அரசு தொண்டு நிறுவன இல்லங்களில் பெண் காவலர்கள் பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 11- தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இனி அரசு மற்றும் தொண்டு நிறுவன இல்லங்களில் பாதுகாப்புப் பணியில், பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

பதிவு செய்ய வேண்டாம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சமூக நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு நேற்று முன்தினம் (9.6.2025) பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

தாம்பரத்தில் சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு சேவை இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அந்த சிறுமியை நான் பார்த்துவிட்டு வந்தேன். அவருடைய தாயாரையும் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர், யூடியூப்பில் ஊர், பெயர் வந்து விட்டது என்று வேதனையுடன் சொன்னார். எனவே தயவு செய்து பாதிக்கப்பட்ட  சிறுமியின் பெயர், ஊர், மாவட்டத்தை பதிவு செய்ய வேண்டாம்.

இது சட்டப்படி குற்றம் ஆகும். சம்பவம் நடைபெற்ற சேவை இல்லத்தில் 8 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அங்குள்ள காவலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேவை இல்லத்தில்
பெண் காவலர்கள்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் உத்தரவு ஆகும். எனவே இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு சேவை இல்லத்தில் 3 பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். எனவே தகுதியாக இருக்கும் பெண் காவலர்கள் உடனடியாக அங்கு பணியில் அமர்த்தப்பட இருக்கின்றனர். இந்த விடுதி அமைந்துள்ள வளாகத்தில் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி, ஒருங்கிணைந்த சேவை மய்யம் இருக்கிறது.

ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட அலுவலகமும் உள்ளது. எனவே இந்த விடுதி மிகவும் பாதுகாப்பான இடம் ஆகும். ஆனால் இந்த நிகழ்வு அங்கு பாதுகாப்பில் இருந்த அரசு ஊழியரால் நடைபெற்றிருப்பது மிகவும் மோசமானதாகும்.

எனவே அரசு பெண்கள், குழந்தைகள் இல்லங்களிலும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிப்பது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சமூக நலத்துறை முடிவு எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *