சென்னை, ஜூன் 11- மாற்றுத்திறனாளிகளுக்கான, முன்னணி தொழில்நுட்ப உதவி உபகரணம் அறிமுக கண்காட்சி, ‘டெக் பார் ஆல் – 2025’ என்ற தலைப்பில், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
இம்மாதம் 12, 13 ஆகிய இரண்டு நாள் நடக்கும் கண்காட்சியில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்குமான புதிய வகை தொழில்நுட்ப உதவி உபகரணங்கள், அவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை குறைத்து, அவர்களின் செயல் திறனை மேம்படுத்தும் வகையில், இந்த கண்காட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
செயற்கை நுண்ணறிவு வாயிலாக
மாற்றுத்திறனாளிகள், கணினியை பயன்படுத்துவதை எளிதாக்கும் மென்பொருட்கள், பார்வை திறன் குறைபாடு உடையோருக்கான பிரத்யேக சாதனங்கள், உடல் ரீதியாக இயங்க முடியாதவர்களுக்கு இயங்குதல் உதவி சாதனங்கள், செயற்கை நுண்ணறிவு வாயிலாக, தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப உதவி வழங்கும் கருவி உள்ளிட்டவை இடம் பெற உள்ளன. மேலும், கண்காட்சியில் இடம் பெறும் ‘ஸ்டார் அப்’ நிறுவனங்களின் உதவியுடன், மாற்றுத்திறனாளிகளின் கருத்துகளுக்கு ஏற்ப, நவீன கருவிகள் வடிவமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இலவசமாக, அனைவரும் பங்கேற்கலாம்.