த அமலாக்கத்துறை – இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை செய்த போது, இந்த மோசடி வெளியில் தெரியவந்தது. இது தொடர்பாக வேட்பிரகாஷ், கமல் சிங், சுனில் குமார், ஓம்பிரகாஷ், பிரேம்சங்கர், நிர்தேஷ், மற்றும் உதய்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்
இவர்கள் இது போன்ற பல கொலைகள் செய்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரிவந்துள்ளது 12 மாநிலங்களில் இந்த மோசடிகும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டி யுள்ளனர்.
இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டு, உள்ளூர் காவல்துறையினரிடம் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை நகல்களை வழங்குமாறு கேட்டுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஜனவரி முதல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 52 பேர் கைது செய்யப் பட்டுள்ள தாகவும் ஏஎஸ்பி (தெற்கு) அனுக்ரிதி சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுமார் 50 குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளதாகவும்,
7 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரி வித்துள்ளனர்.
இவர்கள் நோய்களால் மரணமடைந்தவர்களின் பெயர்களிலும் காப்பீடுகளை எடுத்து, பின்னர் ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றுள்ளனர்.
இது என்ன கொடுமை! இப்படிக்கூட சிந்திக்க முடியுமா? ம(னு)தவாதிகள் மூளை மண்டலம் முழுவதும் கிரிமினல் கிருமிகள் ஆக்ரமித்துள்ளனவா?
பணத்தாசை காட்டி, காப்பீடு செய்யச் சொல்லி, அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்களைப் படுகொலை செய்து, நாமினிகளாக தங்களை நியமித்துக் கொண்டு காப்பீடுத் தொகையை முழுச் சுளையாக விழுங்குவது என்பதெல்லாம் எண்ணிப் பார்க்கவே முடியாத கொடூரம் ஆகும்.
பிஜேபி ஆளும் ஒரு மாநிலத்தின் யோக்கியதை இந்த அளவில்தான் இருக்கிறது – எச்சரிக்கை! எச்சரிக்கை!!