‘‘தி.மு.க. அரசானது முருக பக்தர்களுக்கு. எதிரான அரசாக உள்ளது. இங்கு அசுரர்கள் ஆட்சி நடக்கிறது’’ என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.
‘‘தி.மு.க. அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனைக் கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக இந்த மாநாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர். தமிழ்க் கடவுள் முருகன் மாநாட்டினை இங்கு நடத்துவதுதான் சரியானது” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாளர் எல். முருகன் தன்னை அறியாமலேயே ஓர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட் சியை அசுரர் ஆட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதிகாசங்களிலும், புராணங்களிலும் சுரர் – அவர்களுக்கு எதிரான அசுரர் என்பவர்கள் யார் என்பதை அமைச்சர் எல். முருகன் அறிவாரா?
அறிவார்ந்த வரலாற்று ஆசிரியர்களின் நூல்களை தப்பித் தவறிப் படித்திருந்தால்கூட சுரருக்கும், அசுரருக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று தெரிந்திருக்கும்!
கால் சட்டைப் போட்ட கருப்புச் சட்டைக் காரர் வீட்டு பொடியனைக் கேட்டிருந்தாலும் பொட்டில் அடித்தது போல் பதில் சொல்லி இருப்பான்.
என்ன செய்வது! ‘பஜனை செய்வோம் கண்ணன் நாமம்!’ என்று ஜால்ரா அடித்துக் கொண்டு பஜனைக் கோஷ்டியுடன் செல்பவர் களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்கும் என்று நம்புவதுகூட முட்டாள்தனமே!
எல். முருகனுக்கு மட்டுமல்ல; பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். என்ற மதக் கூட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பேர் வழிகளும் தெரிந்து கொள்ள ஒரு சில எடுத்துக்காட்டுகள் இதோ!
சுரர் என்றால் சுராபானம் குடிக்கும் ஆரியப் பார்ப்பனர்கள் – அசுரர்கள் என்றால் சுராபானத்தைக் குடிக்க மறுத்த திராவிடர்கள் என்று பொருள் என்பது அந்தச் சொற்களிலேயே அடைந்திருக்கும் பொருளாகும்.
‘தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது’ (ரோமேஷ் சந்திர தத்தர் C.I.E.I.C.S. எழுதிய புராண இந்தியா, பக்கம் 52).
‘‘பாரத, இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும், வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டு இருப்பதெல்லாம் தென்னிந்தியாவை – திராவிட நாட்டைப் பற்றியதாகும்’’ (ஜி.எச். ராபின்சன் CIE எழுதிய ‘இந்தியா’ என்னும் நூல் பக்கம் 155).
‘‘இராமாயணத்தில் குடிகாரர்களைச் சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டி ருக்கிறது.’’
(ெஹன்றி ஸ்மித் வில்லியம் எழுதிய ‘‘சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்’’ தொகுதி 2 பக்கம் 521).
போதுமா? இன்னும் ஆதாரங்கள் தேவையா? திராவிட இயக்கத்தவர்கள் அசுரர்கள் தான் – குடியை மறுத்த இனத்தின் வழி வழி வந்தவர்கள் தான்!
தி.மு.க.வைக் குற்றம் சுமத்தப் போய் தன் முகத்தில் கரியைத் தடவிக் கொள்ளலாமா ஒன்றிய இணை அமைச்சர்?