ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம்
சில பாடங்கள் (18)
வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
கழகம்
பாடம் 18
பொதுத் தொண்டு வயதைக் குறைக்கும்!
22.3.2025 அன்று மெல்பர்ன் நிகழ்ச்சியில் ஒவ்வொருவருடைய உரையும் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய செய்தியை அளிப்பதாக அமைந்திருந்தது. அதனால் இறுதிவரை நிகழ்ச்சி விறுவிறுப்பு குறையாமல் நடந்தது.
பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தினு டைய தலைவர் டாக்டர் அண்ணாமலை மகிழ்நன் தனது தலைமை உரையில் மெல்பர்ன் விழா குறித்து மாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துக் கவிதையை படித்து தன் உரையைத் தொடங்கினார். தன் தந்தையார் புலவர் அண்ணாமலை அவர்களை நினைவுகூர்ந்து, தனது திருமணத்தை ஆசிரியர் அவர்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகுகாலத்தில் நடத்தி வைத்தார் என்பதையும், ஆஸ்திரேலியாவில் இந்து ஸநாதனிகள் இராமலீலா கொண்டாட்டத்தின் பேரால் இராவணன் உருவத்தை எரிப்பதாக அறிவித்தபோது அதற்கெதிராகத் தொடங்கிய இணையவழிப் பிரச்சாரத்தில் இணைந்து, தான் செயல்படத் தொடங்கியதையும், தமிழர்களின் முயற்சியால் அந்த நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப் பட்டதையும் தந்தை பெரியாரின் சிந்தனை களில் ஆர்வமுள்ளவர்களின் முயற்சியால் தோழர் வசந்தனுடைய முன்னெடுப்பில் உருவான வாட்சப் குழு இன்று இவ்வளவு பெரிய நிகழ்வை நடத்துவதற்குக் காரணமாக அமைந்தது என்று கூறினார்.
மெல்பர்ன் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினருடன் ஆசிரியர். நிற்பவர்கள் இடமிருந்து தாயுமானவன் பாஸ்கரன், இளையமதி, சரவணன் இளங்கோவன், ராதிகா, அரங்க மூர்த்தி, திருமலை நம்பி, சுரேஷ், வசந்தன், சுப்ரமணியம். அமர்ந்திருப்பவர்கள்: எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், ஆசிரியர், அருள்மொழி, அண்ணாமலை மகிழ்நன்
மேலும் இந்த சிந்தனை வட்டத்தின் துணைத் தலைவரான மருத்துவர் ஆருண் அவர்களின் இடைவிடாத முயற்சியால் ஆஸ்திரேலியா கூட்டாட்சி அரசுடனும் மாநிலங்களில் உள்ள ஆட்சியாளர்களுடனும், அரசுத்துறை அதிகாரி களுடனும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தும் வலிமையை பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம் பெற்றிருப்பது குறித்தும், அவர்களது இடைவிடாத அழுத்தத்தினால் “ஜாதிப்பாகுபாடு” பின்பற்றுவதை நிறவெறிக்கு இணையான பிரிவினைச் செயலாக ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் முதல்முறையாக அறிவித்திருப்பதையும், அதேபோல், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிறப்பு மதக் கல்வி என்கிற பெயரில் அரசுப் பள்ளிகளில் ஸநாதன கல்வி பயிற்றுவிப்பதை எதிர்த்து பெரியார்-அம்பேத்கார் சிந்தனை வட்டம் ஏற்றுக்கொண்டுள்ள செயல்பாடுகளையும் விளக்கிக் கூறினார்.
அடுத்து உரையாற்ற வந்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய சிறப்புச் செய்திகளைக் எடுத்துக்கூறி அவரை அறிமுகப் படுத்தினார் தோழர் சரவணன் இளங்கோவன்.
ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தில் ஆசிரியர் உரையாற்றுகிறார்
எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் செயல்படுவதற்கான அவசியத்தையும் அதற்கான தேவைகளையும் எடுத்துரைத்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் மக்கள் நிறைவான வாழ்க்கையை நோக்கி முன்னேறுகிறார்கள். தந்தை பெரியாரின் கருத்தியல் அங்குள்ள மக்களின் வாழ்வோடு பொருந்திப் போவதாக அமைந்துள்ளது என்று கூறி அதற்கு எடுத்துக்காட்டாக பத்தாண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் மத நம்பிக்கை அற்ற மக்களின் எண்ணிக்கை 30விழுக்காடு இப்போது மதநம்பிக்கை அற்றவர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு என்று எடுத்துக் காட்டி தன் உரையை நிறைவு செய்தார்.
ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன்
அடுத்து பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் பொருளாளர் திருமலை நம்பி அவர்கள் என்னைப் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கூறி என்னை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நான் உரையாற்றினேன். ஆஸ்திரேலிய மக்களும், அரசுகளும், பழங்குடி மக்களுக்கு எதிராகப் பின்பற்றி வந்த அரசியல் கொள்கைகளால் பெருந்துன்பத்திற்கு ஆளான பழங்குடி மக்களிடம் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் அவர்கள் மன்னிப்பு கேட்ட நிகழ்வையும் நம் நாட்டில் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் அனைத்து மக்களுக்கும் உரிமை பெற்றுத் தந்த வரலாற்றையும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நடைபெறும் இக்கால கட்டத்தில் மீண்டும் ஜாதி வேறுபாடுகள் தலை தூக்குவதையும் ஆணவக்கொலைகள் நடப்பதும் அதற்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்யும் ஜாதி மதவாதப் போக்கு திட்டமிட்டு வளர்க்கப் படுவதையும் அது எவ்வாறு பெண்களின் வளர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் எதிராக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டு உரையாற்றினேன்.
எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் உரையாற்றுகிறார்
அடுத்து ஆசிரியரைப் பற்றிய சிறப்புகளை எடுத்துக்கூறி அவருக்கான அறிமுக உரையை வழங்கினார் தோழர் தாயுமானவன். தோழர் வசந்தன் ஆசிரியருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறப்புரை ஆற்றினார்கள். அவருடைய உரையில் தமிழ்நாட்டில் இருந்து கல்வியால் உயர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு வந்து வாழும் தமிழர்களின் சிறப்பான வாழ்வைப் பாராட்டினார்.
ஒரு காலத்தில் எங்களை வரவேற்றவை பொன்னாடைகளல்ல – எதிர்ப்புகள்தான் வரவேற்றன. தந்தை பெரியாரை வரவேற்றவை – வசவுகளும் கற்களும்தான். ஆனால் இன்று திராவிட இயக்கத்தின் உழைப்பால் பலன்பெற்று, அதற்கான நன்றி உணர்வுடன் கூடியிருக்கும் உங்களைப் பார்க்கும் போது எனக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுகிறது அதனால் இங்கு வரும்போது எனக்கு வயது 92 திரும்பிச் செல்லும்போது 29 என்று குறிப்பிட்ட ஆசிரியர் இறுதி வரை அந்த உணர்வுப் பெருக்குடனே உரையாற்றினார்.
அருள்மொழி உரையாற்றுகிறார்
“நீங்களெல்லாம் கடல்கடந்து வந்து இவ்வளவு மகிழ்ச்சியோடு வாழ்வதைப் பார்க்கும்போது மிகுந்த உற்சாகமாக இருக்கிறது . ஆனால் எப்படி எதற்காக இங்கு வந்தீர்கள் என்பதில்தான் திராவிட இயக்கத்தின் வெற்றி இருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தமிழர்கள் மலேயா (மலேசியா) இலங்கை போன்ற நாடுகளுக்கு கூலிகளாக கங்கானிகளாக தோட்டத் தொழிலாளர்களாகச் சென்றார்கள். நாங்களெல்லாம் பிறப்பதற்கு முன்னால் 1929 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் நாகம்மையாருடன் மலேயா விற்குச் சென்று அந்தத் தொழிலாளர்களைச் சந்தித்தார். இலங்கைக்குச் சென்று அம்மக்களிடத்தில் உரையாற்றினார்.. இன்று இங்கு கூடியிருக்கும் நீங்கள் கல்வியால் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களை வாழ்த்துகிறோம், உங்கள் பெற்றோர்களைப் பாராட்டுகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆசிரியருக்கு தாயுமானவன் சால்வை அணிவிக்கிறார்.
“பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தினுடைய கொள்கையே ‘சகோதரத்துவமும் மானுடத் தத்து வமும்’ தான். தந்தை பெரியார், பாபாசாகேப் அம்பேத்கர் இருவரின் போராட்டங்களும் ‘பெண்ணுரிமை- மனிதநேயம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டதுதான்” என்றும், “பெண்ணடிமை நீங்க வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், பிறவி பேதம் நீங்க வேண்டும் என்பவைதான் தந்தை பெரியாரின் தத்துவங்கள்” என்றும் கூறிய ஆசிரியர் அதனையே மையக் கருத்தாகக் கொண்டு தன் உரையைத் தொடர்ந்தார்.
வசந்தன் ஆசிரியருக்கு நினைவுப் பரிசு அளிக்கிறார்
பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு பிறக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டதையும் அவற்றை எதிர்த்து போராடிதான் அவர்கள் உரிமையை அடைந்தார்கள். ஆயினும் முழுமையான உரிமைகளை இன்னமும் பெற முடியவில்லை என்ற உண்மை நிலையை எடுத்துரைத்தார். நாம் எப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறோம் என்பதை பெண்கள் மறந்துவிடக்கூடாது. மனுஸ்மிருதி விதித்த கொடுமையான நிபந்தனைகளில் இருந்து பெண்களை காப்பாற்றவும் ஜாதியால் ஒடுக்கப்பட்டோரை காப்பாற்றவும் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களும்தான் போராடினார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ஒரு தந்தையைப் போல் பெண்களுக்கு எடுத்துரைத்தார்.
சரவணன் இளங்கோவன் அருள்மொழிக்கு சிறப்பு செய்தார்
பெண்களின் வாழ்வுரிமைகளுக்காக தந்தை பெரியார் இயற்றிய தீர்மானங்களையும் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட உரிமைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தன் பதவியைத் துறந்ததையும் அதே நேரத்தில் அந்த சட்டத்தை எதிர்த்து முறியடிப்ப தற்குத் திட்டமிட்ட சங்கராச்சாரியாரின் சதியையும், பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தால் குடும்ப ஒழுக்கம் அழிந்து விடும் என்று சங்கராச்சாரி கூறிய தையும், ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய “ இந்து மதம் எங்கே போகிறது “ என்றநூலின் ஆதாரத்துடன் விளக்கிய ஆசிரியருடைய உரை யினை ஆழ்ந்த கவனத்துடன் கூட்டத்தினர் கேட்டனர்.
அருள்மொழிக்கு ஷீலா நினைவுப்பரிசு வழங்கினார்
மெல்பர்ன் நிகழ்ச்சியில் ஆசிரியரின் உணர்ச்சி மிகுந்த உரை பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்தது….
(தொடரும்)