சென்னை, ஜூன் 10- ‘டான்செட்’ நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் நடப்புக் கல்வி ஆண்டில் எம்பிஏ, எம்சிஏ படிப்பில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளிலும், தனியார் சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து சரண் செய்யப்படும் எம்பிஏ, எம்சிஏ இடங்களிலும் நடப்பு 2025-2026ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை பணிகளை கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) மேற்கொள்கிறது. ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30ஆம் தேதி. விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்படும்.
எம்பிஏ, எம்சிஏ ஆகிய 2 படிப்புகளுக்கும் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 21ஆம் தேதி கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறும். அதை தொடர்ந்து, எம்சிஏ படிப்புக்கான பொது கலந்தாய்வு ஜூலை 24 முதல் 26ஆம் தேதி வரையும், எம்பிஏ கலந்தாய்வு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையும் இணைய வழியில் நடைபெறும். அதன்பிறகு, எம்சிஏ படிப்புக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதியும், எம்பிஏ படிப்புக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதியும் துணை கலந்தாய்வு நடத்தப்படும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை https://www.tn-mbamca.com என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9790279020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.