சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15ஆம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஜூன் 10) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை கனமழை
நாளை (ஜூன் 11) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12ஆம் தேதி கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
13 முதல் 15ஆம் தேதி வரை கோவை மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையில்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 82 டிகிரி முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
சூறாவளி
தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, ஜூன் 10- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலங்கள் வைத்துள்ள நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
காலிமனை வைத்துள்ள உரிமையாளர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.அபராதம் விதித்தும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பைகள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.
நிலத்தில் திடக்கழிவு அல்லது கட்டடக் கழிவுகள் தேங்கியிருப்பதை தவிர்க்க வேண்டும்.